தண்ணீர் இல்லாமல் கார்களைச் சுத்தப்படுத்தும் புதுமையான ஸ்ப்ரே!
36 வயதான இந்த தொழில்முனைவர் ‘கோ வாட்டர்லெஸ்’ என்ற புதிய நிறுவனம் தொடங்கி கார் வாஷ்கள் செய்கிறார்.
தாகத்தில் நீரின்றி தவிக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு துளி நீரும் தங்கத்தைக் காட்டிலும் அதிக மதிப்புடையதாகவே தோன்றும் என்பார்கள். நகரமயமாக்கல் காரணமாக நீர் வளம் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்திற்கு இந்த வரிகள் மிகவும் பொருத்தமானது.
அதேசமயம் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளால் இந்த சவாலை சமாளிப்பது சாத்தியமாகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் சர்மா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 36 வயதான இந்த தொழில்முனைவர் ‘கோ வாட்டர்லெஸ்’ (Go Waterless) என்கிற முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முயற்சியின் மூலம் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ளவர்களின் வீட்டிற்கே சென்று கார் வாஷ் செய்யப்படுகிறது.
நிதின்; தாவரம் சார்ந்த ஸ்ப்ரே ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது அதிக வழவழப்புத் தன்மை கொண்டது. இந்த ஸ்ப்ரே ஒரு துளி தண்ணீர்கூட இல்லாமல் வாகனங்களில் மேற்பரப்பில் படிந்துள்ள தூசுகளை அகற்றிவிடும்.
"வீடுகளில் கார்களை சுத்தப்படுத்தும்போது பைப் மூலம் நீர் பாய்ச்சுவதால் 80 முதல் 90 லிட்டர் தண்ணீர் வரை பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கெட் தண்ணீர் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட 40 லிட்டர் அளவாகும். வாகனங்கள் பழுதுபார்க்கும் மையத்தில் கிட்டத்தட்ட 200 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் 23 கோடி கார்கள் பயன்படுத்தப்படும் நிலையில் அதற்கேற்ப அவற்றை வாஷ் செய்வதற்கு தண்ணீரும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோ வாட்டர்லெஸ் மூலம் அதிகளவு நீர் பாதுகாக்கப்படும்,” என்று நிதின் சர்மா தெரிவித்துள்ளார்.
தற்போது கோ வாட்டர்லெஸ் குழுவில் 23 பேர் இணைந்துள்ளனர். சுமார் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சேவையளிகின்றனர்.
ஃப்ரான்சைஸ் மாதிரி மூலம் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து பலரைச் சென்றடைந்து தண்ணீரை சேமிக்க விரும்புகிறேன். சமீபத்தில் நாக்பூரில் செயல்படத் தொடங்கியுள்ளோம். புக்கிங் செய்வதை எளிதாக்க ஆண்ட்ராய் செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்,” என்றார் நிதின்.
தொடக்கம்
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதைக் கண்ட நிதினும் அவரது மனைவியும் கோ வாட்டர்லெஸ் அறிமுகப்படுத்தினார்கள். 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் Rewowlution Ventures Pvt Ltd என்கிற நிறுவனத்தின்கீழ் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
நிதின் ராஜஸ்தானில் உள்ள IASE-ல் பிபிஏ முடித்தார். பின்னர் அவரது அப்பாவின் ஆட்டோமொபைல் வணிகத்தில் பொறுப்பேற்றார். சத்தீஸ்கரில் ஒரு பழுதுபார்க்கும் பட்டறையை நிர்வகித்து பேட்டரி மற்றும் கார் சர்வீஸ் சேவைகளை வழங்கி வந்தார். ஒருமுறை கோடைகாலத்தில் போர்வெல்லில் தண்ணீர் இல்லமால் போனது.
“தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டோம். எங்கள் வாடிக்கையாளர்களின் கார்களை சுத்தம் செய்யமுடியவில்லை. வாடிக்கையாளர்களிடம் நிலைமையை எடுத்துரைத்து மன்னிப்பு கேட்டேன். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சூழலை சந்தித்த பிறகு இதற்கு தீர்வுகாண முடிவெடுத்தேன். இது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். ஒவ்வொரு முறை ஒரு வாகனத்தை சுத்தம் செய்யும்போதும் அதிகளவிலான தண்ணீர் வீணாவதை உணர்ந்தேன். அப்போதுதான் கோ வாட்டர்லெஸ் உருவாக்கும் எண்ணம் தோன்றியது,” என்று நிதின் நினைவுகூர்ந்தார்.
