வாகனப் புகை மாசைக் கட்டுப்படுத்த உதவும் சாதனம் கண்டுபிடித்த ஐஐடி பட்டதாரி!
இவர் கண்டுபிடித்துள்ள ’2.5’ என்கிற சாதனத்தை வாகனங்களில் சைலன்ஸர் பைப் அருகில் இணைத்துவிடலாம். இது காந்தம் போல் செயல்பட்டு சுற்றுப்புறத்தில் மாசு ஏற்படுத்தும் துகள்களை ஈர்த்துவிடும்.
காற்று மாசுப்படுவதற்கு வாகனப் புகை உமிழ்வு முக்கியக் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு அரசாங்கங்கள் புதுமையான வழிகளில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. உதாரணத்திற்கு டெல்லி அரசாங்கம் வாகனப் பதிவு எண்களை அடிப்படையாகக் கொண்டு ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன விதிமுறையை 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் 21 கோடி வாகனங்களுக்கும் அதிகமாக இருப்பதாகக் கணக்கெடுப்பு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. சாலையில் பாதியளவு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுவதால் கார்பன் வெளியேற்றம் குறைந்து மாசுப்படுவது ஓரளவிற்கு குறைக்க உதவும் என்றாலும் இது நிரந்தர தீர்வாகாது.
ஐஐடி கரக்பூர் பட்டதாரி ஒருவர் வாகன மாசைக் கட்டுப்படுத்த 2.5 என்கிற சாதனத்தை உருவாக்கியுள்ளார். மெக்கானிக்கல் பொறியாளரான தெபாயன் சாஹா கண்டுபிடித்துள்ள இந்த சாதனத்தை சைலன்ஸர் பைப்பில் இணைத்துவிடலாம். இதன் மூலம் வாகனப் புகை உமிழ்வு குறையும்.
”நாங்கள் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் மின்சார ஆற்றல், அலை ஆற்றல் இரண்டின் கலவையையும் பயன்படுத்தி PM 2.5 போன்ற மாசுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது காந்தம் போன்று செயல்பட்டு சுற்றுப்புறங்களில் மாசுப்படுத்தும் மற்ற துகள்களை ஈர்க்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது மண் போன்று கனமாகி பாதுகாப்பாக தரையில் விழுந்துவிடும்,” என்று ’பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ உடன் தெரிவித்தார் தெபாயன்.
PM 2.5 என்பது காற்றில் காணப்படும் நுண்ணிய துகள்கள். இதனால் நம் கண் முன்னே என்ன இருக்கிறது என்பதைக்கூட பார்க்கமுடியாத சூழல் ஏற்படும். இதன் அளவு அதிகரிக்கும்போது காற்றுப் பனிப்புகை போன்று காணப்படும். இது காற்றை மாசுபடுத்தும் முக்கியப் பொருள் ஆகும். இவை ஆழமாக நுரையீரல் வரை செல்லக்கூடியவை. இதனால் கண், காது, தொண்டை போன்ற பகுதிகளில் எரிச்சல் ஏற்படுத்துவது, இருமல், மூச்சுத்திணறல் போன்ற குறுகிய கால பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆஸ்துமா, இதய நோய் போன்ற தீவிர மருத்துவ பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
தெபாயன் உருவாக்கியுள்ள இந்த சாதனத்தை கார், பேருந்து என எந்தவித வாகனங்களிலும் இணைத்துவிடமுடியும். இந்த சாதனம் காரின் சைலன்ஸரில் இருந்து மட்டுமல்லாது சுற்றியுள்ள மற்ற கார்களில் இருந்தும் மாசுகளை உறிஞ்சிவிடும்.
”சாலையில் செல்லும் ஒரு காரில் இந்த சாதனம் பொருத்தப்பட்டால் உடனடியாக அந்த சுற்றுச்சூழலில் உள்ள மாசு நீக்கப்படும். அருகாமையில் உள்ள சுமார் 10 கார்களில் இருந்து வெளியேறும் மாசு கட்டுப்படுத்தப்படும். இந்தப் பிரச்சனைக் குறித்து ஆழமாக ஆராய்ந்தபோது PM-2.5 நுண்ணிய அளவில் இருப்பதே முக்கிய சிக்கல் என்பது தெரியவந்தது. இதனாலேயே இது எளிதாக நுரையீரலையும் ரத்த ஓட்டத்திலும் சென்று கலக்கிறது,” என்றார்.
தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் க்ளோபல் பயோடிசைன் மாணவராக இருக்கும் தெபாயன் மாசைக் கட்டுப்படுத்துவதற்காக தனது சாதனத்தை வாகனங்களில் இணைக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ScoopWhoop தெரிவிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA