15 வருடங்களாக சிக் லீவ்; ஆனா ஆண்டுக்கு ரூ.55 லட்சம் சம்பளம் - ஐபிஎம் ஊழியர் தொடர்ந்த விநோத வழக்கு!
15 ஆண்டுகளாக சிக் லீவ் போட்ட பிறகும் ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஐபிஎம் ஊழியர் ஒருவர் தனக்கு இன்கிரிமெண்ட் வழங்கவில்லை என வழக்கு தொடர்ந்துள்ளார்.
15 ஆண்டுகளாக 'சிக் லீவ்' போட்டு வீட்டில் இருந்தபடி ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஐபிஎம் ஊழியர் ஒருவர் தனக்கு இன்கிரிமெண்ட் வழங்கவில்லை, என வழக்கு தொடர்ந்துள்ளார்.
15 ஆண்டுகள் சிக் லீவ்:
இயன் கிளிஃபோர்ட் என்ற நபர் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான IBM-யில் சீனியர் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக சிக் லீவ் எடுத்துள்ளார். இருப்பினும், இவருக்கு 65 வயது நிரந்தர பணி நியமனம் வழங்கப்பட்டிருந்ததால் அவரை பணியை விட்டு நீக்காமல் ஆண்டுக்கு 55 ஆயிரம் பவுண்ட்கள், அதாவது, இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாயை ஊதியமாக வழங்கி வந்துள்ளது.
வீட்டில் உட்கார்ந்தபடியே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த இயன் கிளிஃபோர்ட், திடீரென நீதிமன்றத்தில் விநோதமான வழக்கு ஒன்றிணை தொடர்ந்துள்ளார். அதாவது, நிறுவனம் தனக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும், தனது விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் வழக்கு போட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் என்ன சொன்னது? அவர் வெற்றி பெற்றாரா? என்பது குறித்து பார்க்கலாம்...
யார் இந்த கிளிஃபோர்ட்?
இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள கில்ஃபோர்டைச் சேர்ந்த இயன் கிளிஃபோர்ட் என்ற நபர் ஐபிஎம்-இல் பணிபுரிகிறார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், முதலில் லோட்டஸ் டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்த நிறுவனத்தை ஐபிஎம் வாங்கியதைத் தொடர்ந்து, இயன் கிளிஃபோர்ட் ஐபிஎம் நிறுவனத்தின் ஊழியராக மாறினார்.
இந்நிலையில், 2008ம் ஆண்டு இயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் போரில் 5 ஆண்டுகளுக்கு சிக் லீவு எடுத்துள்ளார். நிறுவனமும் அவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது. இதனிடையே, 2013ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் மீது அதிரடி புகார் ஒன்றிணை கொடுத்துள்ளார்.
அதாவது, 5 ஆண்டுகளாக விடுமுறையில் இருக்கும் தனக்கு சம்பள உயர்வு, விடுமுறை கொடுப்பனவு (Leave allowance) ஆகியவற்றை வழங்கவில்லை என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஐபிஎம் நிறுவனம் தனது ஊழியர்களுக்காகக் கொண்டு வந்த ஊனமுற்றோர் திட்டத்தில் அவரை இணைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி, உடல்நலக்குறைவு காரணமாக வேலை செய்யமுடியாத நபர் பணியில் இருந்து நீக்கப்படமாட்டார். அவர்கள் உடல் நலம் குணமடையும் வரையிலோ அல்லது ஓய்வு பெறும் வரையிலோ அவர்களது சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் தொடர்ந்து வழங்கப்படும்.
இதனடிப்படையில், இயன் சிக் லீவில் இருக்கும் போது, அவரது 72 ஆயிரம் பவுண்ட் சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது இயனுக்கு ஆண்டுக்கு 54 ஆயிரம் பவுண்ட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஐபிஎம் நிறுவனம் இந்த சம்பளத்தை 65 வயது வரை வழங்கவதாக ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம் சம்பள உயர்வு மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளை ஒருபோதும் கேட்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை கொடுப்பனவு தொகையாக 8,685 பவுண்ட்களை வழங்கியுள்ளது.
வழக்கு தொடரக் காரணம் என்ன?
ஐபிஎம் ஆண்டுதோறும் இயனுக்கு 54,000 பவுண்டுகளை சம்பளமாக வழங்கி வருகிறது. ஆனால், 2022ம் ஆண்டு வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தை அணுகிய இயன், பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் மட்டுமின்றி தன்னை Disablity Plan-இல் இணைத்ததால் தான் தனக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். இருப்பினும், இயன் கிளிஃபோர்ட்டிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி பால் ஹவுஸ்கோ,
“பணியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், அலுவலகப் பணிகளை மேற்கொள்ளாத ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியதில்லை,” என்றும் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் உடல் நலக்குறைவு காரணமாக மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை என்றும், இதனை பாரபட்சமாக கருத முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, ஐபிஎம் நிறுவனம் இயனுக்கு தேவையான அளவு ஊதியத்தை வழங்குவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இயங்கும் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் பெறும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?