அவமானம்; 6 வருட புறக்கணிப்பு; எதிர்கால அச்சம்; 7 சிக்ஸால் உலகம் அறிந்த டெவாட்டியா!
பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராகுல் டெவாட்டியாவின் ஆட்டம் கண்டு கிரிக்கெட் உலகமே ஆடிப்போய் உள்ளது. யார் இந்த ராகுல் டேவாட்டியா?
இமாலய இலக்கை துரத்தி ஆடுகிறது ஒரு அணி. குறைந்த பட்சம் ஓவருக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல். முதல் 10 ஓவர்கள் நம்பிக்கையான ஆட்டமே. ஆனால், நம்பிக்கை ஒளி சற்றே மங்கி ஒளிக்க, ஆட்டம் காணுகிறது களம். காரணம் அனுபவம் வாய்ந்த வீரர் இருந்த சூழலில், களமிறக்கப்பட்ட புதிய வீரன். ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே அவன் மீது வெறுப்பை உமிழ்கிறது. நாற்புறமும் நெகட்டிவ் வைப்ரேஷன்.
ட்விட்டர் உலகமோ விமர்சனங்களால் வசைபாடியது அவனை. தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய சூழல். கேலிகளும், வசைகளும் சமூக ஊடங்களில் துரத்த அதற்கெல்லாம் முற்றுபுள்ளியிட நினைத்தான் அவன். அடுத்த ஓவரை அவன் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத ஓவராக மாற்றினான். ஏன், கிரிக்கெட் ரசிகர்களால் அவர்கள்தம் வாழ்வில் காணத் தவறவிடகூடாத ஒரு ஓவர். ஏனெனில், அந்த ஓவரில் அவனெடுத்த ரன்கள் & 6,6,6,6,0,6. இரு ஓவருக்கு முன் வெறுப்பை உமிழ்ந்தவர்கள் வாயாலே, புகழப்பட்டு கொண்டாடப்பட்டான் அவன்! அவன் பெயர் ராகுல் டெவாட்டியா.
ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கும், ராஜஸ்தான் ராயஸ்சுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் நிகழ்ந்தது டெவாட்டியாவின் மேஜிக். ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 9 ஓவர்களில் 100 ரன்கள் சேர்த்திருந்து. ஸ்டீவ் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் ராபின் உத்தப்பா களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால், களத்தில் இறக்கப்பட்டார் ராகுல் டெவாட்டியா.
ராகுலோ பந்தை அடிக்கவே திணறினார். எதிரில் சஞ்சு சாம்சனுக்கு அழுத்தம் ஏறிக்கொண்டே சென்றது. தேவைப்படும் ரன் ரேட் ஸ்மித் அவுட் ஆகும் போது 10ல் இருந்தது. ராகுலின் திணறலால் அது 16க்கும் மேல் சென்றது. ஏனெனில், 18 பந்துகளில் ராகுல் எடுத்த ரன்கள் இது தான் - 0, 1, 0, 0, 0, 1, 1, 1, 1, 0, 0, 0, 0, 0, 1, 1, 1, 0, 0. அப்போது 16வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்தார் சஞ்சு சாம்சன். மூன்றாவது பந்தை தரையோடு அடித்த போதும் சிங்கிள் ரன் ஓட மறுத்து விட்டார் சாம்சன்.
ராகுல் பந்தை அடிக்கவே திணறி வருவதால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்துவிட்டார். ராகுல் டெவாட்டியா முகம் அப்போது அவமானத்தால் இறுகியது. எதிர்காலம் குறித்த அச்சம், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், அவர் மீது எழுப்பப்பட்ட விமர்சனத்துடன் அவமானமும் இணைந்து கொண்டது.
சாம்சன் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். 3 ஓவரில் 51 ரன்கள் தேவை என்ற நிலை. 18வது ஓவரை சந்தித்தார் ராகுல் டெவாட்டியா.
