'தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புகிறேன்' - JEE தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்!
இதுவரை இல்லாத அளவு மதிப்பெண்கள் பெற்று சாதனை!
புகழ்பெற்ற மத்திய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்றவற்றில் பொறியியல் படிப்புக்கு சேர, ஜே.இ.இ எனப்படும் JEE நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தேர்வு என்பதால், நாட்டில் இருக்கும் தேர்வுகளில் கடினமான தேர்வாக JEE நுழைவுத் தேர்வு கருதப்படுகிறது. இரண்டு வகையான தேர்வு நடக்கும் இதில் மெயின் தேர்வில் வெற்றி பெறும் முதல் 2.5 லட்சம் மாணவர்கள் JEE அட்வான்ஸ்டு தேர்வை எழுதுவார்கள்.
அந்தவகையில், 2021 JEE அட்வான்ஸ்டு தேர்வுகள் ஜூலை 3ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர், அக்டோபர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு தேர்வை ஐஐடி கரக்பூர் நடத்திய நிலையில், அதன் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதில், முன்னோப்போதும் இல்லாத அளவு அதிகளவு மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார் டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த மிருதுல் அகர்வால் என்ற மாணவர்.
மொத்தம் 1,41,699 பேர் எழுதிய தேர்வில், 360 மதிப்பெண்களுக்கு 348 மதிப்பெண்களைப் பெற்று மிருதுல் அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். ஐஐடி பாம்பேயில் பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விருப்பம் தெரிவித்துள்ள மிருதுல் அகர்வால் வயது 17 மட்டுமே. ராஜஸ்தானைச் சேர்ந்த அகர்வால்,
ஜேஇஇ-மெயின் தேர்வில் 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றார். இவருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
”2021 JEE அட்வான்ஸ்டு தேர்வில் முதலிடம் பெற்ற ஜெய்ப்பூரின் மிருதுல் அகர்வால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இது ஒரு பெரிய சாதனை மற்றும் அவரது கடின உழைப்பு, உறுதியின் விளைவாகும்," என்று முதலமைச்சர் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பெண்கள் பிரிவில் காவ்யா சோப்ரா என்பவர் முதலிடம் பிடித்திருக்கிறார். அவர் 360க்கு 286 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். ஒட்டுமொத்த ரேங்க்கில் 98வது இடத்தில் உள்ளார். இவரும் டெல்லி மண்டலத்தைச் சேர்ந்தவர் தான்.
இதனிடையே, ஆண்கள் பிரிவில் டெல்லியின் தனஞ்சய் ராமன் மற்றும் அனந்த் லூனியா ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர். இந்த ஆண்டு மொத்தம் 1,41,699 பேர் எழுதிய தேர்வில் 41,862 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 6,452 பேர் பெண் மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ஐஐடி கரக்பூர் JEE தேர்வை எழுதவிருக்கிறது.
தேர்வு தொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர்,
“97 வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 42 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களில் ஏழு பேர் தகுதி பெற்றுள்ளனர்," என்றுள்ளார்.
இதனிடையே, தேர்வு தொடர்பாக பேசியுள்ள முதலிடம் பெற்ற மாணவர் மிருதுல் அகர்வால், ஆன்லைன் வகுப்புகளின் போது தான் சந்தித்த சவால்கள் மற்றும் அவற்றை எப்படி சமாளித்தார் என்பது பற்றி பேசினார்.
“ஆரம்பத்தில், நான் சமூக ஊடகங்கள் மற்றும் பிற OTT தளங்களில் நேரத்தை செலவழித்தேன். ஆனால் நிறைய நேரம் வீணடிக்கப்படுவதை நான் உணர்ந்தேன். பின்னர், எனது எதிர்காலத்தை மனதில் வைத்து இதையெல்லாம் விட்டுவிட முடிவு செய்தேன். இதுபோன்ற சவால்களை ஒவ்வொரு மாணவரும் எதிர்கொள்கிறார்கள், ஆனால் நாம் அவற்றைச் சமாளித்து முன்னேற வேண்டும்,” என்கிறார்.
தேர்வுக்கு தயார் செய்கையில், எனது வகுப்பறை தவறுகளை பகுப்பாய்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தினேன். தவறுகளை செய்யும்போது மனச்சோர்வை உணரவில்லை. எனக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு வெகுவாகக் கிடைத்தது. அவர்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
“உலகின் சிறந்த கல்லூரியில் படிக்க விரும்பி இந்தத் தேர்வை முயற்சி செய்தேன். எனது உயர் படிப்புக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புகிறேன்," என்றுள்ளார்.