'இந்தியாவின் பட்ஜெட் உலகிற்கு நம்பிக்கை ஒளியை தரும்’ - பிரதமர் நரேந்திர மோடி!
மத்திய பட்ஜெட் 2023 நாளை அதாவது, பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
உலகப் பொருளாதாரக் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தியாவின் பட்ஜெட் சாமானியக் குடிமக்களின் நம்பிக்கைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மோடி, பொருளாதார உலகில் அனைத்து தரப்பிலிருந்தும் வல்லுனர்களின் குரல்கள் நேர்மறையான செய்திகளைக் கொண்டு வருவதாகக் கூறினார்.
”நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப் 1ம் தேதி) தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட், மக்களின் நம்பிக்கைகள், மற்றும் தற்போதைய தேவைகளை நிறைவேற்றுவதுடன், உலகம் இந்தியாவை நோக்கியிருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருக்கும்,” என்று பிரதமர் கூறினார்.
”இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வையும், நம்பிக்கையும் மேலும் அதிகரித்து பிரகாசமாக ஒளிரும் - இதை பூர்த்தி செய்ய நிதியமைச்சர் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று மோடி கூறினார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவரின் உரை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெருமை, இந்தியாவின் நாடாளுமன்ற முறையின் பெருமை, மேலும் பெண்களையும், நாட்டின் சிறந்த பழங்குடி மரபுகளையும் மதிக்கும் வாய்ப்பாகும் என்று மோடி கூறினார்.