அடுத்தடுத்து போடப்பட்ட பந்துகள் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கின. 6, 0, 2, 1, 6, 6, 6, 6, 0, 6, 6, 0 என்று மொத்தமாக சிக்ஸர் மழை பொழிந்தார். சிக்ஸ் மூலம் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். போட்டி ராஜஸ்தான் வசம் திரும்பியது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராகுல் டெவாட்டியாவும்...!
டெவாட்டியாவின் ஐபிஎல் ஹிஸ்டரி!
லெக் ஸ்பின் ஆல் ரவுண்டர் ராகுல் டெவாட்டியா. ஹரியானா கிரிக்கெட் அணியே பெரியளவில் வாய்ப்பு அளிக்கவில்லை. முதல் தர போட்டிகளில் இவர் 7 போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். 2014ம் ஆண்டு ரஞ்சி போட்டிகளில் ஹரியானா அணிக்காக விளையாடினார். அதன்பின் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் ஹரியானா அணிக்காக விளையாடினார். முதல் தர போட்டிகளில் இவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 91 தான். இதனால் இவரை இந்திய அணியின் தேர்வுக் குழுவில் பெரிய அளவில் யாரும் கவனிக்கவில்லை.
ஐபிஎல் போட்டிகளிலும் இவர் இதுவரை பெரிய அளவில் வாய்ப்புகளை பெறவில்லை. 2014ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 3 போட்டிகளில் மட்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2017ல் இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அங்கும் அவருக்கு 3 போட்டிகளில் விளையாட மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணிக்காக 2018ல் இவர் விளையாடினார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 2019ல் இவர் மீண்டும் ராஜஸ்தான் வந்தார்.
ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபிப்பதற்காக 6 ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளார். பேராட்டம் இத்துடன் நிறைவடைந்துவிட்டது. இனி, ராகுல் டெவாட்டியா யார் என்று கேட்கும் நிலை முடிவடைந்துவிட்டது.
கிரிக்கெட் அவரது முதல் தேர்வல்ல!
சிஹி என்பது ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். அது தான் டெவாட்டியாவின் சொந்த ஊர். கிரிக்கெட் ஒருபோதும் டெவாட்டியாவின் முதல் தேர்வாக இருக்கவில்லை. அவரின் தாத்தா ஒரு விவசாயி மற்றும் ஒரு பயில்வான். (மல்யுத்த வீரர்) டெவாட்டியாவின் மாமாவோ, தேசிய அளிவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்ற ஒரு ஹாக்கிவீரர். அவரை போன்று தேசத்திற்காக விளையாடியுள்ள சில ஹாக்கி வீரர்களும் சிஹியில் உள்ளனர்.
கிராமமெங்கும், ஹாக்கி மட்டைகளுடன் இளைஞர்கள் வலம்வந்தாலும், டெவாட்டியாவினது கண்கள் கிரிக்கெட் மட்டையை தேடியுள்ளது. சிறு வயதிலே கிரிக்கெட் மீது ஏற்பட்டது அலாதி ஆர்வம்.
ஒன்பது வயதாக இருந்தபோது, விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்காக ஹரியானா அரசாங்கத்தால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு உதவித்தொகையான ‘ஹரியானா நர்சரி' திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு 12 வயதாக இருந்தபோது, அவரது தந்தை டெவாட்டியாவை ஃபரிதாபாத்தில் உள்ள முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் விஜய் யாதவின் அகாடமிக்கு அழைத்துச் சென்றார்.
‘‘அப்போ, அவர் ஒரு சிறிய பையன். ராகுல் கிரிக்கெட்டில் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதில் அவரை விட, அவரது குடும்பத்தினர் உற்சாகமாக இருந்தனர். அதில், ராகுல் பெயரெடுப்பதோடு மட்டுமல்ல, முழு கிராமத்தின் பெயரும் அடங்கியிருப்பதாக அவருடைய தந்தை என்னிடம் கூறினார்'' என்று விஜய் யாதவ் நினைவு கூர்ந்தார்.
