பாலாறு குறுக்கே ஐஐடி வழிகாட்டுதலுடன் புதுமையான தடுப்பு அணை!
உபரி நீரை சேமிக்க வழி செய்யும், இந்த பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை!
சென்னை ஐஐடி-யைச்சேர்ந்த ஆய்வாளர்கள், பாலாறு நடுவே வடிவமைத்து, தங்கள் மேற்பார்வையின் கீழ் அமைத்துக் கொடுத்த தடுப்பணை, உபரி நீர் சேமிக்கப்படுவதை அதிகரித்துள்ளது.
ஐஐடி ஆய்வாளர்களின் புதுமையான வடிவமைப்புத் திட்டக் கட்டுமானச் செலவில் ரூ.49.5 கோடி சேமிக்கப்படவும் வழி செய்துள்ளது. கல்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் அட்டமிக் பவர் ஸ்டேஷன் அமைப்பின் சமூக வர்த்தகஒ பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
வழக்கமான தடுப்பணை அமைக்க ரூ.82 கோடி அளவில் செலவாகும் மற்றும் கட்டி முடிக்க ஓராண்டு ஆகும் எனும் நிலையில் இந்த அணை ரூ.32.5 கோடியில் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
2019ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய பணிகள் ஆக்ஸ்ட் மாதம் பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தடுப்பணைக்கான ஆழமான அடித்தளமாக, டைப்ராம் சுவரை கொண்டு இந்த தனித்தன்மை வாய்ந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் கடல் நீர் அரிப்புக்கு எதிரான தன்மையை அளிக்கிறது,” என்று ஐஐடி குழுவுக்கு தலைமை வகித்த, பேராசிரியர் ஆர்.சுந்தரவடிவேலு கூறியுள்ளார்.
தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் பாயும் பாலாறு தமிழகத்தில் பெரும்பகுதியில் பாய்கிறது.
சென்னை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை பாலாறு நிறைவேற்றுகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இந்த ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு அண்மைக் காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் நெருக்கடியை உண்டாக்கிய நிலையில், நதியின் வால் பகுதியில் தடுப்பணைக் கட்ட தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர் அதிகரிக்க வழி செய்வதே தடுப்பணையின் நோக்கமாகும். இதற்காக, மாநில பொதுப்பணித்துறை ஐஐடி கடல்சார் பொறியியல் பேராசிரியர் சுந்தரவடிவேலுவை அணுகியது. குறைந்த செலவில் புதுமையான முறையில் தடுப்பணைக்கான திட்டத்தை அவர் வகுத்துக் கொடுத்தார். மழைக்காலத்தில் உபரி நீரை சேமித்து, நிலத்தடி நீர் அதிகரிக்கும் வகையில் தடுப்பணை அமைத்துத் தரப்பட்டுள்ளது.
கடல் நீர் உள்ளே புகுவது தடுக்கப்படுவது, அணையின் மேல் பகுதியில் நீர்த்தேக்கம் உருவாக்குவது, உபரி நீர் குறைந்த வேகத்தில் பாயச்செய்வது ஆகிய தனித்தன்மையான அம்சங்களை இந்த அணை கொண்டுள்ளது. இதற்கேற்ப புதுமையான முறையில் அணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு : சைபர்சிம்மன்