இனி குடித்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தால்... வண்டி ஓடாது...
குடித்துவிட்டு வண்டியை ஓட்ட முயன்றால் கார் இஞ்சின் தானாக நின்றுவிடக்கூடிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இளம் மாணவி!
குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றம்; சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஓட்டுனர் மட்டுமின்றி சாலையில் இருக்கும் மற்றவர்களின் உயிரும் பலி ஆகிறது. குடி போதையில் வாகனம் ஓட்டி பலியான பல நிகழ்வுகளை நாம் அன்றாட நாளிதழில் படிக்கிறோம். இப்பிரச்சனைக்கு தீர்வுகான ஓர் கருவியை கண்டுபிடித்துள்ளார் பீகாரைச் சேர்ந்த ஐஸ்வர்யா.
போப்பால் லக்ஷ்மி நாராயண தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் மாணவியான ஐஸ்வர்யா காரில் குடித்துவிட்டு ஏறினால் கார் இஞ்சின் தானாக நின்றுவிடக்கூடிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இக்கருவியை காரில் பொருத்தினால் குடித்திருக்கும் ஓட்டுனரை இக்கருவி கண்டுபிடித்து வாகனம் நகர முடியாமல் நிறுத்தி விடும். இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும்.
மிக எளிமையாக காரில் பொருத்தக்கூடிய இக்கருவியை வெறும் 9000 ரூபாய்க்குள் செய்து முடிக்கலாம் என தெரிவிக்கிறார் ஐஸ்வர்யா.
பூனேவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட புது கண்டுபிடிப்பு மற்றும் பிராஜக்ட் போட்டியில் முதல் முதலாக தனது கருவியை வெளியிட்டுள்ளார் மாணவி ஐஸ்வர்யா. நாடு முழுவதிலும் இருந்து 800க்கும் மேலான கண்டுபிடிப்பாளர்கள் கலந்துக்கொண்ட இப்போட்டியில் இவரது கருவியே முதல் பரிசை வென்றுள்ளது.
தனது இரு நண்பர்கள் மற்றும் கல்லூரியின் உதவியோடு இக்கருவியை கண்டுப்பிடித்துள்ளார் இவர். மேலும் இதை தன் பெற்றோர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்