தூக்கி எறியும் சமையலறைக் கழிவுகளை செடிகளாக வளர்ப்பது எப்படி?
நாம் சமையலறையில் சமையல் செய்யும்போது பயனற்றது என தூக்கியெறியும் எத்தனையோ கழிவுப்பொருட்களை பயனுள்ளதாக மாற்றமுடியும்.
ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் ஏராளமான கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவை வெறும் கழிவுகள் அல்ல. நாம் நினைத்தால் இந்த முற்றுப்புள்ளியைத் தொடக்கப் புள்ளியாக மாற்றமுடியும்.
நாம் சமையலறையில் சமையல் செய்யும்போது பயனற்றது என தூக்கியெறியும் எத்தனையோ கழிவுப்பொருட்களை பயனுள்ளதாக மாற்றமுடியும். அதாவது, சமையலறைக் கழிவுகளைக் கொண்டு புதிய செடியை வளர்க்கமுடியும்.
செடிகளாக வளரும் சமையலறை கழிவுகள்!
அந்த வகையில் சமையலறையில் காய்கறிகளை நறுக்கும்போதோ அல்லது தோல் சீவும்போது நாம் தூக்கியெறியும் சில பொருட்களை எப்படி பயனுள்ள செடிகளாக மாற்றலாம் என்று பார்க்கலாம்.
1. வெங்காயத்தாள் – நாம் சில குறிப்பிட்ட டிஷ் செய்யும்போது அதற்கு ஸ்பிரிங் ஆனியம் பயன்படுத்தினால் மட்டுமே அதன் அசல் சுவையைக் கொண்டு வரமுடியும். இன்றைய யூட்யூப் யுகத்தில் நமக்கு ரெசிபிக்களும் எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. அதேபோல், அதற்குத் தேவையான பொருட்களையும் தேடிப்பிடித்து வாங்கிவிட முடிகிறது. ஸ்பிரிங் ஆனியனை வாங்கும் சிலர் அந்த இலையை மட்டும் பயன்படுத்திவிட்டு மிச்சத்தைத் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதிலிருக்கும் வெங்காயத்தை சுமார் ஒன்றரை இன்ச் அளவிற்கு கட் செய்து தொட்டியில் நட்டுப் பாருங்கள். பச்சை பசேல் என்று வெங்காயத் தாள் முளைத்துவிடும்.
2. புதினா – புதினா சாதம், சட்னி, தொகையல் என்பதோட நிறுத்திக்கொள்ளாமல் கமகமக்கும் பிரியாணி செய்தாலும்கூட அதன் மசாலா வாசனைகளைத் தாண்டி புதினாவின் மணம் தனியாக தெரியும். இந்த புதினா இலைகளைப் பறித்து நாம் பயன்படுத்தினாலும் அதன் தண்டை தூக்கியெறிந்துவிடுகிறோம். அப்படி செய்யாமல் புதினா தண்டை எடுத்து ஒரு கண்ணாடி டம்பரில் தண்ணீரில் வைத்துப்பாருங்கள். சில நாட்களில் இதில் வேர் வந்துவிடும். அதன் பிறகு இதை தொட்டியில் நட்டு வைத்தால் புதினா செடி முளைத்துவிடும்.
3. இஞ்சி – டீ, சட்னி, பொங்கல் போன்றவற்றைத் தயாரிக்கும்போது இஞ்சியைக் கட்டாயம் பயன்படுத்துவோம். குறைந்த அளவில்தான் வாங்குவோம் என்றாலும் நாள்பட பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது கெட்டுப்போய்விடும். இதை தூக்கியெறிவதற்கு பதிலாக ஒரு தொட்டியில் நட்டு வைக்கலாம். இதிலிருந்து இஞ்சி கிடைக்கும்.
4. தக்காளி - விதைகளுடன்கூடிய பல பொருட்களை நாம் சமையலறையில் தூக்கி எறிவதுண்டு. அதில் முக்கியமான ஒரு பொருள் என்றால் அது தக்காளிதான். எவ்வளவுதான் நாம் பாதுகாப்பாக தக்காளியை சேமித்து வைத்தாலும் ஒன்றிரண்டு தக்காளியாவது கெட்டுப்போய்விடும் அல்லது நசுங்கிவிடும். இவற்றைத் தூக்கியெறியாமல் தொட்டியில் விதைத்து வைக்கலாம். சில நாட்களிலேயே தக்காளி செடி முளைத்துவிடும். முறையாக பராமரித்து வந்தால் இவற்றில் தக்காளி விளையும்.
5. குடைமிளகாய் – குடைமிளகாயை நாம் சமையலுக்குப் பயன்படுத்தும்போது அதன் விதைகளைக் கட்டாயம் தூக்கி எறிந்துவிடுவோம். இந்த விதைகளை சமையலுக்குப் பயன்படுத்த முடியாது என்பதால் இதை நறுக்கும்போது விதைகளை நீக்கிவிடுவோம். இந்த விதைகளை தொட்டியில் விதைத்தால் விரைவிலேயே செடி முளைத்துவிடும்.
மேலே குறிப்பிட்ட அத்தனையும் நான் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்கள்தான். இனி இவற்றைக் கழிவுகளாகத் தூக்கியெறியாமல் தொட்டியில் நட்டு வைத்து புத்துயிர் கொடுப்போம்.
வேளாண் கழிவுகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதாக கோவை ‘Buyofuel’ அறிவிப்பு!