ராகுல் தந்தையின் விருப்பமும் நிறைவேறியது. சீக்கிரமே, 14 வயதினருக்குட்பட்ட ஹரியானா அணியில் நுழைந்தார். பின்னர், 16, 19 மற்றும் 22 வயதுக்குட்பட்ட அணிகளைப் பிரதிநிதிப்படுத்தும் விளையாடினார். சில தேசிய கிரிக்கெட் அகாடமி முகாம்களுக்கும் தேர்வு செய்யப்பட்டார். கிரிக்கெட் ஃபீல்டிலுள்ள கடுமையான யதார்த்தத்தை உணரும் வரை வாழ்க்கை நன்றாக இருந்துள்ளது.
கிரிக்கெட்டை கைவிட எண்ணிய டெவாட்டியா...
ஹரியானா மாநில அணியில் இரண்டு உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களிருந்த நிலையில், ராகுல் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், அது ஒரு நீண்ட காத்திருப்பாகயிருக்கும் என்பதை தாமதமாகவே அவர் உணர்ந்தார். அக்கடினமான காலங்களை நினைவு கூர்ந்த அரசுப்பள்ளி விளையாட்டு ஆசிரியரான டெவாட்டியாவின் மாமா தரம்பீர் கூறுகையில்,
‘‘இதயமும் மோசமான காலங்களில் அழுத்தத்தை உணர்கிறது. அச்சமயத்தில், ராகுல் கிரிக்கெட்டை கைவிடத் தயாராக இருந்தார். ஆனால், அவர் தொடர வேண்டும் என்றும் குடும்பத்தினர் உணர்ந்தனர். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தது'' என்றார்.
தொடர்ந்து பேசிய தரம்பீர் தற்போது நிகழ்ந்த மேஜிக் குறித்து சிலிர்த்தார். வர்ணனையாளர்கள் அவரது மருமகனை பற்றி பேசும் தொனி மாறும் என்றும், டெவாட்டியா அவரது மட்டையால் மீண்டும் அடிப்பார் என்று அவர் உறுதியாக நம்பியதாக கூறினார்.
‘‘ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் நேர் எதிர்வினை இருப்பதாக ‘நியூட்டன்ஸ் லா' கூறுகிறது. ராகுலின் எதிர்வினை விரைவில் வரும் என்று எனக்குத் தெரியும்.
அவரது வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற சூழல்களை எதிர் கொண்டுள்ளார். கடைசி ஐந்து ஓவர்களில் ரன்கள் எடுத்துள்ளார். எனவே, நிலைமை அவருக்கு புதியதல்ல. பெரும்பாலான நேரங்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும், அவர் வெற்றி பெற்ற பின்னரே பெவிலியனுக்கு திரும்ப வேண்டியிருந்தது. இல்லையெனில், அவர் அடுத்த 12 ஆட்டங்களுக்கு பெஞ்சில் உட்கார வேண்டியிருக்கும். ராகுல் அழுத்தத்திற்கு அடிபணியக்கூடியவர் அல்ல'' என்று தரம்பீர் பெருமையுடன் பகிர்ந்தார்.
பயிற்சியாளரின் நம்பிக்கை!
பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வீரருமான விஜய் யாதவ், ராகுல் மீது நம்பிக்கையுடன் இருக்க வேறு காரணங்கள் இருந்தன. ஷார்ஜா மைதானத்தில் நிகழ்ந்த ஏழு சிக்ஸ்களுக்கு முன்புவரை, டெவாட்டியாவை ஒரு பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உலகம் பார்த்திருக்கலாம். ஆனால், அவரது பேட்டிங் திறன் கவனிக்கப்பட வேண்டிய வீரராக மாற்றும் என்று பயிற்சியாளராக தனக்கு தெரியும் என்று கூறுகிறார்.
