பனை மரம் வெட்டத் தடை; இயற்கை விவசாயத்துக்கு சிறப்பு ஊக்கம்: புத்துயிர் தரும் தமிழக வேளாண் பட்ஜெட்!
தமிழ்நாட்டின் மாநில மரமான பனையை வெட்டத் தடை, நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்சி மையம் உள்பட விவசாயிகளை மகிழ்விக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழக வேளாண் பட்ஜெட் 2021.
திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள் நிறைவடையும் நாளில் சட்டசபை வரலாற்றில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதன் முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. உழவின்றி உழவுத் தொழில் இல்லை என்று உணர்த்தும் விதமாக ‘வேளாண்மை –உழவர் நலன்’ என்று பெயர் மாற்றம் செய்ததோடு இன்று வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டையும் அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
உரையைத் தொடங்கும் போதே இந்த பட்ஜெட்டை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு சமர்பித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது தமிழகம்.
தமிழக வேளாண் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? இங்கே பார்க்கலாம் :
- தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச்செய்து, தற்போது நிகர சாகுபடிப் பரப்பான 60% என்பதை 75%ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- பத்தாண்டுகளாக தரிசு நிலங்களாக உள்ள 11.75 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறைந்த நீல் செலவில் சாகுபடி செய்யக் கூடிய சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி மற்றும் பழப்பயிர்கள் சாகுபடி செய்து நிகர சாகுபடி 75 %மாக உயர்த்தப்படும்.
- 10 லட்சம் ஹெக்டேர் இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்து அண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
- உணவு தானியங்கள், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தரமான விதை, நவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வேளாண் ஆக்கத் திறனில் முதல் 3 இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும்.
- வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துடிறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, எரிசக்தித்துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- மானாவரி விவசாயத்தை ஊக்குவிக்க ஒரு தொகுப்புக்கு 10 ஹெக்டேர் வீதம் நிலங்களைக் கண்டறிந்து 3 லட்சம் ஹெக்டேரில் பண்ணைக்குட்டைகள், வயல்வெளி வரப்புகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள், பயறு மற்றும் எண்ணெய் வித்துக்கு தரமான விதைகளும், உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படும்.
- இயற்கை வேளாண் தொடர்பான பணிகளை சிறப்புக் கவனத்துடன் செயல்படுத்த ‘வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப்பிரிவு’ உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தும் இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆண்டில் செயல்படுத்தப்படும்.
- இயற்கை எருவைப் பயன்படுத்தும் விவசாயிகளின் எண்கள் வட்டாரந்தோறும் தயாரிக்கப்பட்டு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ் அளிக்கப்படும். இயற்கை இடுபொருட்களின் தரத்தை உறுதி செய்ய தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்படும். செயற்கை உரமிட்டு வளர்த்து இயற்கை வேளாண்மை என்கிற பெயரில் சந்தைப்படுத்தி அதிக விலைக்கு விற்கப்படுவது கண்காணிக்கப்படும்.
- தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, திருவள்ளூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
- வேளாண் பட்டதாரிகளைத் தொழில்முனைவோராக்கத் தேவையான பயிற்சிகள், வேளாண் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்போடும், முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடும் நிகழ்த்தப்படும்.
- ரூ.5 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிதி ஒதுக்கீட்டில் 2,500 இளைஞர்களுக்கு முதல்கட்டமாக ஒட்டுகட்டுதல், பதியன் போடுதல், பசுமைக் குடில் அமைத்தல், தோட்டக்கலை இயந்திரங்கள் இயக்குதல், வேளாண் இயந்திரங்கள் பகுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
- பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் மதிப்பு கூட்டுப் பொருட்களை வேளாண் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நீர் நிலைகளின் காவலனான பனை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினை தடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். தவிர்க்க முடியாத சூழலில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படும்.
- தமிழகத்தின் முதற்பயிரான நெற்பயிரின் உற்பத்தி 19 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொண்டு 75 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கு எட்டப்படும்.
- நெல் கொள்முதல் விலையானது ஒரு குவிண்டால் சன்ன ரகம் ரூ.2060 ஆகவும், சாதாரண ரகத்திற்கு ரூ.2015 ஆகவும் நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படும்.
