ஐஐடி மாணவ தொழில் முனைவரின் கிரவுட்ஃபண்டிங் அனுபவம்...
நல்ல ஐடியா இருக்கிறது, ஆனால் கைவசம் நிதி இல்லையா? கிரவுட் ஃபண்டிங் வழியை முயற்சித்தால் என்ன? கல்வி ஸ்டார்ட் அப் (Involve) நிறுவனத்தின் இளம் நிறுவனர் இதே முறையில் தனது நிறுவனத்திற்காக நிதித் திரட்டிய வழியை பார்க்கலாம்.
எங்கள் நிறுவனத்தை மூடும் நிலையில் இருந்தோம். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம், நானும் சம்யுக்கும் பாடம் நடத்தி செலவுகளை சமாளித்துக்கொண்டிருந்தோம். ஐஐடி மெட்ராசின் பட்டதாரி மாணவர்களை மட்டுமே கொண்டிருந்த எங்கள் நிறுவனம் 3 மாதங்களில் 5 முழு நேர ஊழியர்களைக் கொண்டிருந்தது. அவர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டும். நிதித் திரட்ட மற்ற வழிகள் எல்லாம் சரிபட்டு வராத நிலையில், கிரவுட்ஃபண்டிங் தான் ஒரே தீர்வு என முடிவு செய்தோம். ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்தியாவில் 26 சதவீத வெற்றி விகிதம் தான் இருப்பதாக தெரிய வந்தது. ஆறு மாத காலத்தில் ரூ.6 லட்சம் திரட்ட வேண்டியிருந்த நிலையில், இதற்குச் சரியான உத்தி தேவை என்று புரிந்தது.
இந்தக் கட்டுரையை நான் எழுதக் காரணம், திட்டமிட்டதைவிட 25 சதவீதம் அதிகத் தொகையை எப்படி திரட்டினோம் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புவது தான். சமூக நோக்கம் கொண்ட தொழில்முனைவோர் கிரவுட்ஃபண்டிங் மேடையை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக திட்ட வரையறையை முன்வைப்பதே இதன் நோக்கம்.
எனது முயற்சி மூன்று கட்டங்களை கொண்டிருந்தது:
- திட்டமிடல்
- செயல்படுத்தல்
- முடிந்த பின் தொடர்பு கொள்ளுதல்
இந்த முயற்சியில் முக்கிய பங்கு திட்டமிடலுக்கு தான் இருந்தது. இதைச் சிறப்பாக செய்தால் நிதி பாய்ந்தோடி வரும். எங்கள் முயற்சியை திட்டமிட நான்கு வாரங்கள் எடுத்துக்கொண்டேன்.
இதற்கு நீங்கள் முதலில் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்:
மக்கள் எதற்காக எனக்கு நிதி அளிக்க வேண்டும்? தினமும் நூற்றுக்கணக்கான நிதி திரட்டும் முயற்சியைப் பார்க்கிறோம், இவற்றில் ஏன் உங்களுக்கு நிதி அளிக்க வேண்டும்? உங்கள் நோக்கம் உயர்வாக இருக்கலாம் ஆனால் என் மீது தாக்கம் செலுத்தாவிட்டால் நான் ஒரு ரூபாய் கூட தர மாட்டேன்.
பல நேரங்களில் நமது செயல்களை தர்கரீதியாக நியாயப்படுத்திவிட்டு அதில் உள்ள உணர்வுப்பூர்வமான விஷயத்தை மறந்து விடுகிறோம். கிரவுண்ட்பண்டிங் முயற்சியை பொறுத்தவரை, மக்கள் எப்படி உங்கள் முயற்சியுடன் தொடர்பு கொள்கின்றனர் என்பது முக்கியம். பெரும்பாலான நேரங்களில், நம்முடைய
உள்மனது பொறுப்பேற்றுக்கொள்கிறது என்கிறார் உளவியல் வல்லுனரான டேனிய்ல கானேமன்.
நாம் தினமும் மேற்கொள்ளும் நூற்றுக்கணக்கான முடிவுகளுக்கு இந்த உள்ளுணர்வு தான் பொறுப்பாகிறது.
ஆக பெரிய மற்றும் சிறியவற்றின் ஆற்றலை புரிந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவர்கள் பங்களிப்பு எப்படி முக்கியம் எனும் சிறிய அம்சத்தை புரிந்து கொள்வதோடு, மகத்தான நோக்கத்தில் அங்கம் வகிக்கிறோம் எனும் பெரிய அம்சத்தையும் உணரும் நிலை இருக்க வேண்டும். இதற்காக, உங்கள் நோக்கத்தைச்சுற்றி கதை சொல்லும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்த கட்டம், உங்களால் திரட்டக்கூடிய பணத்தின் அளவை மதிப்பிட வேண்டும். நான் எப்படி இதை செய்தேன் என விளக்குகிறேன். ஒரு பக்கம் எனக்கு தெரிந்தவர்களை எல்லாம் பட்டியலிட்டேன். இன்னொரு பக்கம் அவர்களிடம் எதிர்பார்க்கக் கூடிய தொகையை குறிப்பிட்டேன். எனது இணை நிறுவனர்களான, சாம் மற்றும் அவினாஷிடமும் இவ்வாறு செய்யமாறு கேட்டுக்கொண்டேன்.
இந்த இடத்தில் உங்களைச்சுற்றியுள்ள வலைப்பின்னலை ஆய்வு செய்து, அதன் மூலம் திரட்டக்கூடிய தொகையை மதிப்பிட வேண்டும். இந்தப் பட்டியலை எழுதி முடித்ததும் மொத்தத் தொகை பற்றிய புரிதல் கிடைக்கும்.
