சுந்தர்பன்ஸ் பகுதி கிராமப்புற குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் ஐஐஎம் முன்னாள் மாணவர்!
பிப்லாப் தாஸ் Kishalay Foundation என்கிற என்ஜிஓ தொடங்கி தனது சொந்த ஊரான சுந்தர்பன்ஸ் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கி வருகிறார்.
ஒரு குழந்தையின் ஆளுமையை உருவாக்குவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ‘கல்வியில்லாத குழந்தை சிறகுடைந்த பறவைக்கு சமம்’ என்கிறது திபெத்திய பழமொழி ஒன்று.
இந்தியாவில் 18 வயதிற்குட்பட்ட சுமார் 472 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் போதிய கல்வி வசதி இல்லாத காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கிறது.
வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின்படி (ASER) தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தக்கத்தைக்கூட படிக்க முடிவதில்லை. அடிப்படை கணித கேள்விகளுக்கு பதிலளிக்க முடிவதில்லை.
சுந்தர்பன்ஸ் பகுதியில் உள்ள தீவுகளைச் சேர்ந்த குழந்தைகளின் கற்றல் வெளிப்பாடு குறைந்து வருவது குறித்து தெரிந்துகொண்டார் 48 வயதான பிப்லாப் தாஸ். உடனே இந்தக் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தார். சௌமித்ரா தண்டபட், ஜிலம் நந்தி ஆகிய நண்பர்கள் இருவருடன் இணைந்து 2013-ம் ஆண்டு Kishalay Foundation நிறுவினார்.
பிப்லாப் குழந்தைகளின் மனதில் அடிப்படைக் கல்வி ஆழப் பதியவேண்டும் என்று விரும்பினார். எனவே ஆரம்பக் கல்வியை மையமாகக் கொண்ட திட்டங்களை உருவாக்கத் தொடங்கினார். வேலையை விட்டு விலகினார். மூன்று முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான கற்றல் மையத்தை உருவாக்குவதில் நேரம் செலவிட்டார்.
“நான் சுந்தர்பன்ஸ் பகுதியில் பிறந்தேன். அங்கு வெகு சில பள்ளிகளே அங்கு இருக்கின்றன. அந்தப் பள்ளிகளிலும் போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது. ஆசிரியர்கள் இருப்பதில்லை. கற்றல் முறையும் காலத்திற்கு பொருந்ததாததாகவே இருக்கும். இவை அனைத்தும் மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளாக இருக்கின்றன. எனவே என்னால் இயன்ற வகையில் செயல்பட்டு நேர்மறை மாற்றத்தை உருவாக்க விரும்பினேன்,” என்று பிப்லாப் தாஸ் தெரிவித்தார்.
ஆரம்ப நாட்கள்
சுந்தர்பன்ஸ் பகுதியில் உள்ள கோசாபா என்கிற தீவில் பிப்லாப் தனது குழந்தைப் பருவத்தை செலவிட்டுள்ளார். அதன் பிறகு பள்ளிப் படிப்பை முடிக்க அருகிலுள்ள ரங்கபேலியா என்கிற கிராமத்திற்கு மாற்றலாகியுள்ளார்.
பள்ளி முதல்வரான மறைந்த துஷார் கஞ்சிலால் பத்ம ஸ்ரீ விருது வென்றவர், சுற்றுச்சூழல் ஆர்வலர். இவரைக் கண்டு ஏழை மக்களின் மேம்பாட்டில் பங்களிக்கவேண்டும் என்கிற ஊக்கம் பிப்லாபிற்கு ஏற்பட்டுள்ளது.
"துஷார் நலிந்த மக்களின் மேம்பாட்டிற்காக அயராது பாடுபட்டுள்ளார். ஏழை மக்களுக்கு உதவுவதில் அவருக்கு ஆத்ம திருப்தி ஏற்படும். இவரது நற்பணிகளே சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்றும் சிறப்பான உலகத்தை உருவாக்கவேண்டும் என்றும் எனக்கு ஊக்கமளித்தது,” என்றார் பிப்லாப்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான பிப்லாப் ஐஐஎம்-பெங்களூருவில் எம்பிஏ படித்தார். அதைத் தொடர்ந்து பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், அக்சென்சர், டெக் மஹிந்திரா உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றினார்.
நல்ல வேலை. நல்ல சம்பளம். ஆனாலும் பிப்லாப் திருப்தியின்றி காணப்பட்டார். ஏதோ ஒரு வெறுமை அவருள் இருந்தது. சமூக மேம்பாட்டில் பங்களிக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
நண்பர்களுடம் கலந்துரையாடினார். சொந்த ஊரில் கல்வியின் தரம் மோசமாக இருப்பதைத் தெரிந்துகொண்டார். இதுகுறித்து ஆய்வு செய்த பிறகு சுந்தர்பன்ஸ் பகுதியில் ஆரம்ப நிலை பள்ளிப் படிப்பில் இடைவெளி இருப்பதை உணர்ந்தார்.
