சமூக நலனில் ஈடுபட கார்ப்பரேட் பணியைத் துறந்த ராதா அரக்கல்!
“உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிராண்டுகள் லாபகரமாக வளர்ச்சியடைய உதவியுள்ளேன். தற்போது என்ஜிஓ-க்களின் வளர்ச்சிக்கு என்னுடைய கற்றலையும் திறனையும் பயன்படுத்தி வருகிறேன்.”
கல்லூரி பட்டதாரிகள் பலருக்கும் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலை, அதிக சலுகைகள், வசதியான வாழ்க்கை போன்ற பொதுவான கனவுகள் இருக்கும். ஆனால் சிலர் இதிலிருந்து மாறுபட்டு இத்தகைய வசதிகளை மற்றவர்களுக்கு வழங்க விரும்புவார்கள்.
ராதா அரக்கல் பிராண்ட்ஸ்கேப்ஸ் வேர்ல்ட்வைட் நிறுவனத்தின் கன்சல்டிங் பார்ட்னராக இருந்தார். இவர் வசதியான கார்ப்பரேட் பணியை விட்டு விலகி சமூக நலனில் பங்களிக்க விரும்பினார். 2018ம் ஆண்டு முதல் ராதா சமூக மேம்பாடு சார்ந்து பகுதி நேர ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
தற்போது மேற்குவங்கத்தில் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தின் ஹிங்கல்கனியில் 120 குழந்தைகள் கொண்ட ஸ்வப்னோ புரன் (Swapno puron) நலச் சங்கத்தின் ஆங்கில வழி பள்ளியில் ஆலோசகராக உள்ளார்.
“உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிராண்டுகள் லாபகரமாக வளர்ச்சியடைய உதவியுள்ளேன். தற்போது என்ஜிஓ-க்களின் வளர்ச்சிக்கு என்னுடைய கற்றலையும் திறனையும் பயன்படுத்தி வருகிறேன்,” என்றார். ராதா
கடந்த ஆண்டு ராதா சில ஆலோசனைப் பணிகளில் ஈடுபட்டார். சாத்வா கன்சல்டிங் உடன் இணைந்து Everyday Giving ஆராய்ச்சி பிராஜெக்ட் ஒன்றில் ஈடுபட்டார். ஃபெலோ ரெக்ரூட்மெண்ட் கம்யூனிகேஷன்ஸ் தொடர்பாக ’டீச் ஃபார் இந்தியா’ நிறுவனத்திற்கு உதவியுள்ளார். அத்துடன் சிறியளவில் செயல்படும் என்ஜிஓ-க்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
திருப்புமுனை
25 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ள ராதா இயற்பியல் பிரிவில் பி.எஸ்சி பட்டப்படிப்பும் மார்கெட்டிங் பிரிவில் எம்பிஏ-வும் முடித்துள்ளார்.
இவர் தனது பணி வாழ்க்கையின் முதல் பதினைந்து ஆண்டுகள் விளம்பரங்கள் பிரிவில் செயல்பட்டார். ஊடக மூலோபாயம், பிராண்ட் மூலோபாயம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார். இந்த சமயத்தில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு பிராண்டுகளின் பிரச்சாரங்களைக் கையாண்டுள்ளார். இந்தியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் உலகளவில் செயல்படும் ஐந்து விளம்பர ஏஜென்சிக்களுடன் செயல்பட்டுள்ளார்.
அடுத்த பத்தாண்டுகள் உலகளாவிய மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் சந்தை ஆய்வில் செயல்பட்டார். இதில் கோகோ கோலா, யூனிலிவர் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு சேவையளித்தார். 2018-ம் ஆண்டு மே மாதம் பணியை விட்டு விலக முடிவெடுத்தார்.
“அடுத்து என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை ஒரு மழை நாளில் என் கணவர் ஜிம்மில் இருந்து வீடு திரும்பினார். எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் குறித்து எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சங்கீதா மேனன் (ILSS Leadership Programme Cohort 1) தன்னுடன் உரையாடியதாக என்னிடம் கூறினார்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அதன் பிறகு ராதா உடனடியாக ILSS ப்ரோக்ராம் 2018 ஆகஸ்ட் எடிஷனுக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகக் கட்டுரைகள் சிலவற்றை எழுதினார். இதுவே அவருக்கு அக்கறை இருக்கும் பகுதி குறித்து சிந்திக்கத் தூண்டியது.
“சமூக நலன் சார்ந்து செயல்படுவதே எனது விருப்பமாக இருந்தது,” என்றார்.
