உயர்திறன் சூரிய சக்திப் பொருட்களுக்கும் ஊக்கத் தொகை – முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு!
முதலீட்டுகளை ஈர்ப்பதற்கான ரீ-இன்வெஸ்ட் 2020 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.
"இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழு திறனையும் வெளிப்படுத்த மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் தலைமுறை திறனையும் வலையமைப்பையும் விரிவுபடுத்துகிறோம்," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் நடத்தப்படும் மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சி, 2020 நவம்பர் 26 முதல் 28 வரை நடைப்பெற்றது. அதன்படி முதலீட்டுகளை ஈர்ப்பதற்கான ரீ-இன்வெஸ்ட் 2020 மாநாட்டை 26-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
75-க்கும் அதிகமான சர்வதேச அமைச்சர் குழுக்கள், 1,000-க்கும் அதிகமான சர்வதேச தொழில்துறை தலைவர்கள், மற்றும் 50,000 பிரமுகர்கள் இதில் பங்கேற்கின்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டை உலகளவில் அதிகரித்தல் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை இந்திய எரிசக்தித் துறையினருடன் இணைத்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும். ’நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்' என்பது ரீ இன்வெஸ்ட் 2020-இன் மையக்கருவாகும்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
“கடந்த ஆறு வருடங்களாக இணையில்லா பயணம் ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் அவரது திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வரும் வகையில் அவருக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவின் மின்சார உற்பத்தி திறனும், விநியோகத் திறனும் விரிவாக்கப்பட்டு வருகிறது. நம்முடைய மொத்த உற்பத்தி திறனில் 36 சதவீதமாக, அதாவது 136 ஜிகாவாட்டுகளாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் தற்போது உள்ளது,” என்றார்.
"தொழில் செய்வதை எளிதாக்குவது" எங்களது முக்கிய முன்னுரிமை. முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக பிரத்யேக திட்ட மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. அடுத்த தசாப்தத்திற்கான மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் தயாராக உள்ளன. வருடத்திற்கு 20 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் வர்த்தக வாய்ப்புகளை இவை உருவாக்கும்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தில் இணையுமாறு முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் புதுபிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிக வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
2017 முதல் நிலக்கரி சார்ந்த மின்சாரத்தை விட இந்தியாவின் வருடாந்திர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அதிகரித்து வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
மின்னணு பொருட்கள் தயாரிப்புத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற ஊக்கத்தொகைகளை உயர்திறன் சூரிய சக்திப் பொருட்களுக்கும் தர நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்த மோடி, அதுகுறித்து விரிவாக விளக்கவில்லை.
தகவல்: பிடிஐ | தமிழில்: மலையரசு