சுதந்திர தின விழாவில் சாதனை புரிந்தவர்களுக்கு கௌரவம்: யார் யாருக்கு என்னென்ன விருது?
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்தாண்டு கொரோனாவுக்கு எதிரானப் போரில் போராடிய பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 15) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டையில் கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு சுதந்திர வாழ்த்துக்களைக் கூறிய அவர், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உலகையே முடக்கிப் போட்டுள்ளது. எனவே முன்களப் பணியாளர்களாக கொரோனாவிற்கு எதிராகப் போராடியவர்கள் பலரது பெயர் இம்முறை விருதுகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
கொரோனா காலத்தில் 6 துறைகளைச் சேர்ந்த 33 முன்களப் பணியாளர்களுக்கு மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் தங்கமுலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதில் மருத்துவ துறையில் 9 பேருக்கும், காவல் துறையில் 3 பேருக்கும், நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் 6 பேருக்கும், தீயணைப்பு துறையில் 3 பேருக்கும், வருவாய் துறையில் 3 பேருக்கும், கூட்டுறவு உணவு பாதுகாப்பு துறையில் 3 பேருக்கும், ஊரக வளர்ச்சி துறையில் 6 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
டாக்டர் அப்துல்கலாம் விருது:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு மிகு பேராசிரியர் லட்சுமணன் அவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. தனி ஒரு மனிதனாக இளம் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட உலகத் தரத்திலான நேரற்ற இயக்கவியலுக்கான ஆராய்ச்சி குழுவை உருவாக்கியவர் பேராசிரியர் லட்சுமணன். இளைஞர்களுக்கு ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி, சிறந்த முன்மாதிரியாக திகழ்வதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்பனா சாவ்லா விருது
மதுரை அனுப்பானடி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி கொரோனாவால் மறைந்த டாக்டர் சண்முகப்பிரியாவின் சேவையை பாராட்டி அவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது கணவர் சண்முக பெருமான் பெற்றுக் கொண்டார்.
எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த போதும், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளராக துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றியவர் சண்முகப்பிரியா. கொரோனா 2-வது அலையில் 582 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்று 10 ஆயிரத்து 961 நபர்களிடம் கொரோனா பரிசோதனை எடுக்கும் பணி மேற்கொண்டவர். மேலும், வீடுகளில் தனிமையில் இருந்த 52 கொரோனா நோயாளிகளின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளித்துள்ளார்.
கடந்த மே மாதம் தமிழகத்தில் கொரோனா 2ம் அலை உச்சத்தில் இருந்த போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் சண்முகப்பிரியா. அவரது மருத்துவச் சேவையைக் கௌரவிக்கும் வகையில் 2021-ம் ஆண்டுக்கான துணிவு மற்றும் வீர சாகச செயல் திறனுக்கான கல்பனா சாவ்லா விருது இன்று வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் நல் ஆளுமை விருது:
இம்முறை முதலமைச்சரின் நல் ஆளுமை விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.
1. கிண்டி அரசு கொரோனா மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் நாராயணசாமி
கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நிலையத்தை இரண்டு வார காலத்தில் முழு நேர கொரோனா நோயாளிகள் சிறந்த மருத்துவமனையாக மாற்றியவர் பேராசிரியர் நாராயணசாமி. அங்கு 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. எனவே பேராசிரியர் நாராயணசாமிக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
2. மாநிலக் கல்லூரி பேராசிரியர் ராவணன்
காது கேளாத, வாய் பேச இயலாத, பார்வை திறனற்ற மாணவர்களின் கல்வி தரம் மேம்பட சிறப்பு முயற்சி மேற்கொண்டவர் பேராசிரியர் ராவணன். இதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
3. சேப்பாக்கம் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன்
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த பார்த்திபன் நில எடுப்புக்காக முறையை மின் தொகுப்பினால் எளிமையாக நில எடுப்பாக இழப்பீட்டில் வெளிப்படை தன்மையை கொண்டு வந்தது மற்றும் நில மாற்றம் தொடர்பாக நடவடிக்கைகளை எளிமை படுத்தியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த தொண்டு நிறுவனம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறப்பாக சேவை புரிந்ததற்கான விருதை திருச்சி புத்தூரில் உள்ள ஹோலிகிராஸ் சர்வீஸ் தொண்டு நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு இவர்கள் பயிற்சி வழங்கி உள்ளனர்.
நல் ஆளுமை விருது
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த டாக்டர் பத்மபிரியாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியதற்காக நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. இவர் சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 653 முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச மருத்துவ சிகிச்சை செய்தவர்.
கொரோனா தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த சேவை செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் திருநெல்வேலி பழவூரை சேர்ந்த மரிய ஆலாசியஸ் நவமணியும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியதால் அவருக்கும் விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்கியதற்காக சென்னை அய்யப்பன் தாங்கலில் இயங்கி வரும் வீ.ஆர்.யுவர்லாய்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வென்றுள்ளது.
அவ்வையார் விருது
சமூக நலத்துக்காக மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகளில் அவ்வையார் விருது, ‘ஆச்சி மசாலா’ டாக்டர் சாந்தி துரைசாமிக்கு வழங்கப்பட்டது.
44 ஆண்டுகளாக சக்தி மசாலா சமையல் பொடி உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வரும் சாந்தி துரைசாமி, பல்வேறு சமூக நலன் சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். பெண்களுக்காக சிறந்த முறையில் தொண்டாற்றி வருவதை கௌரவிக்கும் வகையில் 2021-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அவ்வையார் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மூன்றாம் பாலினம் விருது
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானுவுக்கு சிறந்த மூன்றாம் பாலினம் விருது வழங்கப்பட்டது. திருநங்கையர்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் இவரின் சேவையை பாராட்டி இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
மாநில இளைஞர் விருது
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது இந்த ஆண்டு ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த அரவிந்த் ஜெயபால், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பசுருதீன், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமலா ஜெனிபர் ஜெயராணி, சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த உள்ளாட்சி அமைப்பு விருது
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் இந்த ஆண்டு கீழ்கண்ட உள்ளாட்சிகளுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலை மற்றும் விருது அளிக்கப்பட்டது. சிறந்த நகராட்சியில் முதல் பரிசு ஊட்டி (ரூ.15 லட்சம்), 2-ம் பரிசு திருச்செங்கோடு (ரூ.10 லட்சம்), 3-ம் பரிசு சின்னமன்னூர் (ரூ.5 லட்சம்) ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பேரூராட்சிகளில் முதல் பரிசு திருச்சி மாவட்டம் கள்ளக்குடி (ரூ.10 லட்சம்), 2-ம் பரிசு கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம் (ரூ.5 லட்சம்), 3-ம் பரிசு சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் (ரூ.3 லட்சம்) ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
மருத்துவமனைகளுக்கு விருது
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு சிறப்பாக செயல்பட்ட சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கடலூர் அரசு தலைமை மாவட்ட மருத்துவமனைக்கும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள அரசு சமூக சுகாதார நிலையத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற அனைவரும் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதேபோல் கொரோனா தடுப்பு வீரர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தகைசால் தமிழர்
தமிழகத்துக்கும், தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் விருதை உருவாக்கி, வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்' விருதுக்கு சமீபத்தில் 100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். பொது வாழ்க்கையில் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த விருதினை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரடியாக சென்று வழங்கினார். விருதுடன் சங்கரய்யாவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். அந்தத் தொகையை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மு.க.ஸ்டாலினிடம் சங்கரய்யா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.