ஒவ்வொரு துளியும் விலைமதிப்பானது
நிதின் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாவரம் சார்ந்த லூப்ரிகண்ட் கொண்டு ஸ்ப்ரே தயாரிக்க விரும்பினார். 2017-ம் ஆண்டு இதற்காக சில கெமிக்கல் என்ஜினியர்களின் உதவியை பெற்றுக்கொண்டார். இதுகுறித்து ஓராண்டு தீவிர ஆய்வு மேற்கொண்ட பிறகு தண்ணீர் பயன்பாடு இல்லாமல் கார்களின் மேற்பரப்பில் இருந்து தூசிகளை அகற்றும் ஸ்ப்ரேவை உருவாக்கினார்.
மும்பையில் சொந்தமாக நிறுவனம் தொடங்க நிதின் தனது மனைவி மற்றும் குடுபத்தினரின் உதவியுடன் 10 லட்ச ரூபாய் திரட்டினார். பின்னர் கோ வாட்டர்லெஸ் முயற்சியையும் அதில் இணைத்துக்கொண்டார்.
இந்த ஸ்ப்ரே தயாரிக்கத் தேவையான பொருட்கள் மற்றும் தாவரங்கள் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு காரை சுத்தப்படுத்தவும் சுமார் 100 மி.லி ஸ்ப்ரே தேவைப்படும். இதுவரை 1,000 லிட்டர் ஸ்ப்ரே தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்ப்ரே சுற்றுச்சூழலுக்கு உகந்தது. அத்துடன் இதைப் பயன்படுத்துவதால் வாகனத்தின் மேற்பரப்புகள் மற்றும் பெயிண்ட் அடுக்குகள் துரு பிடித்து பழுதாகாமல் இருக்கும்.
“முக்கியமாகத் தண்ணீர் பயன்பாடு இல்லாததால் மக்கள் தங்களது கார்களை சுத்தப்படுத்தும் முறையில் இது புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்கிறார் நிதின்.
“என்னுடைய திட்டம் எளிமையானது. முடிந்தவரை அதிகம் பேரை சென்றடைய விரும்புகிறேன். எனவே காரை சுத்தப்படுத்த ஆன்லைனில் புக் செய்யும் வகையில் நான் ஒரு வலைதளத்தை அறிமுகப்படுத்தினேன். புக்கிங் உறுதிபடுத்தப்பட்ட பிறகு பயிற்சிபெற்ற நபர் அந்தப் பகுதிக்குச் சென்று எங்களது பிரத்யேக ஸ்ப்ரேவைப் பயன்படுத்தி வாகனத்தை சுத்தப்படுத்துவார். இதிலுள்ள வழவழப்புத் தன்மை தூசியை எளிதாக உறிஞ்சிவிடும்,” என்றார் நிதின்.
கோ வாட்டர்லெஸ் காரை முழுமையாக சுத்தப்படுத்த 449 ரூபாயும் வெளிப்பறத்தை சுத்தப்படுத்த 249 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறது. இந்த இரு சேவைகளையும் விளம்பரப்படுத்தும் வகையில் தற்போது சலுகைகள் வழங்கப்படுகிறது.
நீர்வள பாதுகாப்பு
கடந்த சில மாதங்களாக 35 குடியிருப்புகளும் சமூகங்களும் கோ வாட்டர்லெஸ் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. நாக்பூரில் உள்ள கஜானந்த் அபார்ட்மெண்ட்ஸும் இதில் அடங்கும். சொசைட்டி செயலாளரான ராகேஷ் சிங் கூறும்போது,
“நாக்பூரில் சில காலமாகவே தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. நீர்வளத்தை முறையாகப் பயன்படுத்தும் பொறுப்பு மக்களிடமே உள்ளது. எனவே தண்ணீரை சேமிக்க அனைவரும் பொறுப்பேற்கவேண்டும் என்று நினைத்தேன். தண்ணீர் பயன்பாடின்றி காரை சுத்தப்படுத்தும் சேவை குறித்து முதலில் கேள்விப்பட்டபோது நான் நம்பவில்லை. ஆனால் செயல்முறை விளக்கத்தைப் பார்த்தபோது வியப்படைந்தேன். இந்த முயற்சியை பெரியளவில் செயல்படுத்தினால் அதிக தண்ணீரை சேமிக்கமுடியும் என்பதில் சந்தேகமில்லை,” என்றார்.
நகரமயமாக்கல் காரணமாக நீர் வளம் குறைந்து வரும் நிலையில் கோ வாட்டர்லெஸ் போன்ற முயற்சிகள் நீர்வளத்தைப் பாதுகாப்பதில் நிச்சயம் பங்களிக்கும்.
2020-ம் ஆண்டில் பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிடும் என்று நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் சுமார் 600 மில்லியன் பேர் நீர் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்படுவதாகவும் 2018-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் நீர் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
முறையற்ற நீர் பயன்பாடு காரணமாக அதிகளவு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. இதுவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு தனிநபரும் வீட்டில் தினமும் சராசரியாக 135 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துவதாக மதிப்பிடப்படுகிறது. கார் உள்ளிட்ட வாகனங்களை சுத்தப்படுத்த இதைக்காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா