காற்று மாசைக் கண்காணிக்கும் மலிவு விலை உணர்கருவி உருவாக்கிய ஐஐடி விஞ்ஞானிகள்!
இந்த விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள காற்று மாசுக் கண்டறியும் உணர்கருவியின் விலை 50,000 ரூபாய் மட்டுமே. ஆனால் சர்வதேச சந்தையில் இதே போன்ற உணர்கருவியின் விலை 1-2 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய நகர்ப்புறங்களில் மாசுப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் நெல் வைக்கோல் எரிப்பது தடை செய்யப்பட்டது முதல் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது வரை மாசுப் பிரச்சனையைக் கையாள அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பலரும் பல்வேறு தீர்வுகளை உருவாக்கி வரும் நிலையில் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களும் புதுமையான தீர்வுகளை முன்வைத்து வருகிறது. ஐஐடி கான்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மலிவு விலை காற்று மாசு உணர்கருவிகளை உருவாக்கியுள்ளனர். வணிகரீதியாக இத்தகைய கருவிகள் சர்வதேச சந்தையில் 1-2 கோடி ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் இந்த உணர்கருவிகளின் விலை 50,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என என்டிடிவி தெரிவிக்கிறது.
இந்த உணர்கருவிகள் ஓசோன், நைட்ரஜன் ஆக்சைட் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவைக் கணக்கிடக்கூடியது என பேராசிரியர் எஸ் என் திரிபாதி தெரிவித்தார்.
’நியூஸ் நேஷன்’ செய்தியில் பேராசிரியர் திரிபாதி தெரிவிக்கையில்,
இந்திய-அமெரிக்க திட்டம் ஒன்றின்கீழ் நம்பகமான அதேசமயம் விலை மலிவான, கண்காணிக்கும் உணர்கருவிகளை உருவாக்கும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தத் திட்டத்திற்காக 6 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
ஜூன் மாதம் இந்த உணர்கருவிகள் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதில் வெற்றி பெற்றதும் சுமார் 150 நகரங்களில் இவை பொருத்தப்படும். முதல் 25 உணர்கருவிகள் ஐஐடி கான்பூர் வளாகத்தில் பொருத்தப்படும். மேலும் 15 உணர்கருவிகள் ஐஐடி மும்பை வளாகத்தில் பொருத்தப்படும் என இந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் ஆராய்ச்சி டீன் மற்றும் முன்னாள் பேராசிரியரான பிவி ஃபாதி கூறுகையில்,
“மாசைக் குறைக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
அவர் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி, ”நாட்டில் மாசின் அளவு கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மாசு காரணமாக சுமார் 1.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் மென்மேலும் அதிகரித்து வருகிறது,” என்றார்.
இந்தத் திட்டம் அடுத்தடுத்த நிலையில் வளர்ச்சியடைந்து சிங்கப்பூர், ஜப்பான், சீனா, யூஏஈ போன்ற நாடுகளும் இதில் இணைத்துக்கொள்ளப்படும்.
கட்டுரை : THINK CHANGE INDIA