துவக்கம்
அப்போதிருந்து ராதா சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். டீச் ஃபார் இந்தியா உடன் சிறிது காலம் ஆலோசனைப் பணியில் ஈடுபட்டார். இங்கு TFI ஃபேலோஷிப் ரெக்ரூட்மெண்ட் தொடர்பான தகவல் தொடர்பு உத்திகளை தெளிவுப்படுத்தினார். முறையான டிஜிட்டல் ஏஜென்சி இணையும் வரை தகவல் தொடர்பு குழு இடைக்கால பிரச்சாரம் மேற்கொள்ளவும் வழிகாட்டியுள்ளார். பிரச்சாரம் பயனுள்ளதாக அமைந்தது. அந்த காலகட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் கூடுதலாகவே பணியிலமர்த்தப்பட்டது.
சாபர்மதியில் நடைபெற்ற குளோபல் ஆக்ஷன் அகெயின்ஸ்ட் பாவர்டி (GAP) மாநாட்டில் சிறியளவில் செயல்படும் சில என்ஜிஓ-க்களை ராதா சந்தித்தார். இந்த என்ஜிஓ-க்கள் தங்களது சமூகங்களில் மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தன. இவர்களது பணியைக் கட்டு உந்துதல் பெற்ற ராதா அடிமட்ட நிலையில் செயல்படத் தீர்மானித்தார்.
ராதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தர்பன் கிராமத்தில் உள்ள ஸ்வப்னோ புரன் வெல்ஃபேர் சொசைட்டி பள்ளியைப் பார்வையிட்டார். அப்போதிருந்து இங்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
ராதா தற்சமயம் ஸ்வப்னோ புரன் வெல்ஃபேர் சொசைட்டிக்கு ஆதரவளித்து வழிகாட்டி வருகிறார். இந்த என்ஜிஓ சிறியளவி செயல்பட்டாலும் மிகப்பெரிய லட்சியங்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு 120 குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்றனர்.
மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு கட்டப்பட்ட பகுதியில் செயல்படுகிறது. 750 குழந்தைகளுடன் பன்னிரண்டாம் வகுப்பு வரை 750 விரிவடைய விரும்புகிறது. அத்துடன் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் இணையவும் விரும்புகிறது. இதற்காக இந்தப் பள்ளி நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. கட்டமைப்பிற்கும் விரிவாக்கப் பணிகளுக்கும் நிதி உயர்த்த ராதா உதவி வருகிறார். பள்ளி குறித்து அவர் கூறும்போது,
“என்னுடைய நாட்டில் வறுமை ஒழிக்கப்படவேண்டுமானால் ஏதோ ஒரு வகையில் என்னுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும். இதற்கு வறுமை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்து சிறப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதைத் தவிர வேறு சிறந்த வழி எதுவாக இருக்கமுடியும்? இந்தக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். ஆங்கில வழியில் கல்வி கற்றால் இவர்களது எதிர்காலம் பன்மடங்கு சிறப்பாக இருக்கும் என்பது இவர்களது பெற்றோர்களின் நம்பிக்கை. தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குத் தரமான கல்வியைக் கொண்டு சேர்ப்பதே ஸ்வப்னோ புரன் கனவு.
ராதா பள்ளிக்கான நிதி உயர்த்த நடுத்தர அளவில் செயல்படும் பல்வேறு வணிகங்களையும் மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள கொடையாளர்களையும் சந்தித்தார். தன்னுடைய தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவும் தான் உத்சவ் நிகழ்வு மூலமாகவும் கணிசமான தொகையை நிதியாக உயர்த்தினார்.
நிதி உயர்த்தும் பணி மட்டுமல்லாது என்ஜிஓ பணியாளர்களையும் வழிநடத்துகிறார். அத்துடன் கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் அமைப்பு ஒழுங்குபடுத்துதல், என்ஜிஓ வலைதளம் புதுப்பிக்கும் பணியில் உதவுதல், தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பங்களித்து வருகிறார்.
நகர்புறங்களில் உள்ள சிறந்த ஆசிரியர்களை தொழில்நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டல் வாயிலாக கிராமப்புறப் பள்ளிகளுடன் இணைப்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் கிராமப்புறங்களில் தொடர்ந்து பல நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே டாடா ஸ்டீல் கொல்கத்தா 25K ரன் நிகழ்வில் பங்கேற்கையில் சூரிய சக்தி ஜெனரேட்டர் வாங்குவதற்கான நிதி திரட்ட உள்ளது.
பள்ளி கட்டிடத்திற்காக நிதி அளிக்க ஒரு கொடையாளர் முன்வந்துள்ளார்.
இந்தச் சிறிய கிராமத்தின் கனவு நனவாக இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அடிமட்ட நிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறிய மற்றும் பெரியளவிலான என்ஜிஓ-க்களை ராதா தொடர்ந்து சந்தித்து வருகிறார். நகரங்களில் உள்ள வளங்களை பின் தங்கிய சமூகங்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட விரும்புகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில்: ஸ்ரீவித்யா