தெருவோரக் குழந்தைகள் கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 9 நாடுகளைச் சேர்ந்த எண்பது குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களது வாழ்க்கையில் புது நம்பிக்கை பிறக்கவும் தெருவோர குழந்தைகள் சந்திக்கும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த போட்டி வழிவகுக்கிறது.
சமீபத்தில் இந்திய அணி எட்டு அணிகளுடன் போட்டியிட்டு உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை இன்னமும் துவங்கவில்லையே என்கிற வியப்பு உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் நீல வண்ண உடையணிந்த இந்த அணி தெருவோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளது. இந்தியா சார்பில் விளையாடிய இந்த அணியில் இரு பாலினரும் கலந்துகொண்டனர்.
’ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட்’ என்கிற அரசு சாரா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 80 குழந்தைகள் பங்கேற்றனர். சாலையில் உள்ள குழந்தைகள் சந்திக்கும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கமாகும். ஏப்ரல் 30 முதல் மே 8 வரை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 42 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணியை 47 ரன்கள் எடுத்து வீழ்த்தியது தென்னிந்திய அணி.
இந்த ஆண்டு இந்திய அணியின் பிராண்ட் அம்பாசிடர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி.
’ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட்’ கிரிக்கெட் மட்டுமல்லாது மற்ற போட்டிகளையும் ஏற்பாடு செய்கிறது. டேவிட் பெக்கம், மைக்கேல் ஜேன்சன் ஆகியோர் இதன் பிராண்ட் அம்பாசிடர்கள்.
”பல குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழோ அல்லது பாஸ்போர்டோ இல்லை. இது இந்த அரசு சாரா நிறுவனம் சந்தித்த சவால்களில் ஒன்றாகும்.”இது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாததுபோல் தோன்றினாலும் எப்படியோ அனைத்தும் சிறப்பாகவே நடந்தது,” என்று சிஎன்என் உடன் பகிர்ந்துகொண்டார் ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் இணைநிறுவனர் மற்றும் சிஇஒ ஜான் ரோ.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனமும் அதன் மற்ற பங்குதாரர்களும் இந்த போட்டியின் மூலம் குழந்தைகள் தங்களது பிரச்சனைகள் குறித்து குரலெழுப்பவும் தங்களது உரிமைகளை பாதுகாக்க சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கவும் வாய்ப்பளிக்க விரும்புகின்றனர்.
இந்தப் போட்டி மக்களிடயே பேசுவதற்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகவும் தனது உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராட ஊக்குவித்ததாகவும் நேபாலில் குழுவிற்கு தலைமை தாங்கிய நிஷா சிஎன்என்-இடம் தெரிவித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த நாகலஷ்மி இளம் வயதிலேயே தனது பெற்றோரால் கைவிடப்பட்டதாகவும் பாதுகாப்பு தேடி அலைந்ததாகவும் இந்தப் போட்டி அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாகவும் சிஎன்என் உடனான நேர்காணலில் தெரிவித்தார்.
”நான் கடுமையாக பயிற்சி செய்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கவேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. இதை மிகப்பெரிய சாதனையாகவே கருதுகிறேன்,” என்றார்.
”நீங்கள் எங்களுக்கு மதிப்பளித்தால் நாங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பீர்கள். அவ்வாறு நீங்கள் கேட்டீர்களானால் எங்களைப் பாதுகாப்பீர்கள்,” என்று போட்டிக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த பி மோனிஷா தெரிவித்ததாக ’தி இந்து’ குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA