ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்பதையே அதிகம் விரும்பும் இந்தியர்கள்’- ஆய்வில் தகவல்
இந்தியாவில் எத்தனை சதவீதம் பேர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உண்கிறார்கள் தெரியுமா? ஏன்? இதற்கு என்ன காராணம் போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளன.
இந்தியர்கள் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்து உண்பதை அதிகம் விரும்புவதாகவும், தம்பதிகள் ஒன்றாக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பாக உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை கருதுவதாகவும், உபெர் ஈட்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உணவு டெலிவரி சேவை நிறுவனமான உபெர் ஈட்ஸ், இந்தியர்கள் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்வது எதனால் எனும் கேள்விக்கு விடை காணும் வகையிலான ’இந்திய உணவு மனநிலை’ ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
நகர்புற இந்தியாவில் உள்ள 48 சதவீதத்தினர் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்வதை விரும்புவதையும், வசதி மற்றும் வழக்கமான தன்மையில் இருந்து விலகும் விருப்பம் ஆகியவை இதற்கான காரணங்களாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உபெர் ஈட்ஸ் நிறுவனம், சர்வதேச ஆய்வு நிறுவனமான இப்சாஸ் (IPSOS) உடன் இணைந்து, உணவு மற்றும் ரெஸ்டாரண்ட் துறையினர் வெளி உணவு பழக்கம் தொடர்பான போக்குகளை புரிந்து கொள்ள உதவும் வகையில், இந்திய உணவு மனநிலை ஆய்வை மேற்கொண்டது.
வாடிக்கையாளர் தேர்வுக்கான காரணங்கள், உணவு உட்கொள்ளும் தருணங்கள், உணவு வகை தொடர்பான புரிதல்கள், எதிர்கால போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில், உணவு மற்றும் ரெஸ்டாரண்ட் துறைக்கு இந்த அறிக்கை, எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. ரெஸ்டாரண்ட் நிறுவனங்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளையும் அறிக்கை உணர்த்துகிறது.
“மக்கள் வீட்டில் சமைக்காத உணவை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிடும் நிலையில், பலரும் உணவை தருவிக்கும் முடிவை எங்களைப் போன்ற நிறுவனங்களிடம் அளிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் உணவு விருப்பம் மற்றும் பல்வேறு சந்தர்பங்கள் அடிப்படையில் தங்கள் தேர்வுகளை மேற்கொள்கின்றனர் போன்ற புரிதலை இந்த அறிக்கை அளிக்கிறது,” என உபெர் ஈட்ஸ் இந்தியா செயல்பாடுகள் தலைவர் பான்சி கோடேச்சா கூறுகிறார்.
”வாழ்வியல் பழக்கம் மற்றும் தினசரி பழக்கங்களில் வேகமான மாற்றங்களை நாம் பார்க்கிறோம். வாடிக்கையாளர்கள் நேரமின்மை காரணமாக, எளிதாகக் கிடைக்கும் உணவை நாடுகின்றனர். நேரம் மற்றும் ஆற்றலை மிச்சமாக்க வாடிக்கையாளர்கள் உணவு டெலிவரி சேவையை நாடுகின்றனர்,” என்று இப்சாஸ் செயல் இயக்குனர் சிரெயோஷி மைத்ரா கூறுகிறார்.
இந்தியர்கள் பல்வேறு காரணங்களினால் வெளி உணவை நாடுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 28% பேர் வசதி காரணமாகவும், 16% பேர் விஷேச தினங்களைக் கொண்டாடவும் வெளி உணவை ஆர்டர் செய்கின்றனர். 28% பேர், வழக்கமான தன்மையில் இருந்து விடுபட வெளி உணவை நாடுகின்றனர்.
76% பேர் உணவை தங்கள் வீடுகளில் டெலிவரி செய்யப்படுவதை நாடுவதாகவும், பணியிடங்கள் மற்றும் கல்லூரிகளிலும் உணவை பெற்றுக்கொள்வதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது வெளியே சென்று சாப்பிடுவது மற்றும் வாங்கி வந்து சாப்பிடுவதற்கு நிகராக பிரலபலமாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. வசதி இதற்கு முக்கியக் காரணமாக அமைவதாகவும், 82 சதவீத வாடிக்கையாளர்கள், பெரும்பாலும் 5 ரெஸ்டாரண்ட்களுடன் தங்கள் தேர்வை அமைத்துக்கொள்வதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின் மற்ற முக்கிய அம்சங்கள்:
- வாடிக்கையாளர்கள் தாங்கள் ஒன்றாக நேரம் செலவிட உணவை ஆர்டர் செய்வதை ஏற்றதாகக் கருதுகின்றனர். தம்பதியினர் வெளி உணவை சாப்பிட தீர்மானிக்கும் போது, 36% பேர் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.
- 19 % மக்கள் உணவை ஆர்டர் செய்வது தங்களுக்கான நேரத்தை சேமிப்பதாக கருதுகின்றனர்.
- பெண்களின் 38% வேறு விதமான சுவையை நாடி அல்லது தங்களை உற்சாகம் கொள்ள வைக்க உணவை ஆர்டர் செய்கின்றனர்.
- வட இந்திய உணவு மற்றும் பிரியாணி பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பிட்சா, சிறியவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
- சமையல் கலைஞரை வைத்துக்கொள்வதை விட உணவை ஆர்டர் செய்வது செலவு குறைவானதாக இருப்பதாக 43 % பேர் தெரிவித்துள்ளனர்.
- காலை உணவு, ஆன்லைன் ஆர்டர்களில் 7% ஆக உள்ள நிலையில், இரவு உணவு 53% ஆக இருக்கிறது.
உபெர் ஈட்ஸ் சார்பாக இப்சாஸ் நிறுவனத்தால், இந்தியா முழுவதும் 13 நகரங்களில் ஆன்லைன் கருத்துக்கணிப்பு மற்றும் நேர்காணல்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தொகுப்பு: சைபர்சிம்மன்