லூதியானாவில் இருந்து ஒரு சர்வதேச பேஷன் ப்ராண்ட்: ரூ.320 கோடி டர்ன்ஓவர் செய்யும் 'Madame'
இந்திய பேஷன் பிராண்டான Madame 1993 ல் துக்கர் ஜெயின் மற்றும் அவரது பேரன்களால் தங்கள் குடும்பத்தொழின் அங்கமான பெண்களுக்கான ஆடைகள் பிரிவில் கவனம் செலுத்துவதற்காக துவக்கப்பட்டது.
1980-களில், தொழில்முனைவோர் சி.எல்.துக்கர் ஜெயின், மேற்கத்திய பாணியிலான பெண்களுக்கான ஆடைகள் சந்தை சீன மற்றும் தாய் இறக்குமதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதை உணர்ந்தார். இத்தகைய பிரிவில் இந்திய நிறுவனம் இல்லாததையும் கவனித்தார்.
அப்போது தான் இந்த இடைவெளியை பயன்படுத்துக்கொள்ளும் எண்ணம் உண்டானது. இதில் உள்ள வாய்ப்பை உணர்ந்தவர், தனது குடும்பத்தொழிலான ஜெயின் அமர், ஆடைகள் நிறுவனம், இந்தியாவில் இத்தகைய பெண்கள் ஆடைகளுக்கான அடித்தளமாக அமையலாம் என்பதை உணர்ந்தார்.
துக்கர் ஜெயின் ஜவுளித்துறையில் தனக்கு இருந்த நெடிய அனுபவத்தை நம்பினார். அவரது தொழில்முனைவு பயணம், சுதந்திரத்திற்கு முன் 1939 ல் துவங்கியது.
“அந்த கட்டத்தில் ஜெயின் அமர் நிறுவனம், லூதியானாவில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பின்னலாடைகளில் இருந்து காலுறைகளை தயாரித்துக்கொண்டிருந்தது. எனவே உற்பத்தி ஒரு சிக்கலாக அமையவில்லை. சீனா மற்றும் தாய்லாந்து பொருட்களுடன் போட்டியிடுவது தான் சவாலாக இருந்தது” என்கிறார் ஜெயின் அமர் நிறுவன இயக்குனரும், நான்காம் தலைமுறை தொழில்முனைவோருமான அகில் ஜெயின்.
துக்கர் துணிந்து, ஜெயின் அமர் நிறுவனத்தின் கீழ், பெண்களுக்கான மேற்கத்திய ஆடைகளை உற்பத்தி செய்வதற்கான Madame பிராண்டை 1993ல் துவக்கினார்.
லூதியானாவில் உள்ள உற்பத்தி வசதியை கொண்டு பெண்களுக்கான ஆடைகளை பின்னலாடை நுட்பங்களை கொண்டு தயாரித்தனர். துவக்கத்தில் சந்தை சிறியதாக இருந்தது.
“Madame பிராண்டை சிறிய அளவில் துவக்கிய போது, பின்னலாடை பிரிவில் நல்ல வரவேற்பு இருந்தது. குளிர்காலத்திற்கான ஆடைகளாக அறியப்பட்டன. வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைக்கேற்ப உருவாக்க விரும்பினோம். எனவே கோடைக்கால கலெக்ஷன் மூலம் கவனத்தை ஈர்க்கத் துவங்கினோம்,” என்கிறார் அகில்.
சந்தை ஆய்வு
சிறிய துவக்கத்தை மீறி, Madame பிராண்ட் வாடிக்கையாளர் விசுவாசத்தை பெற்றது. உற்பத்தி பலத்தை கொண்டு அதனால் வாடிக்கையாளர்களைக் கவர முடிந்தது. பெண்கள் மற்ற பிராண்ட்களை விட இந்த பிராண்டை அதிகம் விரும்பினர், தொடர்ந்து பல ஆண்டுகளாக வாங்கத்துவங்கினர் என்கிறார் பிராண்ட் இயக்குனரான அகில்.
முதலில் நுழைந்த நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர் விசுவாசத்தை கொண்டு, இந்தியாவில் பெண்களுக்கான ஆடைகள் பிராண்டாக உருவானது. வேகமான பேஷன் பிரிவிலான ஆடைகள் மற்றும் வழக்கமாக அணியக்கூடிய ஆடைகளையும் நிறுவனம் வழங்கியது.
இன்று, Madame இந்தியா முழுவதும் 150க்கும் மேற்பட்ட பிரத்யேக பிராண்ட் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. தேவையான வாடிக்கையாளர் வரத்து கொண்ட இடங்களில் நிறுவனம் விற்பனை நிலையத்தை அமைக்கிறது. ஒவ்வொரு மாதமும் விற்பனை நிலையத்தை மாற்றி அமைத்து, அதன் சூழலை மேம்படுத்துகிறது.
