எல்இடி விளக்குகளில் வெண்ணிற ஒளி வெளிப்படுத்தலை வடிவமைத்த ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள்!
எல்இடி விளக்குகளைப் பயன்படுத்த வெண்ணிற ஒளி உமிழ்வான்களை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர். எல்இடி விளக்குகள் பெரும்பாலும் எல்லா வண்ணங்களிலும் கிடைக்கின்றன. ஆனால், வெண்ணிற எல்இடி விளக்குகள் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் தொழில்நுட்ப மாற்றத்திற்கான விருதினை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சோதனைக் கூடங்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இதர முகமைகளுக்கு நிதியுதவி கிடைக்கும்.
இந்த விருதுக்கான ரூ.30 லட்சம் தொகையை தங்களின் புதிய வகையிலான எல்இடி விளக்குகளை உற்பத்தி செய்ய ஆராய்ச்சியாளர்கள் குழு உத்தேசித்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு வேதி பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் அரவிந்த் குமார் சந்திரன், இயற்பியல் துறை பேராசிரியர் பி.ரஞ்சித் குமார் நந்தா ஆகியோர் வழிகாட்டினர்.
தற்போது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள வெண்ணிற ஒளி உமிழும் எல்இடி விளக்குகள் அதிக செலவு பிடிக்கும் பொருட்களைக் கொண்ட எல்இடி விளக்குகளுக்கு மாற்றாக இருக்கும் என்றும், மின்சக்திக்கான செலவு கணிசமாக மிச்சப்படுத்தும் என்றும் ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் குமார் சந்திரன் தெரிவித்தார்.
இந்தப் பணி மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தித் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் என்று நம்புவதாக அவர் கூறினார். எதிர்காலத்தில் ஒளி உமிழ்வான் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகள் பொதுவான பயன்பாடு தவிர திரவப்படிக பின்புல விளக்குகள், செல்பேசிக்கான உள்விளக்கு, மருத்துவ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான விளக்குகளாக பயன்படுத்தப்படும் என்று டாக்டர் அரவிந்த் குமார் சந்திரன் தெரிவித்தார்.