இடி, மின்னல் நேரங்களில் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
மழை நேரங்களில் நாம் எல்லோரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். அதிலும் இடி மற்றும் மின்னல்களும் இருக்கும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. மழை நேரங்களில் நாம் எல்லோரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். அதிலும் இடி மற்றும் மின்னல்களும் இருக்கும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இருள் கொண்ட வானில் ஒளிக் கீற்றின் ஊடாக மின்னல்கள் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும். அதை கண்களால் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். இயற்கையின் விந்தை அது. அதோடு சேர்ந்து சமயங்களில் இடி முழக்கமும் வான்வெளியில் அதிர்வேட்டுகளை போடும்.
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும் எனச் சொல்வார்கள். மழை மேகங்களில் உள்ள ஆட்டம் (Atom) உராய்வதால் மின்னூட்டம் உருவாகும். அது காற்றில் கலக்கும் போது மின் ஆற்றல் பெற்று மின்னல் உருவாகிறது எனச் சொல்வது உண்டு. சமயங்களில் மின்னல் தரையிலோ அல்லது உயரமான மரத்தையோ தாக்குவது உண்டு. அதனால் சேதங்களும் ஏற்படும்.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி, கடந்த 2021-ல் மட்டும் இந்தியாவில் 2880 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இயற்கை பேரிடரால் ஏற்படும் மனித உயிரிழப்புகளில் மின்னல் தாக்கி பலி ஆனவர்களின் சதவீதம் 40% என்ற எண்ணிக்கையில் உள்ளது.
2017 முதல் 2021 வரையில் இந்த தரவுகளின் படி பார்த்தால் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அதனால் இதனை மின்னல் தானே என லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
மின்னல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள்
> இடி, மின்னலின் போது திறந்த வெளியில் இருக்க நேர்ந்தால் இரண்டு காதுகளையும் இறுக்கமாக மூடிக் கொண்டு குத்துக்கால் இட்டு அமர வேண்டும். அப்படி அமரும்போது குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பது மிகவும் அவசியம்.
> தரைக்கு மிகவும் அருகே அமர்ந்து கொண்டிருப்பது அவசியம். அதன் மூலம் மின்னல் தாக்கும் வாய்ப்பு குறையும்.
> காதுகளை இறுக்க மூடிக் கொள்வதால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவது குறையும்.
> குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருந்தால் மின்னல் தரையை தாக்கும் போது ஏற்படும் மின்சாரம் உடலில் பாயாமல் இருக்கும்.
> மின்னல் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அறிகுறிகள் ஏதுமின்றி மின்னல் தாக்கும்.
மின்னல் தாக்கும் போது செய்யக்கூடாதவை
> இடி, மின்னலின் போது கூட்டமாக சேர்ந்து நிற்க கூடாது.
> குடைகளை பயன்படுத்தக் கூடாது.
> உயரமான மரங்களைதான் மின்சாரம் தாக்கும். அதனால் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
> திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்கவும்.
> நீரில் இறங்கி நீந்தக் கூடாது. ஏனெனில் மின்னல் நீரை தாக்கினால் மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளது.
Edited by Induja Raghunathan