முதலீட்டாளர் நட்புமிக்க நாடாக இந்தியா திகழ்கிறது: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பெருமிதம்!
பிரிக்ஸ் நாடுகள் வர்த்தக அமைப்பின் நிறைவு விழாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார மந்த நிலையை மீறி, பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா உலகின் மூன்றாவது வெளிப்படையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு நட்பான நாடாக இருப்பதாக, BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னமெரிக்கா) அமைப்பு நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறும், இந்தியாவில் உள்ள எல்லையில்லா மற்றும் எண்ணிலடங்கா வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த ஐந்து நாடுகள் ஒரு அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது, பொருளாதார மந்த நிலையை மீறி பொருளாதார வளர்ச்சி ஏற்பட வழி செய்திருப்பதாக தெரிவித்தார்.
அரசியல் ஸ்திரத்தன்மை, கணிக்கக் கூடிய கொள்கைகள், வர்த்தகர்களுக்கு நட்பான சீர்திருத்தம் ஆகியவை காரணமாக, உலகில் மிகவும் வெளிப்படையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு நட்பான நாடாக இந்தியா திகழ்கிறது. 2024ல், இந்தியாவை 5 லட்சம் கோடி பொருளாதாரமாக உருவாக்க விரும்புகிறோம். உள்கட்டமைக்குக்கு மற்றும் 1.5 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இந்தியா எல்லையில்லா மற்றும் எண்ணிலடங்கா வாய்ப்புகள் கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட பிரதமர், பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
"இந்தியாவில் தங்கள் இருப்பை உருவாக்கி, வளர்த்துக்கொளுமாறு பிரிக்ஸ் நாடுகளை கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
"பிரிக்ஸ் நாடுகள், உலகின் 50 சதவீத பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன. உலகில் தேக்கநிலை இருப்பதை மீறி, பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கி, லட்சக்கணக்கானோர்களை வறுமையில் இருந்து விடுவித்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமையில் புதிய மைல்கற்களை படைத்து வருகின்றன. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப்பிறகு, எதிர்காலத்தில் நம்முடைய முயற்சிக்கான திசைக்காட்டியாக இந்த அமைப்பு திகழ்கிறது,” என்றும் அவர் கூறினார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை எளிமையாக்குவது பர்ஸ்பரம் முதலீடு மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
"வரி மற்றும் சுங்க இலாகா நடைமுறைகள் ஐந்து நாடுகளுக்கு இடையே எளிமையாக வருகின்றன. அறிவுச்சொத்துரிமை மற்றும் வங்கிகள் இடையிலான கூட்டு முயற்சி காரணமாக, வர்த்தகச் சூழல் மேம்பட்டிருக்கிறது. இவற்றால் உண்டாக்கப்படும் வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளத் தேவையான வர்த்தக நடவடிகைகளை ஆய்வு செய்யுமாறு அமைப்பை கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
"அடுத்த பத்தாண்டுகளுக்கு, வர்த்தகத் துறையில் நமக்கான முன்னுரிமை துறைகளையும் கண்டறிய வேண்டும் மற்றும் இதனடிப்படையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பிரிக்ஸ் நாடுகளின், சந்தை பரப்பு, பல வகைத்தன்மை மற்றும் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் தன்மை ஆகியவை, எல்லோருக்கும் பயன் அளிக்கக் கூடியது என்றும், இத்தகைய தன்மையை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"ஒரு பிரிக்ஸ் நாடு தொழில்நுட்பம் கொண்டிருந்தால், மற்றொரு நாடு மூலப்பொருள் அல்லது சந்தையை கொண்டுள்ளது. மின்சார வாகனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், விவசாயப் பொருட்கள், உணவு பதப்படுத்தல் ஆகியவற்றில் இத்தகைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த அம்சங்களை ஐந்து நாடுகளிலும் கண்டறிய வேண்டும். இந்த அம்சங்களின் அடிப்படையில் கூட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட கூடிய ஐந்து துறைகள் அடுத்த பிரிக்ஸ் மாநாட்டிற்குள் கண்டறியப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று பிரதமர் கூறினார்.
"பிரிக்ஸ் நெட்வொர்க், பிரிக்ஸ் இன்ஸ்டிடியூஷன் பார் பியூச்சர் நெட்வொர்க் ஆகிய முக்கிய முயற்சிகள் பிரிக்ஸ் மாநாட்டில் பரிசீலிக்கப்படும். மனிதவளம் சார்ந்த இந்த முயற்சிகள் தனியார் துறை இணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இளம் தொழில் முனைவோர்கள் இந்த முயற்சியுடன் இணைவது, வர்த்தகம் மற்றும் புதுமையாக்கத்திற்கு வலு சேர்க்கும்,” என்றும் மோடி கூறினார்.
இந்தியர்களுக்கு, பிரேசில் நாட்டில் விசா இல்லாத அனுமதி அளித்ததற்காக அந்நாட்டு அதிபர் ஜேர் போல்சோனரோவுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உலகின் முன்னணி ஐந்து பொருளாதார நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் 11வது பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றுள்ளார்.
செய்தி : பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்