இதன் பிறகு, நீங்கள் சார்ந்திருக்கக் கூடிய தூதர்களை கண்டறிய வேண்டும். அவர்கள் வட்டத்தில் இருந்தும் நிதி கிடைக்கலாம். நிதியின் 20 சதவீதத்தை திரட்டித் தரக்கூடிய அளவுக்கு எனக்கு தூதர்கள் கிடைத்தனர்.
இறுதியாக, உங்கள் முதல் ஆதரவாளர்களாக இருக்கக் கூடிய ஒரு சிலரை கண்டறியுங்கள். கிரவுட்பண்டிங் என்பது தனிநபர் பங்களிப்பிற்கானது என்றாலும், யாருமே ஆதரவாளர்கள் இல்லை எனில் ஒருவரும் நிதி அளிக்க மாட்டார்கள் என்பதை மறக்க வேண்டாம். எனவே, முயற்சியை துவங்கியதுமே அதை ஆதரிக்க கூடிய சிலர் இருப்பது முக்கியம்.
ஒரு நல்ல நிதி திரட்டும் முயற்சி இப்படி அமைந்திருக்கும். உங்களுக்கு ஒரு நல்ல துவக்கம் வேண்டும். இதன் மூலம் முதல் வாரத்தில் 30 சதவீத நிதி கிடைக்க வேண்டும். நாட்கள் ஆக, உங்கள் முயற்சி மீதான ஆர்வத்தை தக்க வைப்பது கடினம் என்பதை உணருங்கள். ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும் பின்னர் மறந்துவிடலாம். திட்டமிடலின் இறுதிக்கட்டம் இடைப்பட்ட காலத்திற்கான மார்க்கெட்டிங் உத்திகளை வகுத்து கொள்வதாகும். நாங்கள் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பகிர்ந்து கொள்ள 20 சமூக ஊடக பதிவுகளை கைவசம் வைத்திருந்தோம்.
Execution திட்டமிட்டதை செயல்படுத்துவது என்று வரும் போது, உங்களுக்கு தெரிந்தவர்கள் எல்லாம் பங்களிப்பு செய்ய வழி செய்வது முக்கியம். கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை.
நேரமும் முக்கியம். முயற்சியை துவக்குவதற்கான பொறுத்தமான நேரத்தை கண்டறிய வேண்டும். மாசக்கடையில் யாரிடமும் பணம் இருக்காது என்பதால், அப்போது முயற்சியை துவக்க வேண்டாம். போனஸ் வாங்கும் நேரம் போன்றவை மிகவும் ஏற்றது.
உங்கள் முயற்சியை துவக்கியதும், உங்களுக்குத் தெரிந்த எல்லோரையும் சென்றடைய, அனைத்து சமூக ஊடகங்களிலும் தகவலை பகிர்ந்து கொள்ளவும். எங்களைப்பொறுத்தவரை, ஒவ்வொருவர் நிதி அளித்த போதும் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு அவர்கள் நண்பர்களையும் இதில் இணைத்தோம். நண்பர்கள் மூலமான நண்பர்களின் ஆற்றலை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கேட்கும் தொகை பெரிய அளவில் அளிக்கும் வகையில் இருப்பதோடு மற்றவர்கள் இயன்றதை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். நாங்கள் இப்படி தான் செய்தோம்.
இது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏனெனில், எங்கள் தொடர்புகளில் பலருக்கு, முதலில் இன்வால்வ் நிறுவனம் பற்றி தெரியவில்லை. ஆனால், ஒரு மாற்றத்தை ஏற்படும் முயற்சிக்கு உதவும் நம்பிக்கையில் சிறிய தொகை அளித்தனர்.
குறிப்பு: உங்கள் உறவினர்கள் ஒருவரை நிதி அளிக்க வைத்து, அந்தத் தகவலை உங்கள் வாட்ஸ் அப் உறவினர் வட்டத்தில் அவரை பாராட்டி பகிர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பலனை பாருங்கள்.
உங்கள் முயற்சியில் அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிப்பதை உணர்வீர்கள்.
முடிந்த பின்பும் தொடர்பு கொள்ளுதல்:நிதி திரட்டும் முயற்சி முடிந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டதாக பலரும் நினைக்கின்றனர். முடிந்த பிறகும் தொடர்பு கொள்ளுவது நீண்ட கால உறவை வளர்க்க முக்கியமானது. நிதி அளித்தவர்கள் அந்தத் தொகை எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்து கொண்டால், உங்கள் முயற்சி பற்றி உற்சாகமாக பேசுவார்கள். மீண்டும் அவர்கள் உதவ முன்வரலாம். எனவே தொடர்ச்சியாக தகவல் அளித்துக்கொண்டிருப்பது முக்கியம். நம்பிக்கையோடு கிரவுன்பண்டிங்கிற்கு முயன்று பாருங்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: திவான்ஷு குமார் ( ஐஐடி மெட்ராஸ் மாணவ தொழில்முனைவோர், சர்வதேச விருது வென்ற எதிர்கால திறன் வளருக்கும் மேடையான இன்வால்வ் நிறுவனர், சி.இ.ஓ. | தமிழில்; சைபர்சிம்மன்
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மற்றும் பார்வைகள் கட்டுரை ஆசிரியருக்கு சொந்தமானவை, யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)