ரூ.50,000 முதலீட்டில் 10 கோடி ரூபாய் பிசினஸை இந்த இல்லத்தலைவி கட்டமைத்தது எப்படி?
ஜோதி வாத்வா ஆரம்ப காலத்தில் தனி ஒருவராக தொடங்கிய ஆன்லைன் பிசினஸ் தொழிலில், இப்போது 30 பேர் கொண்ட ஊழியர் குழுவாக உயர்ந்து லாபத்துடன் செயல்படுகிறது.
2010-ம் ஆண்டு. டெல்லியில் வசிக்கும் இல்லத்தலைவி ஜோதி வாத்வா இரண்டரை வயது பெண் குழந்தைக்குத் தாயும்கூட. குடும்பத்துக்கு வருவாய் ஈட்டும் ஒற்றை நபரான அவருடைய கணவர் அன்ஷுல் பன்சால் ஒருநாள் வீட்டுக்குத் திரும்பியதும், தனது இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் வேலையை விட்டுவிட்டு, புதிதாக சொந்தத் தொழில் தொடங்க முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார். அதைக் கேட்டவுடன் ஜோதி 'குழப்ப நிலை'யில் ஐக்கியமாகிறார்.
புதிய தொழிலில் ரிஸ்க் எடுப்பதற்கு கணவர் தயாராகும் சூழலில், தானும் நிதி சார்ந்து பங்காற்றிடத் தொடங்க வேண்டும் என்று ஜோதி உணர்கிறார்.
"நான் அப்போது ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன். அதேவேளையில், என் மகளை ஒரு ப்ளே ஸ்கூலில் சேர்க்கவும் மனமில்லை. எனவேதான் வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்வதற்கான வழிகளைத் தேடத் தொடங்கினேன்," என்று கூறும் ஜோதி,
2006-ல் திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு எம்.என்.சி. நிறுவனத்தில் எச்.ஆர் மற்றும் அட்மின் துறையில் மூன்று ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்.
ஆன்லைன் தொழில்கள் மூலம் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என்று ஜோதிக்கு யோசனை கூறிய அவருடைய உறவினர்கள் சிலர், ஆன்லைனில் பாரம்பரிய சேலைகளை விற்பது மிகுந்த வரவேற்பைத் தரக்கூடும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்தத் தொழில் வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறியத் தொடங்கிய ஜோதி, தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரையிலும் சந்தைப் போக்குகளை ஆய்வு செய்தார். வாடிக்கையாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள், அவர்கள் என்னவெல்லாம் வாங்குகிறார்கள் என்பன குறித்து புரிந்துகொள்ள முயற்சித்தார். மேலும், ஜீரோ பட்ஜெட் முதலீட்டில் ஆன்லைன் தொழிலைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அலசினார்.
"என்னிடம் வெறும் 50,000 ரூபாய் மட்டுமே இருந்ததால், மிகுந்த கவனத்துடன் தெரிவு செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்," என்கிறார் அவர்.
அன்ஷுலின் சேமிப்பில் ரூ.1 லட்சம் இருந்தது. அந்தத் தொகையை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை தனது தொழிலுக்கும், இன்னொரு பகுதியை தன்னுடைய மனைவிக்குத் தொழில் தொடங்கவும் அளித்தார். அன்ஷுல் ஐ.டி சேவைகள் தொழில் மீது கவனம் செலுத்த, ஜோதியோ பாரம்பரிய சேலைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் தொழிலில் தடம் பதித்தார்.
2015-ல் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து நிர்யாத் ஸ்ரீ விருதைப் பெற்றார், 'சன்ஸ்க்ரிட்டி வின்டேஜ்' (Sanskriti Vintage) நிறுவனர் ஜோதி வாத்லா.
ஜோதி வழி... தனி வழி!
ஜோதி தனது ஆய்வின்போது, மக்களிடையே அசல் பட்டுத் துணிகளுக்குத் தேவை இருப்பதை அறிந்துகொண்டு, அதற்கான தேடலில் ஈடுபட்டார்.
"நான் பல்வேறு கைத்தறி சேலைகளைக் கண்டேன். அசல் பட்டுத் தயாரிப்புகள் குறித்து அறிந்தபோது மிகுந்த உற்சாகம் அடைந்தேன். என்னால் இவற்றை நிச்சயம் விற்பனை செய்யமுடியும் என்று நினைத்தேன். எனக்கு ஆர்வமும் நம்பிக்கையும் வெகுவாகக் கூடியது," என்கிறார்.
முதல் முறையாக தொழில்முனைவராக களமிறங்கியவர், சில வகை தயாரிப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து இபே-வில் அப்லோடு செய்தார். ஆம், சன்ஸ்க்ரிட்டி வின்டேஜ் பிறந்தது. ஆரம்பத்தில், ஆன்லைனில் தமது தயாரிப்புகளை எப்படிப் பட்டியலிடுவது, அவை குறித்து எப்படி வசீகரமாக விவரிப்பது என்பது பற்றிய தடுமாற்றங்கள் இருந்தன. ஆனால், போகப்போக ஜோதிக்கு எல்லாமே கைவந்த கலையானது.
