இந்தியாவில் சூரிய சக்தியால் இயங்கும் குறைந்த விலை ஓட்டுனரில்லா பேருந்து அறிமுகம்!
லவ்லி ப்ரொஃபஷனல் பல்கலைக்கழக மாணவர்கள் 12 மாத காலத்தில் 6 லட்ச ரூபாய் மதிப்புடைய, சூரிய சக்தியில் இயங்கும் ஓட்டுனரில்லா பேருந்தை உருவாக்கியுள்ளனர்.
நாட்டில் மாசின் அளவு அபாயகரமான அளவு அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான தேவை கட்டாயமாகிறது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண 300 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று இந்தியாவின் முதல் ஓட்டுனரில்லா பேருந்தை உருவாக்கியுள்ளது. மலிவு விலை கொண்ட இந்தப் பேருந்து சூரிய சக்தியில் இயங்கக் கூடியதாகும். இந்தப் பேருந்து பஞ்சாபின் ஜலந்தரில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸ் (INC) 106-வது பதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் துவக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க இந்தப் பேருந்து பயன்படுத்தப்பட்டது.
லவ்லி ப்ரொஃபஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் திட்டத்த்தில் பங்களித்ததாக ’ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.
இந்தத் திட்டம் நிறைவடைய கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆனது. இந்த மாணவர்களுக்கு அவர்களது பேராசிரியர்கள் உதவி வழிகாட்டினர்.
10 முதல் 30 பேர் அமரும் வகையில் இருக்கை வசதி கொண்ட இந்தப் பேருந்து 30 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ. வரை செல்லும். சூரிய சக்தி வாயிலாக உற்பத்தியாகும் ஆற்றலைக் கொண்டு இயங்கும் இந்தப் பேருந்து எலக்ட்ரிக் மோட்டர் கொண்டும் இயங்கக்கூடியதாகும்.
இவ்வாறு இருவேறு ஆற்றலைக் கொண்டு இயங்கும் அம்சம் மட்டுமல்லாது இந்தப் பேருந்தில் ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகிறது. 10 மீட்டர் தொலைவு ஆரத்திற்குள் இதைக் கட்டுப்படுத்தலாம்.
அல்ட்ராசோனிக் மற்றும் இன்ஃப்ராரெட் உணர்கருவிகளை ஒருங்கிணைத்து இந்தப் பேருந்து வயர்லெஸ் சிக்னல்களைக் கண்டறியும். இதுவே ஓட்டுனரின் அவசியமின்றி இந்தப் பேருந்து இயங்க உதவுகிறது. எனவே குறைவான வேகத்துடன் இயங்கக்கூடிய மாசில்லா வாகனங்களின் தேவையுள்ள விமான நிலையம், தொழில்துறை வளாகங்கள் போன்றவற்றிற்கு இந்தப் பேருந்தின் தொழில்நுட்பம் பொருத்தமானதாக அமையும் என ’இண்டியா டுடே’ தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் இந்தப் பேருந்து வணிகரீதியாக சந்தையில் இயங்கலாம் என்றும் மிகக்குறைவான விலையாக 6 லட்ச ரூபாயில் கிடைக்கும் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கட்டுரை : THINK CHANGE INDIA