2026க்குள் இந்தியாவில் சுமார் 33 கோடி 5ஜி பயனாளர்கள்: புதிய அறிக்கை!
4 ஜி பயனாளர்களும் அதிகரிக்கலாம்!
2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் சுமார் 330 மில்லியன் அதாவது 33 கோடி 5 ஜி தொழில்நுட்ப பயனாளர்கள் இருப்பார்கள். இது நாட்டின் மொபைல் சந்தாதாரர்களில் 26 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஜியோ நிறுவனம் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபாடு காட்டி வருகிறது. இந்நிலையில்தான், இந்தியாவில் வருகிற 2026ம் ஆண்டு 5ஜி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 33 கோடியாக இருக்கும் என்று எரிக்சன் மொபிலிட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே அறிக்கையில்,
“இந்த தொழில்நுட்பம் கிடைத்த முதல் ஆண்டில் இந்தியாவில் குறைந்தது 40 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் 5ஜி சேவையை எடுத்துக்கொள்ளலாம். 5ஜி இணைப்பிற்கான 10 சதவிகித பிரீமியத்துடன் ஒப்பிடும்போது, தொகுக்கப்பட்ட டிஜிட்டல் சேவைகளுடன் 5ஜி திட்டங்களுக்கு 50 சதவீதம் கூடுதலாக செலுத்த பயனாளிகள் தயாராக உள்ளனர். மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 67 சதவீத பயனர்கள் 5ஜி கிடைத்தவுடன் அதை எடுத்துக்கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர் - இது 2019 ஐ விட 14 சதவீத புள்ளிகளின் அதிகரிப்பு ஆகும்.
இருப்பினும், தற்போதைய 4ஜி தொழில்நுட்பம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது, இது 2026 ஆம் ஆண்டில் 66 சதவீத மொபைல் பயனாளர்களை வைத்திருக்கும். அதே நேரத்தில் 3ஜி படிப்படியாக அகற்றப்படுகிறது. இந்தியாவில், 4ஜி சந்தாக்கள் 2020 ஆம் ஆண்டில் 680 மில்லியனிலிருந்து 2026 ஆம் ஆண்டில் 830 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
”2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் சந்தாக்களின் எண்ணிக்கை 810 மில்லியனாக இருந்தது. இது 2026 ஆம் ஆண்டில் 1.2 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். ஸ்மார்ட்போன் சந்தாக்கள் 2020 ஆம் ஆண்டில் மொத்த மொபைல் சந்தாக்களில் 72 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் 98 சதவிகிதத்திற்கும் மேலாக இவை இருக்கும் என கணிக்கப்படுகின்றன," என்று கூறப்பட்டுள்ளது.
எரிக்சன் இந்தியாவின் தலைவரும், தென்கிழக்கு ஆசியா, ஓசியானியா மற்றும் இந்தியாவிற்கான நெட்வொர்க் சொல்யூஷன்ஸின் தலைவருமான நிதின் பன்சால் இந்த ஆய்வை பற்றி கூறுகையில், ”கொரோனா தொற்று பரவல், இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்தை துரிதப்படுத்தியுள்ளது.
ஏனெனில் அதிகமான நுகர்வோர் தொலைநிலை சுகாதார ஆலோசனைகள், ஆன்லைன் சில்லறை வர்த்தகம், வீடியோ கான்பரன்சிங், வணிக அல்லது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய டிஜிட்டல் சேவைகளை நம்பியுள்ளனர். இதனால் ஸ்மார்ட்போனுக்கான சராசரி மாதாந்திர மொபைல் டேட்டா பயன்பாடு தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மக்கள் வீட்டில் தங்கும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், இது அதிகரித்துள்ளது," என்றுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா | தமிழில்: மலையரசு