1,10,000 சதுர மீட்டர், 10ஆயிரம் படுக்கைகள், 500 கழிப்பறைகள்: இன்னும் என்னென்ன?
இந்தியாவின் மிகப்பெரிய தற்காலிக கொரோனா சிகிச்சை மருத்துவமனை, டெல்லியில் ராதா சோமி சத்சங் பியாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 10,000 படுக்கை வசதிகளுடன்கூடிய சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை தயாராகி வருகிறது.
இந்த தற்காலிக மருத்துவமனை சத்தர்பூர் பகுதியில் ராதா சோமி சத்சங் பியாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பரப்பளவு கிட்டத்தட்ட 20 கால்பந்து மைதானத்தின் அளவாகும்.
இந்திய-திபெத்திய எல்லையோர காவல்படை (ITBP) இந்த மருத்துவமனை அமைப்பின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கிறது.
ITBP மக்கள் தொடர்பு அதிகாரி விவேக் பாண்டே கூறும்போது,
“டெல்லி நிர்வாகத்தின் தேவைகளைப் பொறுத்து முதல்கட்டமாக நோயாளிகளை அனுமதிக்கத் தயாராக உள்ளோம். ITBP அனுபவம் மிக்கது என்பதால் முறையான ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்டமாக 2,000 நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். இவர்களைப் பராமரிக்கும் வகையில் 160 மருத்துவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படுகிறது. வரும் நாட்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை 1,000-ஆக உயர்த்தப்படும்.
நோயாளிகளுக்கு முறையான சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஒவ்வொரு மருத்துவருக்கும் மூன்று முதல் நான்கு செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தற்காலிக மருத்துவ மையத்தில் கீழ்கண்ட வசதிகள் அமைக்கப்படுகிறது:
- 300 ஏக்கர் நிலப்பரப்பில் 10,200 படுக்கை வசதிகள் அமைக்கப்படும். இதில் 70 ஏக்கர் நிலப்பரப்பு தனிமைப்படுத்தும் வசதிக்காக ஒதுக்கப்படும்.
- தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்காக 10 சதவீத படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும்.
- படுக்கைகள் மக்கும்தன்மை கொண்ட அட்டைகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.
- 75-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
- பயோ கழிப்பறைகள் உட்பட 500 கழிப்பறைகள் மற்றும் 450 குளியலறைகள் இருக்கும்.
- இந்த மருத்துவமனை பல்வேறு ப்ளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ப்ளாக்கிலும் 100 படுக்கை வசதிகள் அமைக்கப்படுகிறது. இதுவரை 88 ப்ளாக்குகளுக்கான விளக்கப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்த மருத்துவமனை வளாகமும் குளிர்சாதன வசதி கொண்டிருக்கும். சிசிடிவி மூலம் டெல்லி காவல்துறையால் கண்காணிக்கப்படும்.
- பொழுதுபோக்கிற்காக பல்வேறு எல்ஈடி திரைகள அமைக்கப்பட்டிருக்கும். 50 இ-ரிக்ஷா வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- உணவு, குடிநீர் போன்ற வசதிகளும் குப்பைத்தொட்டிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- பாக்டீரியாக்களை தடுக்கும் வகையிலான பூச்சு கொண்ட பிவிசி தரைகள் அமைக்கப்பட்டுள்ளது.