முகக் கவசத்தை வீட்டில் தயாரிப்பது எப்படி?
பருத்தித் துணியில் வீட்டிலே எவ்வாறு முகக்கவசத்தை தயாரிப்பது என்ற விரிவான வழிகாட்டிக் கையேடை வெளியிட்டுள்ளது முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாய் பரவிவரும் நிலையில், நோய்க்கான எந்தவொரு அறிகுறிகள் இல்லாதவர்களும், சுவாசப் பிரச்சினைகள் இல்லாதவர்களும் நோய்த் தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, வீட்டிலே முகக்கவசத்தை தயாரித்துப் பயன்படுத்த தயாரிப்பு முறையை விரிவாக விளக்கும் கையேட்டை வெளியிட்டுள்ளது முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்.
கோவிட்- 19 தொற்றுநோய், உலகளவில் 80,000-க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளது மற்றும் 10லட்சத்துக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது. இந்தியாவில், இந்நோய் பல உயிர்களைக் கொன்றுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகியுள்ள போதிலும், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைக்கு வெளியில் நடமாடிக் கொண்டு இருக்கின்றனர்.
எனவே, வெளியில் செல்லும் பொதுமக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணியவேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவுவதற்கான முதன்மை பாதை சுவாசத் துளிகளாகும். எனவே, முகக்கவசம் கொண்டு மூக்கு, வாயை மூடுவதன் மூலம் வைரஸ் சுவாசக்குழாய்க்குள் செல்வதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
அதற்காக மக்கள் வீட்டிலே முகக்கவசத்தினை எவ்வாறு தயாரிக்கவேண்டும் என்ற விரிவான கையேட்டை முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆலோசனையில்,
நோய் தொற்றலுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லாத மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது வீட்டில் தயாரித்த முகக்கவசங்களைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், சுகாதார ஊழியர்கள் மற்றும் கோவிட் -19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் பாதுகாப்பு மிகுந்த N95 முகக்கவசங்களை அணிய அறிவுறுத்தியுள்ளது.
“சமூக விலகலும், தனிப்பட்ட சுகாதாரமுமே கோவிட்- 19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான சிறந்த மந்திரங்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். பொது மக்கள் வீட்டிலே தயாரித்த முகக்கவசங்களை அணிவதால் ஏற்படும் பலன்களை சில நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. வீட்டில் தயாரிக்கப்படும் இத்தகைய முகக்கவசங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதற்கான ஒரு நல்ல முறையாகும்,” என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்ட கையேட்டில் குறிப்பிட்டுள்ளது.
தேவை திடீரென அதிகரித்ததால், இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் முகக்கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிர்ணயித்த விலைக்கு மீறி அதிக விலையில் பாதுகாப்பு உபகரணங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கடுமையான வழிமுறைகளை பின்பற்றிய போதிலும், முககவசங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
வெறும் 10ரூபாயுக்கு விற்ற ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் முகக்கவசம் சந்தையில் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், சுத்தமான பருத்தி துணி மற்றும் தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தி வீட்டில் முகக்கவசத்தினை உருவாக்குவது மிகவும் எளிதானது. இந்த முகமூடிகளை தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தாமலும் தயாரிக்கலாம்.
ஒரு சுத்தமான பருத்தித் துணி, நான்கு துண்டு துணி, கத்தரிக்கோல் மற்றும் ஒரு தையல் இயந்திரமே ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் செய்யத் தேவையான பொருள்கள். பயன்படுத்தப்பட்டத் துணி உட்பட எந்தவொரு 100 சதவீத காட்டன் துணியையும் பயன்படுத்தி வீட்டிலே முகக்கவசத்தை தயார் செய்யலாம்.
வீட்டிலேயே ஒரு முகக்கவசத்தை தயாரிப்பது எப்படி?
முகக்கவசத்தை தயாரிக்க எந்தவொரு பயன்படுத்தப்பட்ட பருத்தித் துணியையும் பயன்படுத்தலாம். முதலில் 5 நிமிடங்களுக்கு கொதிக்கும் நீரில் துணியை நன்கு கழுவி, அதை நன்கு உலர வைக்க வேண்டும். முடிந்தால் நீரில் உப்பு சேர்த்து சுத்தம் செய்யலாம்.
படி 1: தேவைக்கேற்ப பின்வரும் அளவுகளில் துணியை வெட்டுங்கள். பெரியவர்களுக்கு: 9 இன்ச்x 7இன்ச்; குழந்தைகளுக்கு: 7 இன்ச் x 5 இன்ச்.
(பெரியவர்களுக்கான முகக்கவசம் தயாரிப்பதற்கான படிநிலைகள் இவைகள்)
படி 2: முகக்கவசத்தின் ஓரங்களில் பைபிங் செய்வதற்காகவும், முகக்கவசம் கட்டுவதற்காகவும் 1.5x 5 இன்ச்சில் 2 துண்டு துணிகளும், 1.5x 40 இன்ச் என்ற அளவில் 2 துண்டுகளையும் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
படி 3: முகக்கவசத்தின் ஒரு புறம் பைபிங் செய்வதற்காக 1.5 x 5 இன்ச் அளிவில் வெட்டப்பட்ட துண்டு துணியை இணைக்கவும்.
படி 4: முகக்கவச துணியில் கீழ்நோக்கி படியுமாறு மூன்று பிளீட்களை வைக்கவும். ஒவ்வொரு பிளீட்டும் 1.5 இன்ச் அளவில் தைக்கவும்.