‘‘டெவாட்டியா உடைய பேட்டிங் தான் அவரை உயர்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே சொன்னேன். அவரது பேட் வேகம் மற்றும் பேக்-லிப்ட் ஆகியவை பிரையன் லாராவுடையது போன்றது. அந்த பேட் வேகம் பந்தை வேகமாக அனுப்ப அவருக்கு உதவுகிறது,” என்கிறார் விஜய் யாதவ். பேட்டிங்கில் மட்டுமல்ல, ராகுலின் மன உறுதியின் ரசிகராம் விஜய் யாதவ்.
‘‘அவர் மற்றவர்களை விட அழுத்தத்தை சிறப்பாக கையாளும் திறன் கொண்டவர். கால் முறிந்த போதிலும் அவர் வருமான வரி அணிக்காக விளையாடிய ஒரு விளையாட்டு எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. அவர் 60 ஒற்றை பந்துகளில் ஒரு சதம் அடித்தார். போட்டியில் ரன்களின் எண்ணிக்கையை விட, அவரின் மனநிலையே எனக்கு தனித்து தெரிந்தது. அவர் தனது வலியை ஒதுக்கி வைத்துவிட்டு விளையாடினார்,''என்று அவர் நினைவு கூர்ந்தார்.
பயிற்சியாளர் விஜய் யாதவ்வின் கூற்றுடன், ராகுலின் டுவிட்டர் பதிவுகளை தொடர்புப்படுத்தினால், ராகுலின் கடினமான நாட்களும், அவரது மனவலிமையையும் அறிந்து கொள்ள முடிகிறது.
2017ம் ஆண்டு அவர் பதிவிட்டுள்ள டுவீட்களில்,
‘‘அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி என்றும் சிந்திக்காதே. மக்கள் எப்போதும் எதிர்மறையானவர்கள். அவர்களுடைய கூற்றுகள் உன்னை தொந்தரவு செய்யவிட்டு விடாதே...''
‘‘ நம்பிக்கையுடன் இருங்கள். வாழ்க்கையில் மிக அற்புதமான விஷயங்கள் நீங்கள் முடியாதென்று ஒரு விஷயத்தை கைவிடவிருக்கும் தருணத்தில் சரியாக நடக்கும்,'' என்று பதிவிட்டுள்ளார்.
27 வயதுடன் டெவாட்டியவிற்கான நேரம் முடிந்துவிடும் என்று குடும்பத்தார் அறிந்தனர். அவருக்கான பெயரை உருவாக்க அவர் ஒரு சிறப்பு பெர்ஃபாமன்சை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தனர். ஆகஸ்ட் 17ம் தேதி அன்று ராகுலுடனான தனது உரையாடலை குறித்து கூறிய தரம்பீர்,
‘‘இது உன்னுடைய உச்ச நேரம். உனக்கான வாய்ப்பு கிடைக்கும் நாள் நீ உன்னை நிரூபித்தே ஆக வேண்டும். இதற்குப் பிறகு உண்மையான வாய்ப்பு இல்லை. அதிர்ஷ்டவசமாக, அவர் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டார்.
என் மகன் நேற்று வரை ராகுலுக்கு இன்ஸ்டாகிராமில் 22,000 பின்தொடர்பவர்கள் இருந்ததாகவும், இப்போது அது 75,000 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறினான். நேற்று வரை, எல்லோரும் ராகுல் டெவாட்டியா யார் என்று கேட்டனர், இன்று உலகம் முழுவதும் அவரை அறிவார்கள். மாறிவிட்டது. ஒரு ஓவரில் மாற்றப்பட்டுவிட்டது, என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தார் அவர்.
‘யாருக்குள் என்ன திறமையிருக்கிறது என்று அறியாமல் விமர்சனங்களை வைப்பவர்களே, இனி நீங்கள் அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். எங்களுக்கான நேரத்தில் எங்களை நாங்கள் நிரூபித்து கொள்வோம்' என்று அமைதியுடன் காத்திருக்கும் எண்ணிலடங்கா ராகுல்களின் வெற்றியே இது!
தகவல் உதவி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்