Budget 2019: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்!
5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் $5 ட்ரில்லியன் ஆகும் என நிர்மலா சீதாராமன் தகவல்!
நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக வாக்குகளைப் பெற்று வென்ற மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக முழு பொறுப்பேற்று இருக்கும் பெண் நிர்மலா சீதாராமன், இன்று இந்தியாவின் 2019-20ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையைக் கொண்ட நிர்மலா சீதாராமன், வழக்கம்போல் பட்ஜெட்டினை சூட்கேஸில் வைத்து வராமல் சிவப்பு நிற கைக்கு அடக்கமான ஃபைலில் நிதிநிலை அறிக்கையினை எடுத்து வந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தியர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பட்ஜெட் தாக்கல் 11 மணி அளவில் துவங்கியது.
இதோ 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் ஹைலைட்ஸ்:
- அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உயரும்: 2014ம் ஆண்டில், பாஜக ஆட்சி அமைக்கும் போது, 1.55 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் 5 ஆண்டுகளில் 2.7 ட்ரில்லியன் ஆக உயர்ந்தது. இன்னும் சில ஆண்டுகளில் அதனை 5 ட்ரில்லியன் ஆக உயர்த்தப்படும்.
- அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு: 2030ம் ஆண்டுக்குள் 50 லட்சம் கோடி ரூபாய் ரயில்வே துறையில் முதலீடு செய்யப்படும். அதன் மூலமாக ரயில்வே துறை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்லப்படும்.
- உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் அமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு: வெளிநாட்டுமாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில ‘Study in India’ திட்டம். உயர்கல்வியை மேம்படுத்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும்.
- வான்வழிப்போக்குவரத்து, ஊடகம், அனிமேஷன், காப்பீடு துறைகளில் அதிக அந்நிய முதலீடுகளை இணைக்க முடிவு. காப்பீட்டு நிறுவனங்களுக்கு 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்தார்.
- பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூ.70,000 கோடி மூதலீட்டு மூலதனம் வழங்கப்படும்.
- ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
- உலகச் சந்தையில் இந்திய கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை விற்க நடவடிக்கை.
- பெண்கள் தலைமை வகிக்கும் முன்முயற்சிகள் நாட்டில் மேற்கொள்ளப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் நிதி உதவி.
- கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
- எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ல் இருந்து 5% ஆக குறைக்கப்படும்.
- தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10%ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு, சாலைகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல் டீசலுக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி.
- 400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறூவனங்களுக்கான வரி 25% ஆக அறிவிப்பு.
- குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய்க்கான வரி குறைப்பு.
- ஆண்டு வருமானம் 2 கோடியில் இருந்து 5 கோடி வரை இருந்தால் அவர்களுக்கு கூடுதல் வரியாக 3% வரி விதிக்கப்படும் என்றும் 5 கோடிக்கு மேல் வருமானம் பெற்றால் அவர்களுக்கு 7% வரி கூடுதல் வரியாக விதிக்கப்படும்.
- பிரதான் மந்திரை ஆவாஸ் யோஜானா திட்டத்தின் மூலமாக 1.95 கோடி வீடுகள் ஊரக மக்களின் வளர்ச்சிக்காக கட்டித்தரப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ புதிய சாலைகள் அமைக்க இலக்கு. கிராமப் புறங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் எரிவாயு இணைப்பு உறுதி செய்யப்படும்.
- 2024ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் தரமான குடிநீர் வசதி செய்து தரப்படும்.
- என்.ஆர்.ஐ களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும்.
- 120 கோடி மக்களுக்கும் மேலானோர் ஆதார் அட்டைகளை வைத்திருப்பதால் ஆதார் எண்ணை அளித்தும் இனி வரி கட்டலாம். ஆதார் இருக்க வேண்டிய இடத்தில் இனி நீங்கள் பான் கார்டை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
- உலக அளவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 17 இடங்களில் சுற்றுலாத்துறை மேம்படுத்துப்படும்
- பார்வையற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாணயங்கள் வழங்கப்படும். ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ. 10, மற்றும் ரூ.20 நாணயங்கள் புதிதாக வெளியிடப்படும்.
யானை புக்க புலம்- புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்:
வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார்.
“யானைக்கு தேவையான உணவென்பது கொடுத்தால் அது கொஞ்சமாகவே தான் இருக்கும். ஆனால் யானை நிலத்துக்குள் புகுந்தால் அது மொத்த நிலத்தையும் நாசம் செய்து விடும். அதுபோலவே தான் வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு ‘யானை புக்க புலம்’ போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்,” என்றார்.
புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி, வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை; இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகைத் தொடரும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.