சொகுசு பென்ஸ் காரில் பயணம் செய்த சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தது எப்படி? - YS தமிழ் Explainer
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி காரில் பயணித்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு இது தான் காரணம் என சில தகவல்கள் இணையவெளியில் உலவி வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில் சொகுசு காரான மெர்சிடிஸ் பென்சில் பயணித்த அவர் உயிரிழந்தது எப்படி என்பதை விரிவாக அலசுவோம்.
சைரஸ் மிஸ்திரி யார்? கடந்த 1968 ஜூலை 4-ம் தேதி மும்பையில் பிறந்தவர். அவருக்கு வயது 54. மும்பை மற்றும் லண்டனில் பயின்றவர். தங்களது குடும்பத் தொழிலில் சில காலம் பணியாற்றி வந்தார். கடந்த 2006 வாக்கில் டாடா குழுமத்தில் அவர் இணைந்தார். 2013 வாக்கில் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016 வரையில் அந்த பொறுப்பை அவர் கவனித்து வந்தார் மிஸ்திரி. டாடா குடும்பத்தை சாராத நபரான அவர் அதன் தலைவராக இயங்கும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு ரோஹிகா சாக்லா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் தலைவர் பதவியில் இருந்து நீங்கினார்.
விபத்தில் சிக்கிய சைரஸ் மிஸ்திரி
விபத்து: சைரஸ் மிஸ்திரி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. அவர் உட்பட காரில் மொத்தம் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
ஜஹாங்கிர் தின்ஷா பண்டோல், அவரது சகோதரர் டாரியஸ் பண்டோல் மற்றும் டாரியஸ் மனைவியும், மருத்துவருமான அனாஹிதா பண்டோல். ஃபர்ஸ்ட்-ஜெனரேஷன் மெர்சிடிஸ் பென்ஸ் GLC SUV சொகுசு காரில் அவர்கள் பயணித்துள்ளனர். காரை அனாஹிதா ஓட்டி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து அகமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் செப்டம்பர் 4-ம் தேதி மதியம் நடைபெற்றது. சம்பவ இடத்திலேயே பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி உயிரிழந்து விட்டதாக தகவல். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜஹாங்கிர் உயிரிழந்துள்ளார். அவரும் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்ததாக தகவல்.
காரை ஓட்டி வந்த அனாஹிதா மற்றும் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது கணவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிவேகமாக காரை இயக்கியது மற்றும் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது காரின் கண்ட்ரோல் இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.
ஏர் பலூன் வேலை செய்யவில்லையா?
கார்களை பொறுத்தவரையில் சீட் பெல்ட் அணிந்திருந்தால் தான் ஏர் பலூன் வெளிவரும். பொதுவாக பென்ஸ் போன்ற சொகுசு கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சென்சார் சொல்லும். அதன்படி, முன்பக்க சீட்டில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பார்கள். இல்லையெனில், அது குறித்த அலர்ட் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக சொகுசு காரில் இந்த எச்சரிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்றும், டிரைவர் மற்றும் முன்னால் அமரும் பயணி சீட் பெல்ட் அணியும்வரை ஓயாமல் எச்சரித்துக்கொண்டே இருக்கும் என அந்த காரின் உரிமையாளர்களிடம் பேசியதில் தெரிந்து கொள்ள முடிந்தது.
அதே போல, மிஸ்திரி பயணித்த காரின் பாதிப்பை பார்த்து அந்த கார் மூன்று இலக்க எண்களில் வேகமாக இயக்கப்பட்டிருக்லாம் எனவும் அவர்கள் சொல்கின்றனர். அவர்கள் சொன்னது போல அந்த கார் மணிக்கு சுமார் 135 கிலோ மேட்டர் வேகத்தில் சென்றதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
சைரஸ் மிஸ்திரி பயணித்தது சொகுசு கார். அதனால் அந்த காரில் பின் இருக்கையிலும் ஏர் பலூன் வசதி உள்ளது. இருந்தாலும் அவர் சீட் பெல்ட் அணியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே இந்த விபத்தில் அவரது முகம் மற்றும் உடல் முன்பக்க இருக்கையில் மோதி காயம் அடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து. அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தால், ஏர் பலூன் இயங்கி இந்த விபத்தில் இருந்து காயங்களுடன் உயிர் தப்பி இருக்கலாம் எனவும் சில வல்லுனர்கள் சொல்கின்றனர்.
பின்பக்கம் பயணிகள் சீட் பெல்ட் அணிவது அவசியம் ஏன்?
கடந்த 2019 வாக்கில் வெளியான சர்வே முடிவு ஒன்றின் படி, வெறும் 7 சதவீதம் பேர் தான் பின்பக்க இருக்கையில் அமரும் போதும் சீட் பெல்ட் அணியும் வழக்கத்தை கொண்டுள்ளதாக தெரிகிறது.
சுமார் 6306 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதில், வெறும் 27.7 சதவீதம் பேருக்கு தான் பின்பக்க இருக்கையில் அமர்ந்தாலும் சீட் பெல்ட் அணிய வேண்டுமென்ற விவரத்தை அறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு சீட் பெல்ட் அணிவதன் அவசியம் தெரியவில்லை எனவும் அதே போல சீட் பெல்ட் அணியாமல் இருப்பவர்களுக்கு விபத்தின் போது உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காரின் பின் இருக்கையில் அமரும் போதும் கூட சீட் பெல்ட்டை அணிய முடிவு செய்துள்ளேன். இந்த உறுதிமொழியை அனைவரும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் குடும்பத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்,” என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, வாகனங்கள் இயக்கத்தில் இருக்கும் போது சீட் பெல்ட் அணிவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என விதிகள் சொல்கின்றன.
பலரும் மிஸ்திரியின் அகால மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Induja Raghunathan