’என் மனசாட்சிப் படி செயல்படுகிறேன்’- டிவிட்டர் தாக்குதலுக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!
டிவிட்டர் தாக்குதலுக்கு ஏற்ப தனது கருத்துகள் அமைவதில்லை என்றும், தனது மனசாட்சி வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுவதாகவும் ஜோஹோ சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
”டிவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு ஏற்ப தனது கருத்துகளை அமைவதில்லை என்றும், தான் விரும்பும் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பான சர்ச்சைக்கு ஜோஹோ நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். உங்கள் தாக்குதல்களுக்கு பதில் அளிக்க மாட்டேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னையில் வரும் பிப்ரவரி 2ம் தேதி, ’புத்துயிர் பெறும் இந்தியா’ எனும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐடி துறையை சேர்ந்த பலர் பங்கேற்கின்றனர்.
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ZOHO சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆக்சன்ச்சர் சொல்யூஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ராம எஸ்.ராமசந்திரனும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதனிடையே மத சார்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி ஐடி நிறுவன பிரபலங்கள் பங்கேற்பது குறித்து டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
டிவிட்டரில் வெளியான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜோஹோ நிறுவனர் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு, இந்தத் தாக்குதலுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
டிவிட்டர் தாக்குதலின் அடிப்படையில் தனது கருத்துகள் அமைவதில்லை என்று அவர் கூறியுள்ளார். மனசாட்சியின் அடிப்படையில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது,
“டிவிட்டர் தாக்குதல்கள் அடிப்படையில் என் கருத்துக்களை அமைத்துக் கொள்வதில்லை. நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், உங்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள், நான் என் மனசாட்சி வழிகாட்டுதலின் படி நடந்து கொள்வேன். தினம் தினம் கடினமான உழைப்பு மூலம் நாங்கள் சம்பாதிக்கின்றோம். தரமான பணியை தொடர்வோம். உங்கள் தாக்குதல்களுக்கு பதில் அளிக்க மாட்டேன்,”
இவாற்று ஸ்ரீதர் பதிவிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நிகழ்ச்சிகளில், ஏற்கனவே எச்.சி.எல் நிறுவனர் சிவ் நடார், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: சைபர்சிம்மன்