2019ல் இணையத்தில் இந்திய மொழிகளுக்கு காத்திருக்கும் வளர்ச்சி!
ஷேர்சேட், டெய்லிஹண்ட் உள்ளிட்டவை மட்டும் அல்லாமல், கூகுள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும், கிராமப்புறங்களை சார்ந்த பாரதத்தை நோக்கி கவனம் செலுத்த துவங்கியுள்ளன.
கடந்த ஆண்டில் பல்வேறு போக்குகள் ஆதிக்கம் செலுத்தின. இவற்றில் சில குறுகிய கால நோக்கிலானவை என்றாலும் சில வரும் ஆண்டுகளில் வர்த்தக போக்கின் மீது தாக்கம் செலுத்தக்கூடியவை. அந்த வகையில் பார்க்கும் போது, 2018 ல் கவனத்தை ஈர்த்த போக்காக, பாரதத்தின் எழுச்சி, அதாவது கிராமப்புற இந்தியாவின் எழுச்சி அமைந்திருந்தது. பாரதம் அல்லது இந்தியா 2.0 என்பது ஈர்ப்பு மிக்க வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது.
உள்ளூர் மொழிகளில் கவனம் செலுத்தும் ஷேர்சேட், டெய்லிஹண்ட் மற்றும் பிரதிலிபி ஆகிய நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி கண்டன. பயனாளிகள் மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களும் இந்த நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்தனர்.
இந்த நிறுவனங்களுக்கான பொதுவான அம்சம் அவை இந்திய மொழிகளில் கவனம் செலுத்துவது தான். மேலும், கல்வி ஸ்டார்ட் அப்கள் மற்றும் செய்தி திரட்டிகள் உள்ளிட்டவையும் இந்திய மொழிகளில் ஆர்வம் செலுத்தத் துவங்கியுள்ளன. அடுத்த கட்ட வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட சேவைகளால், முதல் முறையாக இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பை பெறும் இந்தியர்களாக இந்த வாடிக்கையாளர்கள் அமைந்துள்ளனர். இவர்களை விவரிக்க வேண்டும் எனில், சரளமாக ஆங்கிலம் பேச முடியாதவர்கள், சிறிய நகரங்களில் வசிப்பவர்கள், தங்கள் மொழிகளில் கல்வி மற்றும் இ-காமர்ஸ் உள்ளடக்கத்தை விரும்புகிறவர்கள் என குறிப்பிடலாம்.
அதிகரிக்கும் இணைய பயனாளிகள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிராய் வெளியிட்ட அறிக்கை, ஜூன் மாதத்தில் மொத்த இணைய பயனாளிகள் எண்ணிக்கை 512.26 மில்லியனாக இருப்பதாக தெரிவித்தது. 2016ல் இது 426 மில்லியனாக இருந்தது. 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானது.
இணைய பயனாளிகளில் 95.78 சதவீதத்தினர் மொபைல் போன்கள் மூலம் இணையத்தை அணுகுவதாகவும் டிராய் அறிக்கை தெரிவித்தது.
இப்படி பயனாளிகள் பரப்பு பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில் போனில் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை. இவர்களில் பலர் முதல் முறை பயனாளிகள் என்பதால், அவர்கள் போன் மூலம் உள்ளடக்கத்தை அணுகுகின்றனர். இந்த நிலையில், முதல் முறை பயனாளிகளுக்கான உள்ளடக்கம் அதிகம் இல்லை என பல நிறுவனர்கள் கருதுகின்றனர்.
இந்த இடைவெளியை போக்குவதற்காக மேலே சொன்ன பல நிறுவனங்கள் பிறந்தன. என்ணிக்கையும் இதை உணர்த்துகிறது.
இந்தியாவின் டிஜிட்டல் விளம்பர சந்தை 2 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. இது சீனா (70 பில்லியன் டாலர்), அமெரிக்கா (104 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகளைவிட குறைவு என்றாலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் 50 கோடி புதிய இணையவாசிகளுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை அளிப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த பிரிவில் போட்டியும் தீவிரமாகியுள்ளது. எனினும், இப்போது வருவாயை விட பயனாளிகளை கவர்வதே முதல் இலக்காக இருக்கிறது.
