வாவ்! 3 வருடங்கள் வரை கெட்டுப் போகாத இட்லி..? மும்பை பேராசிரியையின் ருசியான கண்டுபிடிப்பு!
3 வருடங்கள் வரை கெட்டுப் போகாத இட்லியை கண்டு பிடித்து அசத்தியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பேராசிரியை வைஷாலி.
இட்லி... தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்று. வெளிநாடு சென்றால்கூட இட்லி கிடைக்குமா எனத் தேடி அலையும் அளவிற்கு இட்லிக்கு அடிமை நாம். வெறும் சுவையாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான பண்டமாகவும் இட்லி உள்ளது.
அதனாலேயே உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி உலக இட்லி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 6 மாத குழந்தை முதல் வயதான நோயாளிகள் வரை எல்லோரும் சாப்பிட ஏற்ற உணவு என்ற சிறப்பும் இட்லிக்கு உள்ளது.
ஆனால், இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இட்லியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் இன்றைய இயந்திர உலகில் சில சிக்கல்கள் உள்ளன. தினமும் மாவு அரைத்து இட்லி தயார் செய்ய எல்லோருக்கும் நேரம் இருப்பதில்லை. கடையில் கிடைக்கும் மாவும் ஒரே மாதிரியான சுவையை, ஆரோக்கியத்தை தருவதில்லை. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்லியும் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதில்லை.
இந்நிலையில் தான் இட்லி பிரியர்களின் வயிற்றில் சாம்பார், சட்னி வார்க்கும் செய்தியாக மும்பையைச் சேர்ந்த பேராசிரியையின் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. மும்பை பல்கலைக்கழக பேராசிரியையான வைஷாலி பம்போல், எவ்வித ரசாயனமும் சேர்க்காமல் சுமார் மூன்று வருடங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் வகையிலான இட்லியை கண்டுபிடித்துள்ளார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் வைஷாலி (48), கடந்த 15 வருடங்களாக இதற்கான ஆராய்ச்சியில் தனது குழுவினருடன் சேர்ந்து ஈடுபட்டு வந்தார். தனது ஆராய்ச்சியின் பலனாக தற்போது, எந்தவித பாதுகாப்பு பொருட்களும் இல்லாமல் வேகவைக்கப்படும் இட்லி, வெள்ளை தோக்லா போன்ற உணவுப் பொருட்களை மூன்று ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
“2013 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆராய்ச்சியில் நானும் எனது குழுவினரும் ஈடுபட்டு வருகிறோம். , எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் பயன்படுத்தி உணவை கெட்டுப்போகாமல் பதப்படுத்த புதிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளோம்,” என்கிறார்.
வைஷாலி கண்டுபிடித்துள்ள இந்த குளிர்சாதனப் பெட்டி போன்ற அமைப்பானது ராணுவ வீரர்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதோடு, உணவு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் தனது இந்த தொழில்நுட்பம் மிக பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் வைஷாலி. இயற்கை பேரிடர்களின் போது இதுபோன்று பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை கொடுத்து உதவ முடியும்.
‘உணவு பொருட்களின் ஆயுளை கூட்டுவதற்காக பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக கூறும் வைஷாலி, இந்த முறை நடைமுறைக்கு வந்தால் உணவுத்துறையில் பெரும் புரட்சிகரமானதாக அமையும்’ என்கிறார்.
இவ்வாறு பதப்படுத்திய உணவு பொருட்களின் சுவை மற்றும் அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.