பெண்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதல் மகளிர் கட்சி!
மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை வலியுறுத்தி ‘தேசிய மகளிர் கட்சி’ தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்ட முதல் கட்சி ’தேசிய மகளிர் கட்சி’ (National Women's Party). இந்தக் கட்சி அதிக பெண்களை அரசியலில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டில் எடுக்கப்படும் முக்கியத் தீர்மானங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும் என்று கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மக்கள்தொகையில் பெண்கள் 49 சதவீதம் பங்களித்தாலும் அரசியலில் அவர்களது பங்களிப்பு மிகக்குறைவாகவே உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2017-ல் ருவாண்டா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
’தேசிய மகளிர் கட்சி’ அறிமுகப்படுத்தப்பட்டது சரியான திசையை நோக்கிய முன்னெடுப்பாகும். மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலரான டாக்டர் ஸ்வேதா ஷெட்டியின் தலைமையிலான இந்தக் கட்சி வரவிருக்கும் மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நாடாளுமன்றத்தில் சமமான இட ஒதுக்கீட்டிற்கு உத்திரவாதம் அளிக்கப்படவேண்டும் என்கிற இலக்கை நோக்கிய வரலாற்று முயற்சியாகும்.
அரசியலில் பாலின வேற்றுமையை அகற்றி ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்சியை உருவாக்கப்பட்டுள்ளது.
ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் ஸ்வேதா குறிப்பிடுகையில்,
“ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் அமைப்பில் பெண்கள் மட்டுமே இடம்பெறும் கட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. அன்னையர் தினம், பெண்கள் தினம், தேர்தல் சமயம் போன்ற நேரங்களில் மட்டுமே பெண்கள் குறித்தும் அவர்களது பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தேசிய மகளிர் கட்சி; பெண்கள் குரல் கொடுக்க உதவும் தளம் ஆகும்.
”பெண்களின் தற்போதைய நிலையை இந்தக் கட்சி மேம்படுத்தும் என்கிற நம்பிக்கைக் கொண்ட அனைவரையும் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சமமான ஒதுக்கீடு கிடைக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை,” என்றார்.
மேலும் தனது கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் ஒத்த சிந்தனையுடைய கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.
தங்களது கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் ஆண்களிடமிருந்தும் அரசியல் ஆதரவை வரவேற்பதாகத் தெரிவித்தார். முதலில் நாடாளுமன்றத்திலும், அதன் பிறகு மெல்ல வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு ஐம்பது சதவீத ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதையே ஸ்வேதா இலக்காகக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியான பெரும்பாலான தீர்மானங்களை ஆண்களே எடுக்கும் நிலை உள்ளது. இதில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் பெண்கள் மேம்படுவதற்கான சாத்தியம் இல்லாமல் போகிறது.
“பெண்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு உகந்த சூழலை எங்களது கட்சி வாயிலாக உருவாக்க விரும்புகிறோம். இதன் வாயிலாக அவர்கள் தங்களது முழுத்திறனை உணர்ந்து கொள்வார்கள். இது இலக்கினை எளிதாக எட்டு உதவும்,” என்றார் ஸ்வேதா.
தேசிய மகளிர் கட்சி விரைவில் ’மஹிலா ரக்ஷக்’ என்கிற மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரும்போது உதவுவதே இந்த பாதுகாப்பு செயலியின் நோக்கமாகும். இதில் பயனர் ஆபத்தில் இருக்கும்போது மொபைலை ஆட்டவேண்டும் அல்லது ’ஹெல்ப்’ என்று பலமுறை சொல்லவேண்டும். அப்போது இந்தச் செயலி வாயிலாக பயனரின் மூன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
”சமீபத்தில் குற்றங்கள் அதிகரித்திருப்பதால் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த முயற்சிகள் மூலம் பெண்கள் அச்சமின்றி வீட்டை விட்டு வெளியே சென்று சிறப்பான வாழ்க்கையை வாழமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்,” என்றார் ஸ்வேதா.
தேசிய மகளிர் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் இளைஞர் நாடாளுமன்றம் (Youth Parliament) என்கிற பெண்களுக்கான அரசியல் பள்ளியைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இங்கு அரசியல் செயல்பாடுகளில் பெண்கள் பங்களிப்பதை ஊக்கமளிக்கும் விதத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா