2 வயதில் நோயாளி; 24 வயதில் டாக்டர்... கனவை நினைவாக்கிய தமிழக இளைஞர்!
18 மாத பச்சிளம் குழந்தையாக இருந்தபோது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை பெற்று நலமுடன் வளர்ந்து, இன்று மருத்துவர் ஆக இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த சஞ்சய் கந்தசாமி.
”இது என்னுடைய சிறுவயது கனவு. நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணம் மருத்துவர்கள் தான். நானும் உன்னதமான மருத்துவத்தொழிலில் ஈடுபட்டு, உயிர்களை காப்பாற்ற விரும்பினேன். ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. குழந்தை மருத்துவத்தில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. அதனால் பச்சிளங்குழந்தை மருத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்தேன்,” என்கிறார் சஞ்சய் கந்தசாமி.
யார் இந்த சஞ்சய் கந்தசாமி?
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கந்தசாமி. கடந்த 1998ம் ஆண்டு சஞ்சய் பிறந்தபோது, அவருக்கு பிலியரி அட்ரேசியா (Biliary Atresia) பாதிப்பு இருந்தது. இது பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவித குறைபாடாகும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளிடையே கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும் பிறவிக் கோளாறு. கல்லீரலில் இருந்து பித்தப்பைக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுகிறது.
சஞ்சய் கந்தசாமிக்கு பிலியரி அட்ரேசியா என்ற குறைபாடு இருப்பதைக்கண்டறிந்த மருத்துவர்கள், உடனே அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி,
பிறந்து 18 மாத பச்சிலங்குழந்தையான சஞ்சய்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தியாவிலே முதல்முறையாக 20 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை நடத்தி மருத்துவர்கள் சாதனை நடத்தினர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட இந்தியாவின் முதல் குழந்தை இவர். அவர் அறுவை சிகிச்சை செய்து 22 ஆண்டுகள் ஆகின்றன.
“கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் நீண்டகாலமாக உயிர்வாழ்வதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்றுஇந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த கல்லீரல் நிபுணருமான டாக்டர் அனுபம் சிபல் கூறியுள்ளார்.
22 ஆண்டுகளுக்கு முன் சஞ்சய்க்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் Dr.அர்விந்தர் சிங் ட்விட்டரில் போட்ட பதிவில்,
“இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். 22 ஆண்டுகளுக்கு முன் 18 மாத குழந்தைக்கு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர் இப்போது டாக்டர் ஆவது மகிழ்ச்சி...”
"அவர் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவரை விரைவில் ஐ.சி.யு.விலிருந்து நார்மல் வார்டுக்கு கொண்டுவர நாங்கள் போராடினோம். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் போது அவருக்கு இரண்டு வயதுக்கு குறைவாகவே இருந்தது. அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது,” என்று குருக்ராம், மெடந்தா மருத்துவமனை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மீளுருவாக்கம் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஏ.எஸ். சோயின் நினைவு கூர்ந்துள்ளார்.
தான் உயிர்வாழ்வதற்குக் காரணமாக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மருத்துவச் சேவை மூலம் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வகையில் தானும் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டு, உழைத்த சஞ்சய் கந்தசாமி அடுத்த வருடம் டாக்டராகிறார்...