மாதவிடாய் தொடர்பான சமூகக் கட்டுப்பாடுகளை தகர்க்க விரும்பும் ஐஏஎஸ் அதிகாரி!
பட்காம் துணை ஆணையர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான 33 வயது சையத் செஹ்ரிஷ் அஸ்கர் தனது மாவட்டத்திலும் ஸ்ரீநகரிலும் உள்ள அனைத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்தும் இயந்திரங்களையும் இன்சினரேட்டர்களையும் நிறுவ உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் இருப்பினும் பல பகுதிகளில், குறிப்பாக இந்திய கிராமப்புறங்களில் இன்றளவும் மாதவிடாய் தொடர்பான பல்வேறு சமூகக் கட்டுப்பாடுகள் நிலவுகிறது.
மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அதிகளவிலான பெண்களுக்கு எடுத்துரைக்கவேண்டிய நிலை உள்ளது. மாதவிடாய் குறித்தும் மாதவிடாய் சுகாதாரம் குறித்தும் பேசுவது தவறல்ல என்கிற கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தவேண்டிய அவசியம் உள்ளது.
மாதவிடாய் சமயத்தில் தனிமைப்படுத்தப்படுவதால் அழுத்தத்தை சந்திக்கும் சிறுமிகளிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பட்காம் துணை ஆணையர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சையத் செஹ்ரிஷ் அஸ்கர்.
’ஷீ தி பீப்பிள்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
“பெண்கள் தங்களது ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் அக்கறைக் காட்டவேண்டும். அதை நினைத்து அவமானப்படக்கூடாது. அத்தகையச் சூழலைக் கொண்ட சமூகத்தை உருவாக்க நாம் முயற்சி செய்யவேண்டும். கௌரவமாக வாழ்வது அவர்களது உரிமை. மாதவிடாய் தொடர்புடைய தவறான கண்ணோட்டத்திற்கு தீர்வுகாணவேண்டும். நாம் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் வகையிலான சூழல் உருவாகவேண்டும்,” என்றார்.
சையத் செஹ்ரிஷ் அஸ்கர் அனைத்து பெண்கள் சந்திப்பையும் மாவட்ட தலைமையகத்தில் ஏற்பாடு செய்தார். மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதே இவரது நோக்கமாக இருந்தது.
தனது மாவட்டத்தில் சுத்தமான கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததையும் 1,200 பள்ளிகளில் கிட்டத்தட்ட 300 சிறுமிகள் படிப்பை இடைநிறுத்தம் செய்ததையும் கண்ட அஸ்கர் தானே தீர்வுகாண முற்பட்டார். இவர் தனது மாவட்டத்திலும் ஸ்ரீநகரிலும் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி வளாகங்களிலும் நாப்கின்களை அப்புறப்படுத்தும் இயந்திரம், இன்சினரேட்டர் ஆகிய வசதிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
“இன்சினரேட்டர்களும் சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்தும் இயந்திரங்களும் 106 உயர்நிலைப் பள்ளிகளிலும் ஐந்து கல்லூரிகளிலும் ஒரு ஐடிஐ வளாகத்திலும் நிறுவப்படும். மேலும் சானிட்டர் நாப்கினை அப்புறப்படுத்தும் இயந்திரம் மாவட்டத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திலும் ஸ்ரீநகர் சர்வதேச விமானநிலையத்திலும் வைக்கப்படும்,” என்றார்.
மத்திய அல்லது மாநில அரசு தரப்பில் இதுவரை மாதவிடாய் சுகாதாரத்திற்கென பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே மாநிலத்தின் கிராமப்புற வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டது. தனது முயற்சிக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அஸ்கரால் நிர்வகிக்க முடிந்தது. கூடுதல் தேவைக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் உதவியது.
கட்டுரை: THINK CHANGE INDIA