48% இந்திய பெண்கள் குடும்பத்தை கவனிக்க பணியில் இருந்து பாதியில் விலகுவதாக ஆய்வில் தகவல்!
பணிச் சூழலில் பெண்கள் பங்கேற்பது அதிகரித்திருக்கும் நிலையில், பணியில் இருந்து விலகிய பின் பெண்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவதில் பல சவால்களை எதிர்கொள்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்களின் வேலைவாய்ப்புத் தன்மை அதிகரித்து வருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ) வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. சீராக சம்பளம் பெறும் பணியாளர்கள் மத்தியில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை என்.எஸ்.ஓ அறிக்கை உணர்த்தியுள்ளது.
என்.எஸ்.ஓ அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கால அளவிலான தொழிலாளர் சர்வே, சீராக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினர் மத்தியிலும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது.
புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தின் ஒரு பிரிவான என்.எஸ்.ஓ, வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2019 மார்ச் வரையான காலாண்டில், ஊதியம் பெறும் பிரிவினர் மத்தியில் பெண்களின் பங்கு நகர்புறங்களில் 58.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இணையான காலத்தில் இது 56.1 சதவீதமாக இருந்தது. ஆண்களின் வேலைவாய்ப்பு 2019 மார்ச் காலாண்டில் 47.9 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் இது 46.4 சதவீதமாக இருந்தது.
“நகர்ப்புறங்களில் பெண்களின் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு தன்மையையும், வேலைவாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையையும் இது உணர்த்துகிறது. பொருளாதார செயல்பாட்டில் பெண்களின் பங்கு அதிகரித்திருப்பது வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்திருப்பதை உணர்த்துகிறது,” என்று அவதார் குழுமத்தின் நிறுவனரும், சமூக தொழில்முனைவோருமான டாக்டர்.செளந்தர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
இந்திய பணியிடங்களில் பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை உருவாக்கும் நோக்கத்துடன் ’அவதார் குழுமம்’ செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இரண்டாம் வேலைவாய்ப்பு கிடைக்கச்செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
எனினும், பணிச் சூழலில் பெண்கள் இணைய தடையாக இருப்பது, பெரும்பாலான வேலைவாய்ப்புகள் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் அமைந்திருப்பது ஒரு தடையாக இருக்கிறது.
“வேலைவாய்ப்பு அளிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள், அமைப்பு சாரா மற்றும் சிறிய நிறுவனங்கள் துறையில் அமைந்துள்ளன. எம்.எஸ்.எம்.இ ஆண்டு அறிக்கை படி, 2018-19 ல் இந்தியாவில் உள்ள 55 % எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் நகர்புறங்களில் செயல்படுகின்றன. இத்துறையில் பெண்களின் வேலைவாய்ப்பு 24% ஆக இருக்கிறது. எம்.எஸ்.எம்.இ துறை, பெண்களின் வேலைவாய்ப்புத்திறனை கவனத்தில் கொண்டால், இந்தத் துறை பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் பெண்கள் பணியாற்றுவதற்கு சிறந்த 100 நிறுவனங்களில், பெண்களின் வேலைவாய்ப்பு 2018ல் 31% ல் இருந்து 2019ல் 33% ஆக உயர்ந்துள்ளது. பெண்கள் பணியாற்றுவதற்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியல் உருவாக்கப்பட்டது முதல் இந்நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்திருக்கிறது.
இதனிடையே, அவ்தார் அமைப்பு வெளியிட்டுள்ள ’வியூபாயிண்ட் 2019’ அறிக்கை,
இந்திய பெண்களில் 48% பேர், குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக பணியில் இருந்து பாதியில் விலகி கொள்வதாக தெரிவிக்கிறது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 783 பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. பணியில் இருந்து பாதியில் விலகும் பெண்களில் 45% பேர், தாய்மை பொறுப்பு காரணமாக விலகுகின்றனர், 36% பேர் மகப்பேறு காரணமாக விலகுகின்றனர்.
வீட்டில் போதிய ஆதரவு இல்லாதது பெண்கள் மீண்டும் பணிக்கு திரும்ப தடையாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 23% பேர் வீட்டில் ஆதரவின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்றால், 59% பேர் போதிய வலைப்பின்னல் தொடர்புகள் இல்லா சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். 36% பேர் திறன் இடைவெளியை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் பணிக்கு திரும்ப விரும்பும் பெண்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. 69% பேர் பணியில் இருந்து விலகியிருந்த காலத்தில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.
”சீரான முன்னேற்றம் இருந்தாலும், பல்வேறு துறைகள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பெண்களுக்கு நட்பான கொள்கைகளை அமல் செய்வது அவசியம். இது நிறுவனங்கள் செயல்பாட்டை அதிகரிக்க உதவுவதோடு, உலகப் பெண்கள் பணிச் சூழல் வரைபடத்தில் இந்தியாவின் நிலையையும் மேம்படுத்தும்,” என்று செளர்ந்தர்யா ராஜேஷ் கூறுகிறார்.
தொகுப்பு; சைபர்சிம்மன்