1 லட்சம் முதலீட்டில் துவங்கி ரூ.80 கோடி வர்த்தகமாக வளர்ந்த இந்திய சென்ட் பிராண்ட்
வர்த்தகத்தை சிதறடிக்க கூடியதாக அமைந்த பேரிடரை எதிர்கொண்டு, என்.கே.டாகா மற்றும் எல்.கே.சோனி தங்கள் வாசனை திரவியம் பிராண்ட் ரியாவை மீட்டனர். இப்போது இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோர் ஆதித்யா விக்ரம் டாகா, இந்த பிராண்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.
ஆதித்யா டாகாவுக்கு ஒரு வயதாக இருந்த போது, 1997ல் அவரது தந்தை என்.கே.டாகா, தனது குடும்பத்திற்காக மிகப்பெரிய பாய்ச்சலை மேற்கொண்டு தொழில்முனைவோராக மாறினார். அவர் தனது மளிகைக் கடையை மூடிவிட்டு, சகா ஒருவர் மூலம் அறிமுகமான எல்.கே.சோனியுடன் இணைந்து, வாசனை திரவியம் மற்றும் பவுடர் தயாரிக்கும் வர்த்தகத்தை துவக்கினார்.
இருவரும் இணைந்து ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து, ஒடிஷா மாநிலம் பாத்ரக்கில் சிறிய உற்பத்தி ஆலை அமைத்தனர். பிரதானமாக டால்கம் பவுடர் தயாரித்து, தங்களுக்குத்தெரிந்த டீலர்கள், விநியோகிஸ்தர்கள் மூலம் கடைகளில் தங்கள் தயாரிப்புகளை இடம்பெற வைத்தனர். இப்படி தான் ’ரியா’ பிராண்ட் துவங்கியது.
ஆனால், எதிர்பாராதவிதமாக பேரிடர் தாக்கியது. 1999ல், ஏற்பட்ட பெரும் புயல், ஒடிஷாவில் பெரும் சேதத்தை விளைவித்ததோடு, இவர்கள் உற்பத்தி ஆலையையும் பதம் பார்த்தது. ’இதனால் சீர்குலைந்து போயினர்’ என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய ஆதித்யா கூறினார்.
இவர் தான் இரண்டாம் தலைமுறையாக வர்த்தகத்தை நடத்தி வருகிறார். ஆனால் பெருஞ்சேதத்திலும் ஒரு வாய்ப்பு உண்டானது. இருவரும் துணிவுடன் செயல்பட்டு 2000ல் தில்லியில் புதிதாக துவங்கினர். இப்போது ரியா (RIYA) ரூ.80 கோடி விற்றுமுதல் (நிதியாண்டு 22) கொண்ட நிறுவனமாக இருக்கிறது. ’பர்பஸ் பிளேனட்’ (
) எனும் மாற்றப்பட்ட வடிவில் இந்த ஆண்டு ரூ.100 கோடியை அடைய திட்டமிட்டுள்ளது.இடர் எதிர்கொள்ளல்
1999 புயலுக்கு பிறகு, என்.கே மற்றும் எல்.கே வர்த்தகர்களை சந்திப்பதற்கான மைய இடம் என்பதால் தில்லி குடிபெயர்ந்தனர். தில்லியின் பெரிய மொத்த சந்தையில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தனர்.
வர்த்தகத்தை மீண்டும் கட்டமைப்பது சவாலாக இருந்தது. தங்கள் வர்த்தக மாதிரியையும் மாற்றி அமைத்தனர். உற்பத்திக்கு பதிலாக வாசனை திரவியங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். மூன்றாம் தரப்பிடம் இருந்து வாங்கி அவற்றை ரீடைல் மையங்களுக்கு விற்றனர்.
பத்தாண்டுக்கு பின் ரூ.5 கோடி விற்றுமுதல் கிடைத்தது, இதனால் நம்பிக்கை அடைந்து மீண்டும் உற்பத்தியில் ஈடுபட்டனர். இதனால் அற்புதம் நிகழ்ந்தது என்கிறார் ஆதித்யா.
“புயல் பாதிப்பு கொடுங்கனவாக இருந்தது. அதன் பிறகு, நிறுவனர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆனால் இடரை எதிர்கொண்டு, வாசனை திரவியங்களை பல பிரிவுகளில் அறிமுகம் செய்தோம். பிண்டாஸ், மெலோடு, பார்ன் ரிச், பாவ்ரி, ஜாகோ போன்ற துணை பிராண்ட்கள் மூலம் உத்தரபிரதேச சந்தையை கைப்பற்றினோம்,” என்கிறார்.
