'India MSME Summit 2022' – சிறு தொழில் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடும் வழிகள்!
இந்தியா எம்.எஸ்.எம்.இ மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், வல்லுனர்கள், நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடும் வழிமுறைகள் பற்றி பேசினர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக யுவர்ஸ்டோரியின் அங்கமான எஸ்.எம்.பி ஸ்டோரி, இந்தியாவின் குறு, சிறு தொழில் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்காக 'India MSME Summit' 'இந்தியா எம்.எஸ்.எம்.இ' மாநாட்டை நடத்தி வருகிறது.
சிறுதொழில்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மாநாடு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ஜூன் 21 முதல் 27 வரையான ஒரு வார கொண்டாட்டத்தின் போது, நாங்கள் எம்.எஸ்.எம்.இ துறையினர், துறை வல்லுனர்கள், வர்த்தகச் சங்கங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றிடம் துறையின் வாய்ப்புகள், சவால்கள் பற்றி பேசி வருகிறோம். இந்த மாநாடு, 27 ம் தேதி, இந்திய எம்.எஸ்.எம்.இ தினத்தில் கோலாகலமாக நிறைவடைகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாள் அன்று, ’சுயநிதியை கடந்து எஸ்.எம்.பி நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பது’ எனும் தலைப்பில் வல்லுனர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பி.எஸ்.இ மற்றும் எம்.எஸ்.இ ஆகிய பங்குச்சந்தைகள் இந்திய நடுத்தர மற்றும் சிறுதொழில்கள் பட்டியலிடுவதற்கான பிரத்யேக மேடைகளை உருவாக்கி பத்தாண்டுகள் ஆகும் நிலையில், பொதுவெளியீடுகள் மூலம் சந்தையில் பட்டியலிடும் எஸ்.எம்.பி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
மேலும், பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பாக எஸ்.எம்.இ நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் ஆர்வம், இந்த ஆண்டை எஸ்.எம்.இ நிறுவனங்கள் பட்டியலிடுவதற்கான ஆண்டாக மாற்றுமா என எதிர்பார்க்க வைத்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடுவது தொடர்பான பொதுவான கேள்விகளுகு எஸ்.எம்.பி ஸ்டோரி வல்லுனர்களிடம் விடை நாடியது.
இந்த மாநாட்டில், Priti இண்டர்நேஷனல் நிறுவனர், முதன்மை நிதி அதிகாரி ரிதேஷ் லோகியா மற்றும் நெர்வோடெக் பவர்சிஸ்டம்ஸ் நிறுவனர், நிர்வாக இயகுனர் ராமன் பாட்டியா ஆகியோர், சிறு தொழில் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீட்டிற்கு தயாராவது பற்றி பேசினர்.
இந்த உரையாடலின் சாரம்சம் வருமாறு:
திட்டம் தேவை: நல்ல திட்டம் மற்றும் தொலைநோக்கு உள்ள சிறு தொழில்கள் மட்டுமே பங்குச்சந்தையில் வெற்றி பெற முடியும் என ராமன் தெரிவித்தார். மேலும், பட்டியலிடுவதற்கான காரணம் குறித்தும் நிறுவனருக்கு தெளிவு வேண்டும் என்றார்.
அறியப்படுதல்: பங்குச்சந்தையில் பட்டயலிடுதல், நிறுவனம் மற்றும் அதன் பொருட்களுக்கு அறியப்படும் தன்மையை கொண்டு வருவதாக ரிதேஷ் கூறினார். இதற்கு உதாரணமாக அவர் தனது நிறுவனம் பட்டியலிடப்படுவதற்கு முன் சர்வதேச சந்தையில் மட்டும் இருப்பு கொண்டதாகவும், ஆனால் என்.எஸ்.இ. மேடையில் பட்டியலிடப்பட்ட உடன் உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்தும் ஆர்டர்கள் வரத்துவங்கின என்றார்.
புதிய துவக்கம்: சந்தையில் பட்டியலிடுவது என்பது புதிய துவக்கமே தவிர முடிவு அல்ல என்று ராமன் கூறினார். பல்வேறு வாய்ப்புகளுக்கான கதவுகளை திறந்து விட்டு, பிராண்ட் உருவாக்கம், வர்த்தகக் கூட்டு உள்ளிட்டவற்றில் இது உதவும் என்றார்.
வெளிப்படைத் தன்மை : நிறுவனத்தை சந்தையில் பட்டியலிடுவது, நிதி கணக்குகள் மற்றும் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்க வைக்கும். துவக்கத்தில் இருந்து உங்கள் நிறுவன அடிப்படை அம்சங்கள் தெளிவாக இருந்தால், அவற்றை நீங்கள் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தால், பொது வெளியீட்டில் உங்களுக்கு எந்த சிக்கலும் வராது என்கிறார் ராமன்.
எஸ்.எம்.இ பிரத்யேக மேடை பற்றி பேசிய ரித்தேஷ், இது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொடக்கப்பள்ளி போன்றது என்றார். இதில் பட்டியலிடப்படுவது எந்த நிறுவனத்தையும், பிரதான சந்தையில் உள்ள சவால்கள், வாய்ப்புகளுக்கு தயாராக வைக்கும் என்றார்.
ஆங்கிலத்தில்: பவ்யா கெளஷல் | தமிழில்: சைபர் சிம்மன்