ஸ்டார்ட் அப்களில், செய்தி திரட்டியான டெய்லி ஹண்ட், இந்த பிரிவில் முதலில் நுழைந்த சாதகத்தில் 100 மில்லியனுக்கு மேல் பயனாளிகளை பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் 40 மில்லியன் டாலர் வருவாய் பெற உள்ளதாக தெரிவிக்கிறது.
இதுவே முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனர்கள் உள்ளடக்கத்தை நெருக்கமாக கவனிப்பதற்கான காரணமாக அமைகிறது. இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், சீன நிறுவனங்களும் கிராமப்புற இந்தியா மீது கவனம் செலுத்துகின்றன.
சீனாவின் ஆர்வம்
சில மாதங்களுக்கு முன், யுவர் ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சீனாவின் அலிபாபா குழும குழுவை பெங்களூருவில் சந்தித்த போது, அவர்கள் இந்திய நிறுவனங்களில், குறிப்பாக உள்ளடக்கம் சார்ந்தவற்றில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தன.
கடந்த ஓராண்டில் பல வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் இந்தியாவில் முதல் முதலீட்டை மேற்கொண்டுள்ளன அல்லது முதலீட்டை அதிகமாக்கியுள்ளன.
ஷுன்வேய் கேபிடல் நிறுவனம், இந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் வோகல் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இந்நிறுவனம், பதிப்பக மேடையான பிரதிலிபியிலும் முதலீடு செய்துள்ளது.
செய்தி திரட்டி மொழி சேவையான நியூஸ்டாக், டென்செண்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 50 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. வோகர்ல் 6.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. ஷேர்சேட் இரண்டு சுற்றுகளில் 118 மில்லியன் திரட்டியது. டெய்லிஹண்ட் 6.5 மில்லியன் டால திரட்டியது.
ஜியோ விளைவு
இதை ஜியோ விளைவு என அழைக்கலாம். ஆனால் இந்தியர்கள் இணையத்தை நேசிக்கின்றனர். ஜியோவுக்கு முன் மற்றும் பின் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இது அமைந்துள்ளது. இலவசப் பரிசுகள் மற்றும் சலுகைகள் மூலம் ரிலையன்ஸ் இதை சாதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூனில் 215.25 மில்லியன் இணைய சந்தாரர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ 42 சதவீத சந்தை பங்கை பெற்றிருந்தது. இதில் தான் பாரதம், அதாவது கிராமப்புறம் சார்ந்த இந்தியாவுக்கான திறவுகோள் உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோ சந்ததாரர் எண்ணிக்கை 400 மில்லியனை தொடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஜியோ இணைய சேவை தவிர, தனது ஸ்மார்ட்போனையும் சாதாரண போனையும் அறிமுகம் செய்துள்ளது.
“ ஜியோ விளைவு நம்முடையது பெரிய சந்தை என்பதை உணர்த்தியுள்ளது. உள்ளூர் டிஜிட்டல்மயமாக்கல் என்பது இனியும் தொலைதூர கனவு அல்ல: அது வேகமாக நிகழ்ந்து வருகிறது,” என்கிறார் பிரைம் வென்சர்ஸ் பாட்னர்ஸ் நிர்வாக பாட்னர் சஞ்சய் சாமி.
700 முதல் 800 மில்லியன் பயனாளிகளுக்கான வாய்ப்பை கொண்ட இந்திய சந்தையில் மொழி தான் முதலில் கடக்க வேண்டிய தடை என்கிறார் அவர். கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை பெறக்கூடிய அளவுக்கு உள்ளூர் உள்ளடக்க சந்தை இன்னும் வளராத நிலையில் இது தங்கச்சுரங்கமாக கருதப்படுகிறது.
2018 இந்த போக்கின் துவக்கமாக அமைந்தாலும், 2019 ல் பெருமளவு செயல்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இணைய பயனாளிகள் மத்தியில், உள்ளூர் மொழி உள்ளடக்கம், ஆங்கில மொழி உள்ளடக்கத்தை மிஞ்சும் வாய்ப்புள்ளது.
“இதற்கு சீரான தன்மை, காலம் மற்றும் பொறுமை தேவை’ என்று ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஆலோசகர் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார். இந்த மூன்று அம்சங்கள் மற்றும் முதலீட்டை கொண்டுள்ள நிறுவனங்கள் வெற்றி பெறும் என்கிறார் அவர்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்