“தேசிய அளவிலான கல்வியறிவு விகிதம் சராசரியாக 77.7 % இருக்கையில் இந்தப் பகுதியில் 25.7 சதவீதமாக இருந்தது. இதை மேம்படுத்த திட்டமிட்டோம். குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணையும் ஆற்றலை மேம்படுத்தத் தொடங்கினோம். என் நண்பர்களும் நானும் இணைந்து எங்களிடமிருந்து சேமிப்பைக் கொண்டு 2013-ம் ஆண்டு Kishalay Foundation என்கிற என்ஜிஓ-வைத் தொடங்கினோம்,” என்றார் பிப்லாப்.
நாளைய இளைஞர்களுக்கு சக்தியளித்தார்
பிப்லாப் பல்வேறு அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டார். மாணவர்களின் கற்றலில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆசிரியர்களிடம் உரையாடினார்.
“ஆரம்பத்தில் பல்வேறு தீவுகளில் உள்ள 30 வெவ்வேறு பள்ளிகளைப் பார்வையிட்டேன். வளங்களில் உள்ள பற்றாக்குறையைக் கண்டறிந்தேன். அதற்குத் தீர்வுகாணத் தீர்மானித்தேன்,” என்றார் பிப்லாப்.
48 வயதான இவர் தனிநபர் நன்கொடையாளர்களிடம் நிதி திரட்டினார். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், விளையாட்டு சாதனங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கினார். வார இறுதி நாட்களில் போதிய வளங்கள் இன்றி தவிக்கும் பள்ளிகளைக் கண்டறியும் பணியில் தீவிரம் காட்டினார். அத்துடன் தேவையான பொருட்களை வாங்குவதற்கு உதவும் கொடையாளர்களைக் கண்டறியவும் நேரம் செலவிட்டார்.
“அந்த நாட்களில் வாரத்தின் ஏழு நாட்களும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். ஆனால் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்க்கும்போது உழைப்பிற்கு பலன் கிடைத்த திருப்தி ஏற்படும்,” என்கிறார் பிப்லாப்.
Kishalay Foundation 2015-ம் ஆண்டு மாணவர்களுக்கு தரமான ஆரம்பநிலை கல்வியை வழங்க சுந்தர்பன்ஸ் பகுதி முழுவதும் கற்றல் மையங்களை அமைக்கத் தொடங்கியது. உள்ளூரில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை பிப்லாப் பணியிலமர்த்தினார். இவர்கள் அனுபவம் சார்ந்த கற்றல் முறைகள், விளையாட்டுகள், கதை சொல்லுதல் போன்றவற்றின் மூலம் வார இறுதி நாட்களில் குழந்தைகளுக்கு எண்கணிதம் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கின்றனர்.
இந்த பட்டதாரிகள் ஆசிரியர்களாக பொறுப்பேற்பதற்கு முன்பு பாடங்களை திட்டமிடல், குழந்தைகளைக் கையாளுதல் போன்றவை குறித்து அனைவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.
என்ஜிஓ பணிகளில் அதிக நேரம் செலவிட விரும்பிய பிப்லாப், தனது பணியை விட்டு விலகினார். அதே ஆண்டு ஊட்டச்சத்து திட்டங்களைத் தொடங்கினார். இதில் வெல்லம், வாழைப்பழம், பப்பாளி போன்ற சத்துள்ள முழுமையான உணவு வகைகள் குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
“இந்தப் பெருந்தொற்று சூழலில் பல குழந்தைகளின் பெற்றோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மே மாதம் ஆம்பன் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. 250 ரூபாய் மதிப்புள்ள ரேஷன் கிட் வழங்க நிதி உயர்த்தினோம். கூடுதலாக ஜார்காலி கிராமத்தைச் சேர்ந்த சில இளம் தன்னார்வலர்கள் உதவியுடன் சமூக சமையலறையை நிறுவினோம்,” என்றார் பிப்லாப்.
Kishalay Foundation கற்றல் மையங்களை நடத்த Pepe Jeans, Tata போன்ற கார்ப்பரேட்களிடம் இருந்து நிதி திரட்டியுள்ளது. சமீபத்தில் Milaap தளத்தில் கூட்டு நிதி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஃபவுண்டேஷன் செயல்பாடுகளுக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் மாணவர்களிடமிருந்து மிகக் குறைந்த மாதக் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பிப்லாப் 70 உறுப்பினர்கள் அடங்கிய தனது குழுவுடன் இணைந்து கடந்த ஏழாண்டுகளில் சுந்தர்பன்ஸ் பகுதியில் உள்ள 10 தீவுகள் முழுவதும் 24 கற்றல் மையங்களை அமைத்துள்ளார். இதன் மூலம் 700-க்கும் அதிகமான குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
“மாணவர்கள் வருகை தருவது அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் ஆங்கில வாக்கியங்களை எளிதாக படிக்கவும் எழுதவும் செய்கின்றனர். அடிப்படை கணக்கு கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்கின்றனர். நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதற்கு இதுவே நிரூபனம். சுந்தர்பன்ஸ் பகுதியில் உள்ள மற்ற தீவுகளில் கூடுதல் கற்றல் மையங்களை அமைக்க திட்டமிட்டு வருகிறேன்,” என்றார் பிப்லாப்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா