இந்திய சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.3.7 லட்சம் நிதி திரட்டிய யூகே வாழ் சிறுவன்!
ஆந்திராவைச் சேர்ந்த ஐந்து அனீஷ்வர் குன்சாலா கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்ட தனது நண்பர்களுடன் 4,500 கி.மீ சைக்கிளில் பயணித்துள்ளார்.
மான்சஸ்டரின் வாரிங்டன் நகரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் அனீஷ்வர் குன்சாலா. இவர் இந்தியாவில் கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக 3.7 லட்ச ரூபாய் நிதி உயர்த்தியுள்ளார். இவரது செயல் பலருக்கு உந்துதலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
யூகே-வைச் சேர்ந்த கேப்டன் டாம் மூர் என்கிற நூறு வயது போர் வீரர் இந்த பெருந்தொற்று சமயத்தில் தேசிய சுகாதார சேவைகளுக்காக நிதி திரட்ட தனது தோட்டத்தில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டார். இதைக் கண்டு இந்தச் சிறுவனுக்கு உந்துதல் ஏற்பட்டதாக `தி நியூஸ் மினிட்’ அறிக்கை தெரிவிக்கிறது.
அனீஷ்வரின் அப்பா அனில் குன்சாலா டாம் மூரின் நோக்கத்தை அனீஷ்வரிடம் விவரித்துள்ளார். இதைக் கேட்ட அனீஷ்வருக்கும் இந்த நோக்கத்தில் பங்களிக்கவேண்டும் என்கிற உந்துதல் பிறந்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் அனீஷ்வர் கிரிக்கெட் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தேசிய சுகாதார சேவைகளுக்கு நிதி திரட்ட '10 days 1000 hits’ சேலஞ்சில் ஈடுபட்டார்.
இதனிடையே அனீஷ்வரின் அப்பா அனில், அம்மா ஸ்நேகா இருவரும் தங்களது மகனின் முயற்சி பற்றி தெரியப்படுத்த கூட்டு நிதி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தனர்.
வெற்றிகரமாக நிதி திரட்டப்பட்டதை அடுத்து அனீஷ்வர் 'Little pedallers’ சேலஞ்ச் தொடங்கினார். இதில் அனீஷ் தனது நண்பர்களுடன் 4,500 கி.மீ சைக்கிளில் பயணம் செய்தார்.
Give India என்கிற லாப நோக்கமற்ற நிறுவனத்தின் வலைதளத்தில் நிதி திரட்டுவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டார். இந்தியாவில் பிபிஈ கிட் விநியோகம் செய்வதற்காகவே இந்த நிதித்தொகை திரட்டப்பட்டது.
“தினமும் அவர் ஐந்து முதல் ஏழு கி.மீட்டர் வரை சைக்கிளில் செல்வார். இதற்கு 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். ஆரம்பத்தில் நான்கைந்து குழந்தைகள் மட்டுமே உடன் சென்றனர். ஆனால் இந்த முயற்சி குறித்து தெரிந்துகொண்டு கிட்டத்தட்ட 60 குழந்தைகள் இணைந்துகொண்டனர்,” என்றார் அனில்.
அனீஷ்வர் ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரபல விளையாட்டு வீரர்களும் அரசு அதிகாரிகளும் அனீஷ்வரின் முயற்சியைப் பாராட்டியுள்ளனர். வாரிங்டன் சவுத் எம்.பி ஆண்டி கார்டெர் சமீபத்தில் இந்தச் சிறுவனை சந்தித்ததாக நியூஸ்18 தெரிவித்துள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA