வீடு வீடாக கம்பளம் விற்று இன்று அபுதாபி இளவரசருக்கு கார்பெட் தயாரிக்கும் இந்திய நிறுவனம்!
ஆசிப் ரஹ்மான், 2011 ல் இன்சைனே காபெட்ஸ் (Insigne Carpets ) நிறுவனத்தை உருவாக்கினார். இந்த ஆடம்பர கம்பள விரிப்பு நிறுவனம், ஐந்த நட்சத்திர ஓட்டல் உள்ளிட்டவற்றுக்கு கம்பள விரிப்புகளை தயாரித்து அளிக்கிறது.
கம்பள விரிப்பு த்துறையில் ஆசிப் ரஹ்மான், 1988ல் தனது பயணத்தைத் துவக்கினார். கொல்கத்தா பல்கலையில் பட்டம் பெற்ற பிறகு அவர் வேலைத்தேடி அலைந்தார். ஒரு நாள் கொல்கத்தாவின் பார்க் தெருவில், கம்பள விரிப்பு கடை ஜன்னல் வழியே ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை அழைத்துப்பேசிய உரிமையாளர், கம்பள விரிப்பு பிரிவில் வேலையும் தந்தார்.
இந்த குழுவுடன் இணைந்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கம்பள விரிப்புகளை அமைத்துக் கொடுத்தார். விற்பனை பிரநிதியாக உயர்த்தப்பட்டார். விற்பனை பிரநிதியாக வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கூட அவர் தனது இலக்குகளை அடைந்து மேலே வந்தார். அதன் பிறகு அவர் உத்திரபிரதேசத்தின் மிர்சாபூர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். இவை எல்லாம் கம்பள விரிப்புக்கு பெயர் பெற்ற இடங்கள்.
இந்த அனுபவம் கம்பள விரிப்பு தொழில் செயல்படும் விதத்தை புரிந்து கொள்ள உதவியது. கம்பள விரிப்புகளின் வண்ணம், பட்ஜெட், மூலப்பொருட்கள், சந்தை தேவை போன்றவறை அவரால் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஆசிப், ஹாங்காங்கைச் சேர்ந்த கம்பள விரிப்பு தயாரிப்பு நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிரிவு இயக்குனராகவும் பணியாற்றினார். அந்த கால கட்டத்தில் அவர் தொழில்முனைவில் ஆர்வம் கொண்டார். 2011ல் அவர் கையில் இருந்த ரூ.35 லட்சம் சேமிப்பைக் கொண்டு Insigne Carpets நிறுவனத்தை துவக்கினார்.
ஆரம்பம்
பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் துவக்குவது எளிதல்ல. முதல் மாதங்களில் நிறுவனத்திற்கு ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. தனது வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிப் மெனக்கெட வேண்டியிருந்தது.
மேலும் துவக்கத்தில் நிறுவனத்திற்கு அலுவலகம் என்று இல்லாததால், அவரும், குழுவினரும் வீட்டில் இருந்தே பணியாற்றினர். எனினும், துறையில் தனக்கு இருந்த மதிப்பும், தொடர்புகளும் இந்தத் தடைகளை வெல்ல உதவியது என்கிறார் ஆசிப்.
இந்த விடாமுயற்சியின் பலனாக, இன்று நிறுவனம் பொழுதுபோக்கு, மருத்துவம், குடியிருப்பு என பல்வேறு துறைகளில் பரந்த செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இவரின் நிறுவனம், La Samaritaine (Paris), The Pierre (New York), Wynn Casino (Las Vegas), Salalah International Airport (Oman) ஆகிய ஆடம்பர திட்டங்களுக்கு கம்பள விரிப்புகளை தயாரித்து அளித்திருக்கிறது.
தனிப்பட்ட தன்மையுடன் வழங்குவது தான் தங்கள் தனித்தன்மை என்கிறார் ஆசிப்.
கம்பள தயாரிப்பு
இன்சைனே கார்பெட்ஸ்; வாரனாசி அருகே உள்ள நெவேடா கிராமத்தில் முதல் உற்பத்தி ஆலையைக் கொண்டிருந்தது. பின்னர் ஆக்ராவில் ஆலை அமைத்தது. 2018ல், தாய்லாந்து கம்பள தயாரிப்பு நிறுவனம் ஒன்று கைமாறிய போது கைவிடப்பட்ட அதன் சீன உற்பத்தி ஆலையை ஆசிப் எடுத்து நடத்தத் துவங்கினார்.
“இது இந்திய பிராண்ட் பெயரில் உலகத்தரம் வாய்ந்த கம்பள விரிப்புகளை தயாரிக்க வழி வகுத்தது என்கிறார் ஆசிப்.”
இன்று நிறுவனம், சீனாவில் இரண்டு ஆலைகளை கொண்டுள்ளது. அடிப்படை கார்பெட்டுகளை தயாரிக்க, நிறுவனம் முதலில் உள்ளூரில் இருந்து நார்களை வாங்கி தானே அதை பதப்படுத்துகிறது. அதன் பிறகு வடிவமைப்பு, வண்ணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அதன் பிறகு உற்பத்தி துவங்குகிறது.
