‘இந்தியாவின் 40.5% சொத்துகள் வெறும் 1% செல்வந்தர்கள் வசமே உள்ளது’ - ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக உள்ள 1% பேரிடம், நாட்டின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 40.5% சதவீத அளவிலான சொத்துகள் குவிந்திருப்பதாக ஆக்ஸ்ஃபார்ம் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2012 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தை உள்ளடக்கிய ‘சர்வைவல் ஆஃப் தி ரிச்சஸ்ட்: தி இந்தியன் ஸ்டோரி’ (Survival of the Richest: The India story) என்ற ஆய்வறிக்கையை, சுவிட்ஸர்லாந்தின் டேவாஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார கூட்டத்தில், பொருளாதார உரிமைகள் குழு அமைப்பான ஆஸ்ஃபாம் (Oxfam) சமர்ப்பித்துள்ளது.
அதில்தான், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் 1% பேரிடம், நாட்டின் 40.5% சதவீத அளவிலான சொத்துகள் குவிந்திருப்பதாகவும், அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள் வெறும் 3% சொத்துக்களையே பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதாவது, அடித்தட்டில் உள்ள 50% இந்திய மக்களிடம் உள்ள சொத்துகளை விட 13 மடங்கு அதிக சொத்துகள் இந்த 1 சதவீத பெரும் பணக்காரர்கள் வசம் உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் டாப்பில் உள்ள 5 சதவீத பெரும் பணக்காரர்களிடம் இருக்கும் இந்தியாவின் 61.7 சதவீத சொத்துகளின் மதிப்பு என்பது அடித்தட்டில் உள்ள 50 சதவீத இந்திய மக்களிடம் உள்ள சொத்துகளை விட 20 மடங்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கையின் மேலும் சில முக்கிய அம்சங்கள்:
* இந்தியாவின் டாப் 10 சதவீத செல்வந்தர்களின் சொத்துகள் 1981-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் 45 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்களின் சொத்துகள் பாதியாக வீழ்ச்சி கண்டுள்ளது.
* வரிகளை எடுத்துக்கொண்டால், பணக்காரர்களை விட ஏழை மக்களே அதிக வரிச்சுமைக்கு ஆளாகின்றனர். டாப் 10 சதவீதத்தினர், நடுத்தர நிலையில் உள்ள 40 சதவீதத்தினரை விட அதிக அளவிலான சதவீதத்தில் அடித்தட்டில் உள்ள 50% இந்தியர்கள் மறைமுகமாக வரிகளைச் செலுத்துகின்றனர்.
* இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாயில், அடித்தட்டில் உள்ள 50% மக்களின் ஜிஎஸ்டி பங்களிப்பு 64% ஆகும். அதேநேரத்தில், டாப் 10% பணக்காரர்களின் ஜிஎஸ்டி பங்களிப்பு என்பது வெறும் 4% மட்டுமே. அதாவது, டாப் 10 சதவீத பணக்காரர்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அளவில் அடித்தட்டு மக்களே ஜிஎஸ்டி செலுத்துகின்றனர்.
* அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள் தங்கள் வருமானத்தில் 6.7 சதவீதத்தை குறிப்பிட்ட உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கு வரியாக செலுத்துகின்றனர். இதற்காக, நடுத்தர பொருளாதார நிலையில் உள்ள 40 சதவீத மக்கள் தங்கள் வருமானத்தில் 3.3 சதவீத அளவில் வரி செலுத்துகின்றனர். அதேநேரத்தில், டாப் 10 சதவீதத்தினராக உள்ள செல்வந்தர்கள் வெறும் 0.4 சதவீதத்தைதான் தங்கள் வருவாயில் இருந்து இவற்றுக்கு செலவிடுகின்றனர்.
* இந்தியாவில் நிலவி வரும் இந்த பொருளாதார சமத்துவமின்மை என்பது கோவிட் பெருந்தொற்று காலத்தில் இன்னும் மோசமான நிலையை எட்டியது. முந்தையக் காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, கோவிட் பேரிடர் காலத்தில் டாப் 5 சதவீதத்தில் உள்ள பெரும் பணக்காரர்களின் வருவாய் 62 சதவீத அளவில் உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
* பாலின சமத்துவத்தையை எடுத்துக்கொண்டால், 2018 - 2019 காலக்கட்டத்தில், இந்தியாவில் பெண் பணியாளர்கள் 63 பைசா ஈட்டினால், ஆண் பணியாளர் ரூ.1 சம்பாதிக்கும் அளவுக்கு சமத்துவின்மை நிலவுகிறது. பட்டியலினத்தவர் மற்றும் ஊரகப் பணியாளர்களின் நிலைமை என்பதும் மிகவும் மோசம்.
“பட்டினி, வேலையின்மை, பணவீக்கம், சுகாதாரப் பேரிடர் என பல பிரச்சினைகளை இந்தியா எதிர்கொண்டிருக்கும்போது, நாட்டின் பில்லியனர்கள் தங்களது வருவாயை பல மடங்கு பெருக்கிக் கொண்டிருக்கின்றனர்.
”அதேவேளையில், ஏழைகள் தங்களது வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் வாடி வருகின்றனர். இந்தியாவில் 2028ல் 19 கோடியாக இருந்த பசியால் வாடுவோரின் எண்ணிக்கையானது 2022-ல் 35 கோடியாக அதிகரித்துள்ளது,” என்கிறார் ஆக்ஸ்ஃபாம் இந்தியா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் பேஹர்.
“சூப்பர்-ரிச் ஆக இருக்கக் கூடிய பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதுதான் பொருளாதார சமத்துவமின்மையை ஓரளவு குறைக்கும் வழி,” என்கிறார் ஆக்ஸ்ஃபார்ம் இன்டர்நேஷனலின் நிர்வாக அதிகாரி கேப்ரில்லா பச்சர்.
அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி வரிகளை வெகுவாக குறைக்க வேண்டும். மாறாக, ஆடம்பரப் பொருட்களுக்கு வரிகளைக் கூட்ட வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
மில்லியனர்களும், மல்டி மில்லியனர்களும், பில்லியனர்களும் உள்ளடக்கிய 1 சதவீதத்தினரான பெரும் பணக்காரர்களுக்கு நிரந்தர அடிப்படையில் அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்றும் ஆக்ஸ்ஃபாம் பரிந்துரைக்கிறது.
குறிப்பாக, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதுதான் அடித்தட்டு மக்கள் மதிப்புடன் வாழ்வதற்கு வகை செய்யும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘2022 இந்திய பணக்காரர்களின் பட்டியல்’ - ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இவர்களின் சொத்து மதிப்பு என்ன?
Edited by Induja Raghunathan