ஆரம்ப காலத்தில் ஊழியர்கள் எவருமின்றி ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டதால், போஸ்டல் சர்வீஸ்கள் மூலமாக ஷிப்பிங் செய்வதற்கு ஜோதியே செல்ல வேண்டிய நிலை. குழந்தையை தோளில் சுமந்தபடி இரண்டு - மூன்று மணி நேரம் தினமும் வரிசையில் நின்று பார்சல்களை அனுப்பினார்.
அப்போது, ஆன்லைனில் அசல் பட்டு எம்ப்ராய்டு சேலைகளே அதிகம் விற்கப்பட்டன; யாருமே கைத்தறி எம்ப்ராய்டு சேலைகள் மீது கவனம் செலுத்தவில்லை. அதைக் கையிலெடுத்துதான் ஜோதியை மற்ற விற்பனையாளர்களிடம் இருந்து தனித்துக் காட்டியது. இதுகுறித்து அவர் விவரிக்கும்போது,
"அந்த நேரத்தில் யாருமே இந்த வகைத் தயாரிப்புகளை விற்க முன்வராததுதான் எங்களுக்கு உதவியாக இருந்தது. அப்போதெல்லாம் பழைய பட்டு சேலைகளை வாங்கி, அவற்றைப் போட்டோ எடுத்து, குறைந்த லாபத்தில் விற்பதில்தான் பலரும் கவனம் செலுத்தி வந்தனர். அவர்கள் ரூ.400-க்கு சேலைகளை வாங்கி ரூ.600-க்கு விற்று வந்தனர்.
என்னால் இந்த விலை விளையாட்டில் ஈடுபட முடியாது என்பதை அறிந்தேன். எனவே, ப்ரீமியம் கேமில் களமிறங்கினேன். மிக அழகான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, நல்ல போட்டோகிராஃபி, லைட்டிங்கில் முதலீடு செய்தேன். பலரும் 2-மெகா பிக்ஸல் போன்களில் போட்டோ எடுத்து பதிவேற்ற, நானோ டிஎஸ்எல்ஆர் கேமராவை நாடினேன்," என்கிறார்.
இ-பே தளத்தில் சன்ஸ்க்ரிட்டி ஆரம்பித்தபோது, மார்க்கெட்டிங்கு எதுவும் செலவிடப்படவில்லை. அந்தத் தளத்தில் மக்கள் தேடும்போது, டாப் லெவலில் பட்டியலிடப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு ஜோதி மெனக்கெட்டார். அதன்பின், மிக விரைவிலேயே 10-15 சதவீத லாபத்துடன், ஒரு சேலை $15-$40 என்கிற விலையில் தினமும் 500 முதல் 600 சேலைகள் வரை விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக, சந்தையில் 40-50 சதவீதத்தை விரைந்து வசப்படுத்தினார் ஜோதி.
புதிய பாதையில் பயணம்
அதேவேளையில், மூன்று - நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இ-பே சந்தையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. "நாங்கள் டாப்பில் பட்டியலிடப்பட்டாலும்கூட பெரிதாக எந்தப் பலனும் இல்லை. 2013-ல் அமேசான் டாட் காமில் பட்டியலிடத் தொடங்கினோம். (அப்போது இந்தியாவில் அமேசான் டாட் காம் இல்லை). சில முன்முயற்சிகளை எடுத்தப் பிறகுதான் தெரிந்தது, அது எங்களது தற்போதைய தயாரிப்புகளைப் பட்டியலிடுவதற்கான இடமில்லை என்று. எனவே, புதிதாக ஆயத்த ஆடைகள் மற்றும் ஃபேஷன் ஜுவல்லரி வகைகளைத் தொடங்கினோம்," என்கிறார் ஜோதி.
இந்தியாவில் அமேசான் தொடங்கப்பட்டபோது, ஜெஃபைர்ர் (Zephyrr) எனும் பெயரில் ஃபேஷன் ஜுவல்லரியை ஜோதி ஆரம்பித்தார். அது, அமேசான் தளத்தில் வெகுவிரைவில் 'பெஸ்ட் செல்லர்' பட்டியலுக்கு முன்னேறியது.
சொந்தமாக குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் மூலம் பாரம்பரிய சேலைகளை போதுமான லாபத்தில் விற்கும் தொழிலில் உறுதியாகத் தடம் பதித்தார். முதல் ஆண்டு தொழிலை நடத்துவதற்காக ரூ.50,000-ஐ முதலீட்டுடன் தொடங்கிய ஜோதி இப்போது ஆண்டு வர்த்தகம் ரூ.10 கோடி எனும் அசாத்திய நிலையை எட்டியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் தனி ஒருவராக தொழிலில் இயங்கி வந்த ஜோதி இப்போது 30 பேர் கொண்ட ஊழியர் குழுவை வைத்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களே!
2015-ல் ஜோதிக்கு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து ’நிர்யாத் ஸ்ரீ’ விருது கிடைத்தது. இது, இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் ஏற்றுமதி தொழிலில் மிகச் சிறப்பான செயலாற்றிய 50 பேருக்கு வழங்கி கெளரவிக்கப்படும் விருதாகும்.
அனைத்து இ-காமர்ஸ் தளங்களிலும் இப்போது சிறப்பிடம் பெற்றுள்ள சன்ஸ்க்ரிட்டி, தனது தயாரிப்புகளை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்வதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தன் குடும்ப வருமானத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய ஒரு பெண் இன்று பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளார்.