மகத்தான சாதனையை நோக்கி இந்திய ஏற்றுமதி...
இந்தியாவின் ஏற்றுமதி, நடப்பு (2018-2019) நிதியாண்டில் இதுவரை இல்லாத சாதனை அளவாக 330 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை செயலாளர் டாக்டர் அனுப் வாத்வான் தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தக துறை மற்றும் கனரக தொழில் துறை ஒத்துழைப்புடன், இஇபிசி இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெறும் 8-வது சர்வதேச பொறியியல் செயலாக்க கண்காட்சியை சென்னையில் தொடங்கி வைத்து பேசிய அவர்,
இந்த ஏற்றுமதியில் பெரும் பங்கு பொறியியல் துறையில் இருந்து வரும் என்றார். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கால் பங்கு பொறியியல் துறை சார்ந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகில் உள்ள பெரிய நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்படும் துறைகளில், பொறியியல் துறை முக்கிய இடம் வகிப்பதால், போட்டிகளை மதித்து பல்வேறு விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றுமதி நிறுவனங்கள் புதுமையான செய்முறைகளை கண்டறிய வேண்டும் என்றும் திரு.வாத்வான் கேட்டுக் கொண்டார்.
இந்த கண்காட்சியின் தொழில் பங்குதாரராக உள்ள மலேசிய நாட்டின் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமையேற்று வந்துள்ள அந்நாட்டின் சர்வதேச வர்த்தக அமைச்சகத்தின் முதன்மை துணைச் செயலாளர் (தொழில்துறை) தத்தோ கே.திலகவதி, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா-மலேசியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2017-18 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியின் மதிப்பு 5.7 பில்லியன் டாலராகவும், அந்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி சுமார் 9 பில்லியன் டாலராகவும் இருந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சி 16-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும். பொறியியல் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுக்கான இந்தியாவின் இந்த மாபெரும் கண்காட்சியில், அயல்நாட்டு வாடிக்கையாளர்களுடன் வணிக நிறுவனத்திலிருந்து மற்றொரு வணிக நிறுவனத்திற்கு என்ற அடிப்படையிலான தனிப்பட்ட அமர்வுகளும் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு, விண்வெளி, உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறைகளைச் சார்ந்த முன்னணி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களும் இதில் இடம் பெறும்.
இந்த கண்காட்சி தொடக்க விழாவில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.