விளம்பரத்தில் பணத்தை செலவிடுவதற்கு பதிலாக அவர்கள் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.
தந்தை மற்றும் எல்.கே வழிகாட்டுதல் கீழ் ஆதித்யா 2019ல் வர்த்தகத்தில் இணைந்தார். வர்த்தக சூழலில் வளர்ந்ததால் தொழில்முனைவு தன் ரத்தத்தில் கலந்திருக்கிறது என்கிறார். 2018 லண்டன் ஸ்கூல் ஆப் பிஸ்னசில் பட்டம் பெற்றவர் உடனே வர்த்தகத்தில் இணைந்தார்.
விரிவாக்கம்
என்.கே மற்றும் எல்கே வாசனை திரவிய வர்த்தகத்தை துவக்கிய போது, அஜ்மல் பர்ப்யூம்ஸ் போன்ற பிராண்ட்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் எலுத்தினர். ஆனால் ஐரோப்பிய வாசனைகளை இளைஞர்களை கவரத் துவங்கியிருந்தது.
வாங்கக் கூடிய விலையில் தரமான வாசனை திரவியங்களை எதிர்பார்த்தவர்கள் அதிகம் இருந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் கவனம் செலுத்தினர்.
வர்த்தகத்தில் இணைந்ததும் 26 வயதான ஆதித்யா, வர்த்தகத்தை சீரமைப்த்து, மெட்ரோ நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யும் எண்ணத்துடன் ’பர்பஸ் பிளாண்ட்’ என மாற்றினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூம் பிரஷ்னர், டியோடரண்ட். சோப், அகர்பத்தி என பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்துள்ளது. 1800 விநியோகிஸ்தர்கள் வாயிலாக 120 எஸ்.கே.யூவில் இருந்து விற்பனை செய்கின்றனர். ரூ,40 முதல் ரூ.500 வரையான விலையில் வாசனை திரவியங்கள் அமைந்துள்ளன.
இந்தியாவில் 10.8 சதவீத சந்தை பங்கு இருப்பதாக அதித்யா கூறுகிறார். நீல்சன் ஐகியூ ரீடைல் ஆடிட் அறிக்கைபடி, மூன்றாவது ஆண்டாக ரியா இந்திய வாசனை திரவிய சந்தையில் மதிப்பின் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.
எதிர்காலம்
நிறுவனம் வளர்ச்சி பாதையில் செல்லும் நிலையில் 2025ல் 20 சதவீத சந்தையை கைப்பற்ற ஆதித்யா திட்டமிட்டுள்ளார். ரூ.240 கோடி விற்றுமுதல் இலக்காக அமைகிறது. வாசனை திரவியங்கள் தனிநபர் சுகாதாரத்தில் முக்கிய அங்கமாக மாறிவரும் போக்கு உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முறைசாரா சந்தை மற்றும் போலி தயாரிப்புகள் தான் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருப்பதாக ஆதித்யா கூறுகிறார்.
“வாசனை திரவியம் அத்தியாவசிய பொருளாக அமையாததால் பெருந்தொற்று காலம் சவாலாக அமைந்தது. அந்த நேரத்தில் சரிவு உண்டானாலும், இப்போது மீண்டு வந்து அனைத்து இந்திய முக்கிய நகரங்களிலும் வளர்ச்சியை எதிர்நோக்குகிறோம்,” என்கிறார் சி.இ.ஓ ஆதித்யா.
அதிக விலையில் வெளிநாட்டு வாசனை திரவியத்தை நாடுவார்கள் என்பதால் இந்திய பிராண்ட்கள் உயர் விலை பிரிவில் செயல்படவில்லை. ஆனால் இதை மாற்ற விரும்புகிறோம், என்கிறார்.
2022ல் வாசனை திரவிய பிரிவு வருவாய் 286.40 மில்லியன் டாலராக இருந்ததாக ஸ்டாடிஸ்டா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த சந்தை ஆண்டுக்கு 2.49 சதவீதம் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அத்தர் உள்ளிட்ட பிரிவுகளில் விரிவாக்கம் செய்ய பரபஸ் பிளாண்ட் விரும்புகிறது. ஆன்லைன் இருப்பையும் வலுவாக்க திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: பாலக் அகர்வால் | தமிழில் : சைபர் சிம்மன்