பலவிதங்களில் கம்பள விரிப்புகளைத் தயாரிக்கலாம் என்றாலும் இந்திய உற்பத்தியாளர்கள் ஹாண்ட் டப் மற்றும் ஹாண்ட் நாட் முறைகளை அதிகம் பின்பற்றுகின்றனர். கம்பளங்களை முதலில் காகிதத்தில் வடிவமைக்க வேண்டும். அதன் பிறகு இது துணிக்கு மாற்றப்படுகிறது. பின்னர் டப்டிங் கன் மூலம் கம்பளம் உருவாக்கப்படுகிறது. இரண்டாம் முறையில் தயாரிப்பு என்றால், குறிப்பிட்ட தேவைக்கேற்ப நையப்படுகிறது.
முதல் முறையில் கம்பளம் தயாரிக்க ஏழு வாரங்கள் ஆகலாம் என்றால் இரண்டாம் முறையில் 16 வாரங்கள் வரை ஆகலாம்.
சீனாவில் உள்ள நிறுவன ஆலை, 5,000 சதுர அடி கம்பளங்களை செய்யக்கூடியது. இந்திய ஆலை 1,000 சதுர அடி கம்பளங்களை செய்யக்கூடியது.
சவால்கள்
இந்தியா நேர்த்தியான நுட்பமான கம்பள தயாரிப்புக்காக அறியப்படுகிறது. இந்தத் துறை அந்நிய செலாவணியையும் பெற்றுத்தருகிறது. இந்திய ஏற்றுமதி 2020ம் ஆண்டில் 1.37 பிலியன் டாலராக இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. YAK, OBEETEE போன்ற கம்பள பிராண்டுகளுக்காக அறியப்படுகிறது. எனினும் இந்தத் துறை தேக்கம் மற்றும் எதிர்மறை வளர்ச்சியை எதிர்கொண்டு வருகிறது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, கொரோனா ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிப் கூறுகிறார். இந்தத் துறை புறக்கணிக்கப்பட்ட துறையாக இருப்பதாகவும் கூறுகிறார்.
ஆன்லைன் சந்தை காரணமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகிறார்.
“குறைந்த விலையில் வாங்க, மக்கள் ஐகியா போன்ற தளங்களுக்கு செல்கின்றனர். மேலும் பணத்தை திரும்பி செலுத்தும் மற்றும் பழைய பொருளை மாற்றும் வாய்ப்பும் இருப்பதாக ஆசிப் கூறுகிறார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய BFL-S1 சான்றிதழ் பெற வேண்டியிருப்பதும் சிக்கலாக இருப்பதாக கூறுகிறார்.
இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கார்பெட் டெக்னாலஜி தவிர துறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேறு அமைப்புகள் இல்லாததும் குறை என்கிறார். கம்பள தயாரிப்பு தொழிலாளர்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதும் சிக்கலை ஏற்படுத்துவதாக கூறுகிறார்.
”உள்ளூர் தேவையை அதிகரிக்கும் வகையில் அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்கிறார். வங்க தேசம் சனல் கம்பளங்களுக்காக அறியப்படுகிறது. ஆனால், அங்கு யாரும் சனல் கம்பளத்தை இறக்குமதி செய்யக்கூடாது எனும் கொள்கை இருக்கிறது. அதே போல சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்தை முதலில் தாங்களே நுகர்கின்றன. பின்னர் தான் ஏற்றுமதி வருகிறது,” என விளக்குகிறார்.
எதிர்காலத் திட்டம்
நிறுவனத்தின் விற்றுமுதல் போன்ற தகவல்களை ஆசிப் கூற மறுத்தாலும், ஆண்டுக்கு 500 திட்டங்களை செயல்படுத்துவதாக கூறுகிறார். உலகம் முழுவதும் 4,500 திட்டங்களை செயல்படுத்தியிருப்பதாகவும் கூறுகிறார்.
நிறுவனம் சீனாவில் உற்பத்தி ஆலை கொண்டிருப்பதால் கொரோனா பாதிப்பு நேரடியாக பாதித்தது.
“சீனாவில் இரண்டு மாதங்களுக்கு எதையும் தயாரிக்கவில்லை. இந்திய ஆலை ஆறு மாதங்கள் மூடப்பட்டிருந்தது,”என்கிறார்.
ஆர்டர்களை ரத்து செய்ய முடியாத அம்சமே நிறுவனத்தை காப்பாற்றியது என்கிறார். எதிர்காலத்தில் நிறுவனம் பெரிய திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறுகிறார்.
அபுதாபி இளவரசரின் தனிப்பட்ட படகிற்கான கம்பளத்தை தயாரித்து தந்துள்ளதகாவும் கூறுகிறார்.
அண்மையில் கூகுள் நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகத்திற்கு கம்பளம் அளித்துள்ளது இந்நிறுவனம். நீடித்த நிலைத்த பொருட்கள் கொண்டு கம்பளம் தயாரிக்க இருப்பதாகவும் ஆசிப் கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுசல் | தமிழில்-சைபர்சிம்மன்