இந்த பிரத்யேக விற்பனை நிலையங்கள் வாயிலாக நிறுவனம், ஆண்டுக்கு 11 லட்சம் ஆடைகளை விற்பனை செய்வதாக அகில் கூறுகிறார். இது தவிர மிந்த்ரா, ஜபாங்க், அமேசான் தளங்கள் வாயிலாகவும் விற்பனை செய்கிறது.
கடந்த ஆண்டு நிறுவனம், ரூ.320 கோடி விற்றுமுதல் ஈட்டியது. ஜெயின் அமர் மற்றும் Madame பிராண்டின் பொதுவான உற்பத்தி அமைப்பு லூதியானாவில் அமைந்துள்ளது. இதில் 2,500 பேருக்கு மேம் பணியாற்றுகின்றனர். இந்த ஆலை ஏழு லட்சம் சதுர அடையில் அமைந்துள்ளது. ஜப்பான், ஜெர்மனி, கொரியா ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட தானியங்கி, மற்றும், பாதி தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
“எங்கள் ஆலைகள் ஆண்டுக்கு 20 லட்சம் ஆடைகளை உற்பத்தி செய்கிறது. மத்திய விநியோக அமைப்பு ஐந்து லட்சம் ஆடைகளை கையிருப்பாக கொண்டிருக்கும்,” என்கிறார் அகில்.
இந்த பிராண்ட், கைப்பைகள், ஷூ, குளிர் கண்ணாடி, நகைகள் உள்ளிட்ட துணை அணிகலன்களையும் தயார் செய்கிறது. நாங்கள் செய்வது போல ஒரு குடையின் கீழ் வேறு எந்த இந்திய பிராண்டும் இத்தகைய விரிவான பொருட்களை அளிப்பதாகக் கருதவில்லை என்கிறார் அகில்.
எதிர்கால திட்டம்
இந்த பிராண்ட் முதலில் துவங்கிய சாதகத்தை கொண்டிருந்தாலும், இந்த பிரிவில் பல்வேறு பிராண்ட்களின் போட்டியும் உண்டாகியிருக்கிறது. இந்தியாவில் பெண்கள் ஆடை சந்தை 2015 க்கு பிறகு குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது, 2028ல் இது ரூ.2.9 லட்சம் கோடியை தொடும் என்று ஸ்டேடிஸ்டா புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்திருப்பது இதற்கான முதன்மை காரணமாக கருதப்படுகிறது.
“வெரோ மோடா, மேங்கோ, கவர்ஸ்டோரி ஆகிய பிராண்ட்கள் எங்களின் போட்டியாளர்கள். அதிக பிராண்ட்கள் ஒரே துறையில் நுழைவதால் சில நேரங்களில் கடினமாக இருக்காலம். குறிப்பாக மூலதனம் தொடர்பான விஷயங்களில் சிக்கலாகலாம்,” என்கிறார் அகில்.
போட்டியை சமாளிக்க Madame பிராண்ட் வாடிக்கையாளர் விசுவாசத்தை சார்ந்துள்ளது. சந்தையில் இதன் பெயரே இதற்கான அடையாளமாக அமைகிறது.
Madame என்பது ஆங்கில திருமதி வார்த்தைக்கான பிரெஞ்சு சொல்லாகும். இந்த அம்சம் சர்வதேச தன்மையை கொண்டு வருகிறது.
“பலருக்கு Madame பிராண்டு லூதியானாவில் தயாரிக்கப்படுகிறது மற்றும் குருகிராமில் தலைமையகம் கொண்டுள்ளது என்பது தெரியாது. எங்களுடைய சர்வதேசத் தன்மை, ஆண்டுதோறும் புதிய ஸ்டைல்களை கொண்டு வர உதவுகிறது. மேலும் துணிச்சலான பேஷன் அணுகுமுறை மூலம் சர்வதேச பேஷன் போக்குகளுக்கு ஈடு கொடுக்கிறோம். சில நேரங்களில் முன்னிலையிலும் இருக்கிறோம்,” என்கிறார் அகில்.
பிராண்டின் இலக்கு வாடிக்கையாளர்கள் 21 முதல் 35 வயதான பெண்களாகும். பிராண்ட் தனது வருவாயில் ஐந்து சதவீதத்தை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் செலவிடுகிறது. அதன் சமூக ஊடக பதிவுகளும் விற்பனையில் கைகொடுக்கிறது.
விரைவில் நிறுவனம் இந்தியா முழுவதும் பிரான்சைஸ்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் புதிய உற்பத்தி தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்த உள்ளது.
“பேஷன் வரிசையை பெரிய அளவில் அவுட்சோர்ஸ் செய்வதில் கவனம் செலுத்துகிறோம். எதிர்வரும் பருவங்களுக்கான ஆடைகளை எங்கள் ஆலைகளிலேயே தயார் செய்ய இருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் ஆன்லைன் மைய விற்பனையில் கவனம் செலுத்த இருக்கிறோம்,” என்கிறார் அகில்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் தமிழில்: சைபர் சிம்மன்