ஆஸ்திரேலியாவின் 32 ஆண்டு கால சாதனையை தகர்த்த இந்தியா – நாடே கொண்டாடும் வெற்றி!
சாதித்த இளம்படை!
வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளனர் இந்திய இளம் படையினர்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. இந்த இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணி, 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கியது. ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டினார். அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். இந்நிலையில் ஷுப்மான் கில் ஆட்டமிழக்க, அணியின் ஸ்கோர் 132 ஆக இருந்தது.
ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்தடுத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது இந்தியா.
கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இதுதான் அந்த அணி பெற்ற முதல் தோல்வி.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியத் தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ 5 கோடி ரூபாய் போனஸ் அறிவித்திருக்கிறது. குடியரசுத்தலைவரும் இந்திய அணியின் வெற்றியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
இதில் மற்றொரு ஸ்பெஷலாக,
"இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ள காபா மைதானம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கோட்டையாக இருக்கலாம். ஆனால் அங்கும் இந்திய அணியின் வெற்றிக்கொடி பறக்கும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை," என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், காபா டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்திய அணியின் இந்த வெற்றியை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது… வாழ்த்துகள் இந்தியா!