- சிறு, குறு, தானியப் பயிர்களின் பரப்பளவு உற்பத்தித் திறனை அதிகரிக்க தரமான விதை விநியோகம், இயந்திர விதைப்பு, உள்ளிட்ட உத்திகளைக் கொண்ட சிறுதானிய இயக்கம் கடலூர், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருப்ழுர், விருதுநகர், திண்டுக்கள், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
- கோத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறு தானியங்களைப் பதப்படுத்த மையம் அமைக்கப்படும்.
- பயறு வகைகளை நெல் விவசாயிகள் வரப்புகளில் வளர்க்கவும், ஊடு மற்றும் கலப்பு பயிராக வளர்க்கவும் விதை மானியம் அளிக்கப்படும். பயறு வகைகளை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முல் செய்து பொதுவிநியோக முறையிலும், மதிய உணவுத் திட்டத்திலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தென்னைச் சாகபடிப் பரப்பினை அதிகிரிக்க 17 லட்சம் தரமான தென்னைக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். தென்னந்தோப்புகளில் பாசன நீர் பற்றாக்குறையைப் போக்க 20 ஆயிரம் க்டேரின் சொட்டு நீர்ப்பாசன முறை நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும்.
- வேளாண்மையின் சிறப்பை அடுத்த தலைமுறையினர் உணரும் விதமாக சென்னையில் வேளாண் கருவிகள், பாரம்பரியக் கால்நடைகள் போன்றவத்திற்ன புகைப்படங்களுடன் தனியாக வேளாண்மைக்கென தனியாக ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- ‘வேளாண் உபகரணங்கள் தொகுப்பு’ அரை லட்சம் விவசாயிகளுக்கு 15 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
- இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட்டு பரிசளிக்கப்படும். இதற்காக ஆறு லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஏரி, குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஆட்சியரின் அனுமதி பெற்று எடுத்து விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தும் வகையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
- பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும், இதற்காக 2327 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கரும்பிற்கு வழங்கப்பட்டு வரும் உற்பத்திக்கான ஊக்க்ததொகை டன் ஒன்றிற்கு 42 ரூபாய் 50 காசு வீதம் சர்க்கரை ஆலைகளுக்க வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- பழங்கள் உற்பத்திக்காக 3 லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டராக உயர்த்துவதற்கத் தேவையான 80 லட்சம் பல்வகை பழச்செடிகள், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலாப்பயிருக்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல்,ஏற்றுமதி என அனைத்து செயல்பாடுகளும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- கடலூர் மாவட்டம் வடலூரில் புதிதாக தோட்டக்கலைப் பூங்கா ஒரு கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
- சூரிய சக்தி அதிக அளவில் கிடைப்பதனால் அதனை மின்சக்தியாக மாற்றி சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 10 குதிரைத்திறன் வரையிலான 5 ஆயிரம் பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் நிறுவ 114 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- 1000 விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க ஒரு பம்பு செட்டிற்கு ரூ.10,000 மானியம் வீதம் 1 கோடி ரூபாய் செலாவில் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு.
- உழவர் சந்தைகளை உயிர்பிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் எடுக்கப்படும்.
- ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் குளிர்பதனக் கிடங்குகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
- சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரிசார்த்த முறையில் முதற்பட்டமாக 30 நடமாடும் காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற இளைஞர்களுக்கு 40 % மானியம் அல்லது ரூ- 2 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
- கொல்லிமலை மிளகினைப் பதப்படுத்தி பரிசோதனைக்கூடம், உலர்களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையம் காரவள்ளி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- முருங்கையை ஏற்றுமதி செய்வதக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும். முருங்கை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் சேகரிப்பட்டு ஏற்றுமதி சந்தை இணைப்புகள் வலுப்படுத்தப்படும்.
- சென்னை கொளத்தூரில் ‘நவீன வேளாண் விற்பனை மையம்’ அமைக்கப்படும்.
- கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற பழந்தன்மை பொருந்திய சிறப்பு விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை.
- தமிழ்வழி மாணவர்களை ஊக்கப்படுத்த கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பு தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்படும்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீவனுரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்படும்.
- ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும்.
- கோவையில் இயங்கி வரும் வேளாண்மைத்துறை மேம்படுத்தப்பட்டு “நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்” என பெயர் மாற்றம் செய்யப்படும்.
அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு ஆழமான பார்வையுடன் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், நீர் வள ஆதாரம், ஊரக வளர்ச்சி, உணவு, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டுவளர்ச்சித்துறை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வேளாண்மை துறைக்கு மானியக்கோரிக்கைகளின் கீழ் 34 ஆயிரத்து 220 கோடியே 64 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.