சணல் மற்றும் கெனாஃப் கொண்டு இயற்கை இழைகளுடன்கூடிய கலவையை உருவாக்கிய ஐஐடி மண்டி குழு!
மக்கும் தன்மை கொண்ட தெர்மோப்ளாஸ்டிக் ஃபைபர் வலுவூட்டப்பட்ட கலவை உற்பத்தியானது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை குறைப்பதுடன் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் உதவும்.
வளர்ச்சி, புதுமை என்கிற பெயரில் நாம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம். 2050-ம் ஆண்டில் பூமி வாழத்தகுதியில்லாத பகுதியாக மாறிவிடும் என்றும் விண்வெளியில் குடியேறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
பூமியின் இயற்கை வளங்களை நாம் வேகமாக அழித்துக்கொண்டிருப்பதால் பல்வேறு நிறுவனங்களும் விஞ்ஞானிகளும் இயற்கைக்கு உகந்த பொருட்களை உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றன.
ஆராய்ச்சி மாணவரான மனோஜ் குமார் சிங் மற்றும் ஐஐடி மண்டி துணை பேராசிரியர் சன்னி சஃபர் தலைமையிலான குழு சணல் மற்றும் கெனாஃப் எனும் பயிர் ஆகியவற்றை பயன்படுத்தி ’மைக்ரோவேவ் க்யூரிங்’ செயல்முறை மூலம் தெர்மோப்ளாஸ்டிக் ஃபைபர் வலுவூட்டப்பட்ட கலவையை உருவாக்கியுள்ளனர்.
சஃபர் மற்றும் அவரது குழு வழக்கமான எஃப்ஆர்பி-க்கு (Fibre Reinforced Plastic) மாற்றாக இதைப் பார்க்கின்றனர். ஏனெனில் இவை மக்கக்கூடியது. அத்துடன் க்ரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தையும் குறைக்கக்கூடியது.
இன்று எஃப்ஆர்பி விண்வெளி அமைப்பு, வாகனங்கள், தொழில்துறை, நுகர்வோர் பொருட்கள் என பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது எடை குறைவானது. அத்துடன் வலிமை, கடினத்தன்மை போன்ற அம்சங்களையும் கொண்டது. கண்ணாடி, கார்பன், அரமிட் போன்றவை சில பொதுவான எஃப்ஆர்பி பொருட்கள் ஆகும்.
ஆனால் உற்பத்தி செலவு அதிகம் என்பதாலும் மக்கும் தன்மை கொண்டதாக இல்லை என்பதாலும் எஃப்ஆர்பி-க்கான மாற்றை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
சஃபர் தனது ஆய்வு குறித்து யுவர்ஸ்டோரி உடன் உரையாடுகையில்,
”இயற்கையான ஃபைபர்கள் கார்பன் ஃபைபர் மற்றும் இதர செயற்கை ஃபைபர்கள் போன்று வலுவாக இருப்பதில்லை. ஆனால் தற்போது நாங்கள் மைக்ரோவேவ் க்யூரிங் முறையைப் பயன்படுத்துகிறோம். இது விலை மலிவானது என்பதுடன் அதிக வெப்பநிலையை வழங்கவும் உதவுகிறது,” என்றார்.
இயற்கையான ஃபைபர்களுடன் இந்தக் கலவைகளை தயாரிப்பதால் பல நன்மைகள் உண்டு. இந்திய கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தப் பொருட்களுக்கு குறைவான ஆற்றல் தேவைப்படும். உற்பத்தி செலவும் குறைவு.
மனோஜ் தங்களின் செயல்பாடுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து சுட்டிக் காட்டுகையில்,
தெர்மோப்ளாஸ்டிக் சார்ந்த இயற்கையான ஃபைபர் வலுவூட்டப்பட்ட கலவைகள் மக்கக்கூடியது. இந்தியாவில் இதுபோன்ற எஃப்ஆர்பி'க்களை உருவாக்குவதால் கூடுதல் ஃபைபர் வகைகள் கிடைக்கும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆற்றல் பயன்பாடு மற்றும் நுகர்வு குறையும். விலை மலிவானது. இப்படி பல நன்மைகள் இதில் உள்ளது,” என்றார்.
ஈரப்பதம் உறிஞ்சுதல், இயற்கையான ஃபைபர் வலுவூட்டப்பட்ட கலைவையில் நீண்ட கால நிலைத்தன்மை குறைவாக இருப்பது உள்ளிட்ட தடைகளை எதிர்கொள்ள மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்கிறார் சஃபர். அதிக சுமை தாங்கும் திறனோ அல்லது அதிக வெப்பநிலையோ தேவைப்படாத செயல்பாடுகளில் இந்தக் கலவையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறைவு.
கட்டுரை : THINK CHANGE INDIA