சுயேட்சை எம்.எல்.ஏ டூ தமிழக சட்டசபை சபாநாயகர் ஆன அப்பாவு!
16வது தமிழக சட்டசபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அப்பாவுவின் பின்னணி என்ன?
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழக முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் 33 அமைச்சர்களும் மே 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டு தங்களின் இலாக்காக்களில் பொறுப்பேற்று செயல்படவும் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், 16வது சட்டப்பேரவையின் சட்டசபை கூட்டத் தொடரானது கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பொறுப்பிற்கான தேர்வு நடைபெற்றது. திமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவுவும், துணை சபாநாயகர் பொறுப்பிற்கு கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று 12 மணியோடு மனு தாக்கலுக்கான நேரம் முடிவடைந்த நிலையில், இருவரும் போட்டியின்றி அந்தப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் அப்பாவு பற்றி...
புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சபாநாயகர் அப்பாவு-க்கு வயது 69, அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளாராக 1996 தேர்தலில் வெற்றி பெற்ற அப்பாவு, அதன்பின்னர் 2001 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், தி.மு.கவில் இணைந்தவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.
2011 தேர்தலில் ராதாபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு தி.மு.க விட்டுக் கொடுத்தது. அதன் பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் 49 வாக்குகள் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தோற்றார். எனினும் அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாகவே திமுக கருதியது. தொடர்ந்து இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தினார்.
தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து வந்தாலும் திராவிட கொள்கைகளில் உறுதியான பிடிப்புள்ளவராக பார்க்கப்படும் சட்டசபையிலும் நீண்ட அனுபவம் உள்ளவராகக் கருதப்படுகிறார்.
விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்புக் குரல் என பல்வேறு போராட்டங்களை முன்எடுத்தவர் அப்பாவு. மேலும் கடந்த ஆட்சி போல சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படாமல் நடுநிலையோடு நடந்து கொள்வதற்கு அப்பாவு சரியான தேர்வு என்பதால் அவர் சபாநாயகர் பதவிக்கு திமுகவால் முன்னிறுத்தப்பட்டு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை சபாநாயகர் பொறுப்பிற்கு தேர்வாகி இருக்கும் கு. பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்டம் , கீழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக சார்பில் 4 முறை வெற்றி பெற்று சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார். 1996ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து எல்லா கட்சிகளையும் சேர்ந்த புதிய எம் எல் ஏ-க்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அதிமுக சார்பில் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.