அதிரடியாக விலையைக் குறைத்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: காரணம் என்ன?
தீவிரமடையும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை!
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதற்கேற்ப வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் மின்சார வாகன நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பானது, எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், அதனை வாங்க விரும்பும் மக்களுக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பாக அமைந்துள்ளது.
கனரக தொழில்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை ஒரு கிலோவாட்டுக்கு ஏற்கனவே இருந்த ரூ.10ஆயிரத்தில் இருந்து ரூ.15,000 ஆக மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு,
புதிய எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக் வாங்குவோருக்குப் பதிவு கட்டணம் என்பது இனி கிடையாது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்வதோடு, ஏற்கனவே வாங்கிய எலக்ட்ரிக் வாகனங்களின் ஆர்சி ரினிவல் கட்டணமும் ரத்து செய்யப்படும் போன்றவையும் பரிசீலனையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது இத்திட்டம் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தகுந்த ஆலோசனைக்குப் பின்பு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் பட்சத்தில் நடைமுறைக்கு வரும்.
இந்த ரத்து அறிவிப்பு மூலம் மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க முடியும் என்பதால் இந்த கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்ய முன்வந்துள்ளது. இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைப் பெரிய அளவில் குறைக்க முடியும். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் ஏற்படும் என்பதால் இப்போதே எலெக்ட்ரிக் நிறுவனங்கள் கட்டணச் சலுகையை அறிவிக்கத் தொடங்கிவிட்டன.
இந்தியாவின் பிரபல இ-பைக் நிறுவனமான ஏதெர், முதலாக, தனது 450X வகை பைக்கின் விலையில் 14,500 ரூபாயை குறைத்து அறிவிப்பை வெளியிட்டது. இவர்களைத் தொடர்ந்து பல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விலையை குறைத்து விளம்பரப்படுத்த துவங்கினர்.
ஒகினாவா நிறுவனம் அதிரடியாக தனது மின்சார ஸ்கூட்டர் விலையை 17 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளது. இதேபோல் பிரைஸ் பிளஸ் மின்சார ஸ்கூட்டரின் விலை முன்பு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்த நிலையில் இது தற்போது 99 ஆயிரத்து 708 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த நிறுவனங்களை போலவே, டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டரின் விலையை ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 777 ரூபாயாகக் குறைத்துள்ளது.
விலைக் குறைப்பு என்பது மட்டுமில்லாமல், பல நிறுவனங்கள் புதிய மாடல் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்திவருகின்றன. இதனால் மின்சார வாகனங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.