படி 5: ஒரு புறம் செய்ததை போலலே மறுபுறம் துணியை திருப்பி, மீண்டும் 3 பிளீட்களை தைக்கவும். பிளீட் செய்யப்பட்டவுடன், 9 இன்ச் உயரத்திலிருந்த துணி 5 இன்ச்சாக குறைக்கப்பட்டிருக்கும்.
படி 6: பீளிட்டின் தையல்கள் பிரிந்துவிடமாலிருக்க தொடக்கத்தில் பைபிங் செய்வதற்காக இரு ஓரங்களிலிலும் இணைக்கப்பட்ட 1.5x 5 இன்ச் துணியை மறுபுறம் திருப்பி பைபிங் செய்யவும்.
படி 7: அடுத்ததாக, முகக்கவசத்தை கட்டுவதற்காக 1.5x 40 இன்ச் அளவில் வெட்டப்பட்ட துணியை முகக்கவசத்தின் மேலேயும், கீழும் இணையுங்கள்.
படி 8: இறுதியாக, இரண்டு கயிற்றையும் மீண்டும் மூன்று முறை மடித்து தைக்கவும். உங்களது முகக்கவசம் இப்போது தயார்.
உங்களிடம் ஒரு தையல் இயந்திரம் இல்லையென்றால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
கைக்குட்டை ஒன்றை எடுத்து அதை பக்கவாட்டில் மூன்றாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்தபின், இரு புறமும் ரப்பர் பேண்ட்டை மாட்டவும். மூக்கு மற்றும் வாயை மறைப்பதற்கு போதுமான அளவை குறித்து, அப்பகுதியில் ரப்பர் பேண்ட்டை நகர்த்துங்கள். ரப்பர் பேண்ட் அடுத்ததாய் இருக்கும் துணியை மற்றொருபுறம் இருக்கும் துணியுடன் மடித்துகொள்ளவும். ஒரு மடிப்பை எடுத்து மற்ற மடிப்புக்குள் சொருகவும். இந்த முகக்கவசத்தை அணிய ஒவ்வொரு ரப்பர் பேண்டையும் உங்கள் காதுகளில் சுற்றிக் கொள்ளுங்கள்.
வீட்டில் தயாரித்த முகமூடியை எவ்வாறு பயன்படுத்துவது?
உங்கள் முகமூடி தயாரானதும், அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழியை அறிந்து கொள்வது அவசியம். தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தினை கட்டும் போது நான்கு ஓரங்களிலும் இடைவெளி இல்லாமல் கவனித்துக் கொள்ளுங்கள். மூக்கு மற்றும் வாயை நன்கு மறைத்துள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். ஒரு முறை பயன்படுத்திய முகக்கவசத்தை துவைக்காமல் ஒரு போதும் மறுமுறை உபயோகிக்காதீர்கள்.
தையல் மிஷினில் தைத்ததோ, ரப்பர் பேண்டில் தயாரித்த முகக்கவசமோ, ஒருவருக்கு இரு முகக்கவசங்களை தயாரித்து கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு முகக்கவசத்தினை துவைத்து உலர்த்தும் நேரத்தில் மற்றொன்றை பயன்படுத்தலாம். அதேபோல், உங்களுடைய முகக்கவசத்தினை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
முகக்கவசத்தை கழட்டும் போது, முகக்கவசத்தின் எப்பகுதியையும் தொடாமல் பின்புறம் கட்டப்பட்டுள்ள கயிற்றை மட்டும் பயன்படுத்தவும். கழட்டிய உடன், கைகளை 40 நொடிகளுக்கு சோப்பால் கழுவவும். அதேபோல், கழட்டிய முகக்கவசத்தை நேரடியாக சோப்பு கரைசனுள்ளோ, கொதிக்கும் நீரிலோ போடவும்.
வீட்டில் தயாரித்த முகக்கவசத்தை எவ்வாறு சுத்தம் செய்வது?
ஒரு முறை முகக்கவசத்தை பயன்படுத்திய பிறகு, மறுபயன்பாட்டிற்காக ஒருபோதும் முகக்கவசத்தை வெளிப்புறத்தை உட்புறமாக திருப்பி உபயோகிக்கக்கூடாது. பயன்படுத்திய முகக்கவசத்தை சுத்தம் செய்ய, சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் நன்கு துவைத்து, குறைந்தபட்சம் 5 மணி நேரம் வெயிலில் காய வைக்கவும். இல்லையேல், பிரஷர் குக்கரில் 15 நிமிடங்கள் வேகவைக்கலாம் அல்லது சோப்பில் துவைத்த பிறகு ஐந்து நிமிடங்களுக்கு அயர்ன் பாக்சில் இஸ்திரி போடவும்.
வீட்டில் தயாரித்த மறுமுறை பயன்படுத்தும் முகக்கவசம், நோய்த் தாக்குதலுக்கு ஆளான நபரிடமிருந்து நீர்த்திவலைகளாக வெளிப்பட்டு இன்னும் காற்றில் வைரஸ் மிதந்து கொண்டிருந்தால், அவை சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பினை மட்டுமே குறைக்கும். அவை முழு பாதுகாப்பையும் அளிக்காது என்றும் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக விலகலை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்... கைகளை அடிக்கடி கழுவ நினைவில் கொள்ளுங்கள்...