டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் உள்ள ‘கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்’ முறை - முழு விளக்கம்!
இதற்கு பயனர்கள் பாஸ்வேர்ட் மாதிரியானவை கூட உள்ளிட தேவையில்லை. பயனர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கொண்டு இந்த முறையில் எளிதில் பணம் செலுத்தலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு வழிகளில் ஒருவரால் பணம் செலுத்த முடியும். இருந்தும் அதிவிரைவாக பணம் செலுத்த உதவுகிறது ‘கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்ஸ்’ ’Contactless Payements' முறை.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கிகள் இதனை அறிமுகம் செய்தன. இதற்கு பாஸ்வேர்ட் மாதிரியானவை கூட உள்ளிடத் தேவையில்லை. பயனர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கொண்டு இந்த முறையில் எளிதில் பணம் செலுத்தலாம்.
இதற்கு பிஓஎஸ் மெஷின் மீது கார்டை வைத்தால் போதும். அதே போல கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்ஸ் சப்போர்ட் செய்யும் வசதி கொண்ட சாதனங்களிலும் பணம் செலுத்த முடியும். இதை பயனர்கள் மேனுவலாக ஆக்டிவேட் செய்ய வேண்டி உள்ளது. எப்படி கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள மேனுவலாக ஆக்டிவேட் செய்கிறோமோ அது போலதான்.
கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்ஸ்?
டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கொண்டு சுலப வழியில் பணம் செலுத்தும் முறைகளில் இதுவும் ஒன்று. பிஓஎஸ் மெஷினில் கார்டுகளை ஸ்வைப் செய்து, பாஸ்வேர்ட் என்டர் செய்ய வேண்டிய அவசியம் இதில் இல்லை. கார்டை பிஓஎஸ் மெஷின் மீது வைத்தால் போதும் பணம் செலுத்தலாம். பணம் பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து பற்று (டெபிட்) வைக்கப்படும்.
வங்கி உலகின் நவீன பேமெண்ட் முறைகளில் இதுவும் ஒன்று. அதனால் இப்போது பெரும்பாலான டெபிட் அல்லது கிரெடிட் (புதிய) கார்டுகளில் இந்த அம்சம் இருக்கும். Wi-Fi குறியீடு போன்ற ஐகான் கார்டுகளின் முன்பக்கத்தில் இருக்கும். அதுதான் இந்த வசதி பெற்ற கார்டுகளுக்கான அடையாளம். கார்டு பயன்பாட்டுக்கு உள்ளது போல இதற்கும் வங்கி தரப்பில் கட்டணம் இருப்பதாக தகவல். இருந்தும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
RFID மூலம் கார்டுகள் இதில் தரவுகளை ட்ரான்சிட் செய்கின்றன. வணிகர் தரப்பில் வாடிக்கையாளரிடமிருந்து பெற வேண்டிய தொகையை பிஓஎஸ் மெஷினில் உள்ளிட்ட பின்னர் பணம் பெற அந்த இயந்திரம் தயாராகும். அப்போது கார்டை பிஓஎஸ் இயந்திரத்தின் மேல் பக்கத்தில் வைத்தால் பணம் பெறப்படும். இதன்போது சம்பந்தப்பட்ட கார்டு தொலைந்து போனதாக புகார் ஏதும் உள்ளதா, மோசடி ரீதியிலான பேமெண்ட் ஏதேனும் மேற்கொள்ளப்படுகிறதா, கார்டில் பேலன்ஸ் உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே பணம் பெறப்படும். இந்த முறையில் சில ஆயிரங்களை மட்டுமே செலுத்த முடியும்.
கார்டு மட்டுமல்லாது NFC சப்போர்ட் கொண்ட மொபைல் சாதனம் அல்லது ஸ்மார்ட்போன் மற்றும் Wearable டிவைஸ் மூலமாகவும் இந்த வழியில் பணம் செலுத்த முடியும். சில வங்கிகள் இந்த Wearable டிவைஸ்களை விற்பனை செய்கின்றன. வாட்ச் அல்லது கீ-செயினாக அது இருக்கும்.
உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பயனர்கள் இந்த முறையில் பணம் செலுத்த முடியும். என்ன அந்த நாட்டுக்கு இணையான கரன்சி எண்ணிக்கையில் பயனரின் வங்கிக் கணக்கில் பேலன்ஸ் இருக்க வேண்டும். இந்த வகை பேமெண்ட் பாதுகாப்பானதுதான்.
முக்கியமாக இந்த அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட கார்டுகளை பத்திரமாக பயனர்கள் வைத்திருக்க வேண்டும். கார்டை தவறவிட்டால் உடனடியாக அதை பிளாக் செய்ய வேண்டும். இல்லையென்றால் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. பயனர்கள் இந்த அம்சத்தை தங்களது வங்கியின் இணையதள சேவை மூலம் ஆக்டிவேட் செய்யலாம். அதிலேயே யூசேஜ் லிமிட்டையும் நிர்ணயித்துக் கொள்ளலாம்.
Edited by Induja Raghunathan