‘பிரியாஸ் மாஸ்க்’ - கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ!
‘பிரியாஸ் மாஸ்க்’ எனப்படும் காமிக் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது!
'பிரியாஸ் மாஸ்க்’ எனப்படும் காமிக் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் ஆன்லைன் பதிப்புகளாக வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தால், தென்னிந்திய சமூக ஊடக செல்வாக்கின் ஆதரவோடு பிரபலமான இளைஞர்களின் காமிக் புத்தகமான, 'பிரியாஸ் மாஸ்க்’ 'Priya's Mask' புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் ஆன்லைன் பதிப்புகளாக வெளியாகியுள்ளது.
பிரியா மாஸ்க் என்பது பெண் சூப்பர் ஹீரோவைக் கொண்ட இந்தியாவின் முதல் காமிக் புத்தகத்தின் புதிய தொடர் பதிப்பாகும். வலிமையின் அடையாளமாகவும், உலகெங்கிலும் உள்ள பெண்களின் மாற்றத்திற்கான சக்தியாகவும் விளங்கும் பிரியா, உலகத்தின் ஆரோக்கியத்துக்கே எதிரியாக பரவிய கொரோனா தொற்று குறித்த பயம் மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்கிறார்.
இந்த பிரியா மாஸ்க் தொடரை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மீடியா ஹவுஸான ரட்டபல்லாக்ஸின் நிறுவனரும், ஆவணப்பட தயாரிப்பாளரும், தொழில்நுட்பவியலாளருமான ராம் தேவினேனி (Ram Devineni) உருவாக்கியுள்ளார். சுப்ரா பிரகாஷ் எழுதியுள்ளார். Augmented reality (AR) முறையில் இது வெளியிடபட்டுள்ளது. ரோசன்னா அர்குவெட், வித்யா பாலன், மிருனல் தாக்கூர் மற்றும் சாய்ரா கபீர் உள்ளிட்ட இந்திய மற்றும் அமெரிக்க பெண்ணிய தலைவர்களின் குரல்களைக் கொண்ட ஒரு அனிமேஷன் குறும்படமாகும்.
யு.எஸ். துணைத் தூதரகத்தின் சென்னை செய்தித் தொடர்பாளர் கோரி பிகல் பேசுகையில்,
“இந்த காமிக் புத்தகம் அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் உலக சுகாதார சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஆழ்ந்த திறமைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு,” என்றார்.
இந்த காமிக் புத்தகத்தை ராம் தேவினேனி உருவாக்கியுள்ளார். இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் படிக்க கிடைக்கிறது.
கோவிட் -19 குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் பிரியா என்ற பெண்ணின் வழியாக கதையைச் சொல்கிறது. மேலும் இது குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடிய தனிமை மற்றும் பயத்தை பற்றியும் விவரிக்கிறது.