உங்கள் மொழியில் பிரபலங்களுடன் உரையாட உதவும் இந்தியாவில் உருவான ஆப்!
ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியில் வெற்றி பெற்ற செயலிகளில் ஒன்றான கூ செயலி ( Koo app) 11 இந்திய மொழிகளில் செயல்படுகிறது.
இணையத்தில் கருத்துகள் மற்றும் பார்வைகளை பகிர்ந்து கொள்ளும் ஆற்றலை இந்தியர்கள் பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் உணர்த்தியுள்ளனர். இந்த போக்கை, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சேவைகள் நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. ஆனால் இவை எல்லாம் பிரதானமாக ஆங்கிலம் பேசும் பயனாளுக்கானது.
இந்நிலையில், அறிமுகமாகியுள்ள குறும்பதிவு சேவையான, ‘Koo' ’கூ’ இரண்டாம் மற்றும் மூன்றான அடுக்க நகரங்களில் உள்ளவர்களிடம் கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான இந்த செயலி, அண்மையில், பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாரத் உரையில் பாராட்டு பெற்றது. ஆத்மநிர்பார் பார்த் செயலி போட்டியிலும் வெற்றி பெற்றது.
தொடர் தொழில்முனைவோர்களான அப்ரமேய ராமகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்காவால் துவக்கப்பட்ட குறும்பதிவு சேவையான கூ, பயனாளிகள் தங்கள் தாய்மொழியில் எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் கருத்துகளை வெளியிட வழி செய்கிறது.
இந்த செயலி கூகுள் பிளேஸ்டோரில் ஒரு மில்லியன் முறைக்கு மேல் டவுண்லோடு செய்யப்பட்டு, பயனாளிகளிடம் இருந்து 4.8 மதிப்பீடு பெற்றுள்ளது. இந்த செயலியின் அம்சங்கள் குறித்து ஒரு அலசல்.
செயலியின் சிறப்புகள்
இந்த செயலியை நிறுவியவுடன், முதல் பக்கத்திலேயே உங்களுக்கான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
சுவாரஸ்யம் என்னவெனில் இந்த செயலியில் ஆங்கில மொழி இல்லை. இந்த செயலி இந்திய மொழியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கானது என இதன் நிறுவனர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
இந்த செயலியின் இடைமுகம் பயன்படுத்த ஏற்றதாக எளிதாக இருக்கிறது. மொழியை தேர்வு செய்ததும், நீங்கள் ட்ருகாலர் பயனாளி எனில் உங்களை உடனே வெரிபை செய்கிறது. இல்லை எனில், உங்கள் போன் எண்ணை குறிப்பிட்டு கணக்கு துவக்கலாம்.
பயனாளிகள் போன் எண் மூலம் சேவையை பயன்படுத்த துவங்கியதும், தானாக உருவாக்கப்பட்ட பயன்பாட்டு பெயர், கணக்கு முகவரி மற்றும் புகைப்படம் அளிக்கப்படுகிறது. இந்த வழிமுறைகளை ஆடியோ மூலம் அளிப்பது சிறப்பம்சமாகும்.
பிரபலங்கள் வழி
பயனாளிகளை அவர்கள் ஆர்வத்தின் அடிப்படையில் தொடரலாம். இந்த செயலி அறிமுகமாகி இரண்டு மாதங்களுக்குள், நடிகர்கள் அசுடோஷ் ரானா, ஆசிஷ் வித்யார்தி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கிரிக்கெட் நட்சத்திரங்கள் கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் ஆகிய பிரபலங்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.
பின் தொடர்வதற்கு பயனாளிகளை தேடும் போது, இந்த செயலி பயனாளிகளை அவர்கள் தொழில்முறைக்கு ஏற்ப வகைப்படுத்தி, ஆர்வத்தின் அடிப்படையில் பின் தொடர்வதை எளிதாக்குகிறது. டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருந்து இந்த அம்சம் மூலம் தனித்து நிற்கிறது.
நாம் பார்வையிட்ட போது, பெரும்பாலான விவாதங்கள், தினசரி எண்ணங்கள், நிகழ்வுகள், போக்குகள் சார்ந்து அமைந்திருந்தன. இதில் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள கூ பட்டனை அழுத்த வேண்டும். அதன் பிறகு விரும்பிய மொழியில் வெளியிடலாம்.
எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ மூலம் இந்த செயலியில் எண்ணங்களை பதிவிடலாம். பயனாளிகள் 400 எழுத்துகளுக்குள் அல்லது ஒரு நிமிட ஆடியோ அல்லது வீடியோவில் பேசலாம். மற்ற செயலிகள் போல, மற்றவர்களை டேக் செய்து, ஹாஷ்டேகும் சேர்க்கலாம்.
மற்றவர்கள் பதிவுகளை மறுபதிவிடவும் (re-koo) வழி செய்கிறது. பயனாளிகளை பின் தொடரலாம். நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இந்த பதிவுகளை வாட்ஸ் அப், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட மேடைகளில் பகிர்ந்து கொள்ளலாம். பதிவுகளின் வீச்சையும் தெரிந்து கொள்ளலாம்.
தீர்ப்பு
இந்த எளிமையான இடைமுகம், நேர்த்தியான தோற்றம் மற்றும் பயனாளிகளுக்கு இணக்கமான அம்சங்களுக்காக முழு மதிப்பெண்களை வழங்கலாம். குறும் வீடியோ எழுத்து வடிவம் மற்றும் வீடியோ ஆகிய அம்சங்கள் கவர்கின்றன.
டிவிட்டர் போன்ற செயலிகளுக்கு இணையாக உள்ளது இந்த செயலி. தங்கள் சமூகத்துடன் தொடர்பு கொண்டு, இந்திய மொழிகளில் உரையாட விரும்புகிறவர்களுகு இந்த செயலி ஏற்றது. மொழிகளுக்கு இடையிலான தானியங்கி மொழிபெயர்ப்பு வசதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இதே போன்ற வேறு செயலிகள் இருந்தாலும், கூ தனது அம்சங்களால் தனித்து நிற்கிறது. பொது வாழ்வில் உள்ளவர்கள், சமூக சேவகர்கள், உள்ளூர் மொழி இதழாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த செயலி ஏற்றது.
ஆங்கில கட்டுரையாளர்: ராசி வர்ஷினி | தமிழில்- சைபர்சிம்மன்