India MSME Summit: புதிய இயல்பு நிலையில் மேட்-இன்-இந்தியா பிராண்டுகள் கவனம் ஈர்க்கப் போவது எப்படி?
இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு முதல் நாளில் புதிய இயல்பு நிலையில் இந்திய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளும் முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
கடந்த நான்காண்டுகளாக யுவர்ஸ்டோரியின் ஒரு பகுதியான எஸ்எம்பி ஸ்டோரி 'இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு’ (India MSME Summit) ஏற்பாடு செய்து வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக உருவாகி வரும் வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும் நோக்கத்தும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நம் பொருளாதார வளர்ச்சியில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது மாறிவரும் வணிக சூழலைப் புரிந்துகொண்டு அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து துரிதமாக செயல்பட இந்த துறைக்கு வழிகாட்டல் தேவைப்படுகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் புதிய இயல்பு நிலையில் எப்படி வளர்ச்சியடைகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.
ஜூன் 21-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை ஒருவார காலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தத் துறை சார்ந்த வாய்ப்புகளைப் பற்றியும் சவால்களைப் பற்றியும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள், துறை சார் நிபுணர்கள், சங்கங்கள், அரசு அமைப்புகள் போன்றோருடன் கலந்துரையாடல் நடந்து வருகிறது.
முதல் நாள் நடைபெற்ற மாநாட்டில் சந்திரகாந்த் சலுன்கே – தலைவர், SME Chamber of India; தினேஷ் ஜெயின் – நிறுவனர் மற்றும் தலைவர், Insight Cosmetics; ஸ்துதி குப்தா – Amrutam; ஃபர்மன் பெய்க் – நிறுவனர், Wat-a-Burger ஆகியோருடன் உரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கவனிக்கவேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் இதோ:
தொலைவிலிருந்து பணியாற்றும் முறையைப் புரிந்துகொள்ளவேண்டும்: வணிகங்கள் தொலை தூரத்திலிருந்து பணியாற்றும் வாய்ப்பை பெருந்தொற்று சூழல் வழங்கியிருக்கிறது. இன்று ஆன்லைனில் வணிகத்தை நடத்தி வளர்ச்சியடைவது எளிதாகியிருப்பதை பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். மேலும், வலுவான மார்க்கெட்டிங் செயல்பாடுகள் மூலம் பிராண்டை சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்கள்.
தொழில்முனைவு அதிகரித்துள்ளது: கடந்த சில ஆண்டுகளில் மக்கள் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவே தொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சுவாரஸ்யமான போக்கு தற்போது காணப்படுகிறது. சந்தையை புரிந்துகொண்டு தொழில் தொடங்க இது சரியான நேரம் என்று பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
தாக்கத்தை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்: ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து மனித வளம்தான். எனவேதான் ஊழியர்களுக்காக அதிகம் முதலீடு செய்வது அவசியமாகிறது. ஊழியர்கள், பணியமர்த்தியவர்கள் என நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் சவால்களை ஒன்றாக ஏற்றுக்கொண்டு சந்திக்கவேண்டும் என்று குழுவில் உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர்.
நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது முக்கியம்: இந்திய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் முதலீட்டாளர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர் போன்றோரை ஈர்க்க நம்பகத்தனமையை ஏற்படுத்திக்கொள்வது முக்கியம். வெற்றிக்கான மார்க்கத்தை முறையாக திட்டமிடவேண்டும்.
இந்தியாவிற்கு சிறப்பாக எதிர்காலம் உண்டு: அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவிற்கானது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வணிகத்தில் வெற்றிபெற, தொழில்முனைவோர் வலுவான நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கின்றனர் பேச்சாளர்கள்.
உலகமே இந்திய பிராண்டுகளை மீது அதிக கவனம் செலுத்த உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ என்பது வெறும் டேக்லைன் அல்ல, இன்றைய புதிய இயல்பு நிலை எல்லா வணிகங்களுமே உலகளவில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா